ஞாயிறு, 28 ஆகஸ்ட், 2016

விஷாலின் ‘நாற்காலி ஆசை’க்கு கிடைத்த சூடு!

மின்னம்பலம்.காம் : இந்தக் கட்டுரை எழுதப்பட்டுக் கொண்டிருந்தபோது டி.வி-யில் ‘கண்ணதாசன் ஹிட்ஸ்’ ஓடிக்கொண்டிருந்தது. ஒரு நாளில் எத்தனையோ முறை திரையிடப்படும் இந்த பாடல்கள், அனைத்து டி.வி-க்களாலும் முறையான உரிமை வாங்கப்பட்டனவா? இவற்றின் ராயல்டி தொகை இதனை உருவாக்கியவர்களுக்குப் போய் சேருகிறதா? இதையெல்லாம் தட்டிக்கேட்க விஷால் போன்ற ஒருவர் வர மாட்டாரா? என்ற கேள்விகளினூடே பயணித்துக்கொண்டே, அதிக நேரமாகிவிட்டதைக் கவனிக்காமல், அதன் பிறகு எழுதப்பட்டது இந்தக் கட்டுரை.
கேமிராவைத் திருப்பினால் அங்கே நிற்பவர் நடிகர் விஷால். அதாவது, நடிகர் சங்கப் பொறுப்பாளர் விஷால். வருங்காலத் தயாரிப்பாளர் சங்க நிர்வாகி விஷால் என்றுகூட சொல்லலாம். ஒரே பேட்டியில் தமிழ் திரையுலகத்தையே அதிர வைத்தவர் விஷால். அவரையே இப்போது அதிர்ந்து அமர வைத்திருக்கிறது கோலிவுட். விஷால் என்ன செய்தார்? நடிகர் சங்கத்தைக் கைப்பற்றியது போல, தயாரிப்பாளர் சங்கத்தையும் கைப்பற்ற வேண்டும் என்று சொன்னாரே… அது போதாதா?


நாசர், பொன்வண்ணன் ஆகியோரின் வழிகாட்டுதலின்படி நடிகர் சங்கத்தை நிர்வாகிக்கப் போவதாக ஒரு முன்னெடுப்பு நடத்தியதை தமிழக மக்கள் அனைவரும் ஆதரித்தனர். அதேபோல, தயாரிப்பாளர் சங்கத்தையும் கைப்பற்ற வேண்டிய நிலை ஏற்பட்டுவிட்டது என்று சொன்னது, திரையுலகத்தில் விஷாலின் மீது அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது.
ஆமாம்... கடைசியா விஷால் ஹிட் கொடுத்த படம் எது? இரண்டு வருஷத்துக்கு முன்பு வந்த ‘பூஜை’. இது போன்ற கேள்வியும் பதிலும் வலம் வருவதுடன், ‘தோல்வியடையாமல் ஒரு படத்தின் கதையைத் தேர்ந்தெடுத்து நடியுங்க விஷால்’ என எதிர்ப்புகளும் கிளம்பியிருக்கின்றன. இவை யாவும், அத்தனை பெரிய அதிர்வை விஷாலிடம் ஏற்படுத்தியிருக்காது. ஆனால், நடிகரும் பத்திரிகையாளருமான வாராகி, ‘சங்கம் கைமாறிய ஓராண்டுக்குள் ரூபாய் மூன்று கோடியை சுருட்டிவிட்டார்கள்’ என சங்க நிர்வாகிகள் மீது குற்றச்சாட்டு வைத்திருக்கிறார். இந்தக் குற்றச்சாட்டை அறிந்த நடிகர் சங்க நிர்வாகிகள், வாராகிக்கு தக்க பதிலளிக்கும்படி நோட்டீஸ் அனுப்ப, ‘நேரில் சென்றவரை நிர்வாகிகள் சந்திக்கவில்லை’ என்ற குற்றச்சாட்டை விடவும் மிக முக்கியமானது, கோவை திரையரங்க உரிமையாளர்கள் சங்கத் தலைவரும், கோலிவுட்டில் அதிக செல்வாக்குடையவருமான திருப்பூர் சுப்ரமணியம் ‘விகடன்’ மூலமாக முன்வைத்திருக்கும் கேள்விகள். விஷால் பேசிய ஒவ்வொன்றுக்கும் மேற்கோள்காட்டி, உண்மை சம்பவங்களை விளக்கிச் சொல்லியிருக்கும் திருப்பூர் சுப்ரமணியத்தின் பேச்சு அதிர்வேட்டு.
‘தென்னிந்திய நடிகர் சங்கத்தில் இருப்பவர்கள் மட்டுமே திறமைசாலிகள், தமிழ் சினிமாவில் இருக்கும் பிற சங்கங்களில் இருப்பவர்கள் எல்லோரையும் முட்டாள்கள் என்று நினைத்துக்கொண்டு நடிகர் விஷால் தன் இஷ்டத்துக்கு தான் தோன்றித்தனமாக பேசிவருகிறார். இது நியாயமில்லை. தயாரிப்பாளர் சங்கம், விநியோகஸ்தர்கள் சங்கம், திரைப்பட உரிமையாளர்கள் சங்கம் என்று மூன்று சங்கங்கள்தான் தமிழ் திரையுலகத்தின் ஆணிவேர். தயாரிப்பாளர்கள் முதலீடு போடுகிறார்கள். விநியோகஸ்தர்கள் படங்களை விலைக்கு வாங்குகிறார்கள். திரையரங்க உரிமையாளர்கள் மக்களுக்கு திரையிட்டு காட்டுகிறார்கள். சினிமாவில் இருக்கும் ஏனைய சங்கங்கள் இந்த மூன்று அமைப்புக்கும் சப்போர்ட்டிவ்வாக இருந்து வருகிறது. இதுதான் உண்மை’ என்று கூறியிருக்கிறார் சுப்ரமணியம். அனைத்து சங்கங்களும் ஒன்றிணைந்து செயல்படுவது மட்டுமே ஆரோக்கியமான சினிமாவைத் தரும் என்பது சுப்ரமணியத்தின் கருத்து. மிகவும் சாஃப்டாக மேலே கூறியிருப்பது சுப்ரமணியத்தின் முத்தாய்ப்பான வார்த்தைகள். முழு பேட்டியில் பேசியிருப்பதையும், விஷால் அவரை நேர்க்காணல் எடுத்தால் எப்படி இருந்திருக்கும் என்ற கோணத்தில் கேள்வி பதில் ஃபார்மேட்டில் பார்க்கலாம்.
விஷால்: தயாரிப்பாளர் சங்கம் கட்டப்பஞ்சாயத்து செய்கிறதே?
சுப்ரமணியம்: இருபது வருஷத்துக்கு முன்பு உங்கள் அப்பா ஜி.கே.ரெட்டி தயாரிப்பில் சரத்குமார் நடித்த ‘மகாபிரபு’ திரைப்படம் ரிலீஸாக முடியாத அளவுக்கு நெருக்கடியைச் சந்தித்தது. அப்போது, இதே தயாரிப்பாளர்கள் பஞ்சாயத்து செய்ததால்தான் அந்த படமே ரிலீஸானது.
விஷால்: அதற்காக நீங்கள் பஞ்சாயத்து செய்வது சரி வருமா?
சுப்ரமணியம்: நீங்கள் நடித்த 'பாயும்புலி' ரிலீஸ் செய்யும்போது செங்கல்பட்டு பகுதி விநியோகத்தில் பிரச்னை ஏற்பட்டது. அப்போதும் மதுரையில் இருந்த என்னை போன் போட்டு பஞ்சாயத்து செய்ய அழைத்தனர். நீங்களும் அந்தப் பஞ்சாயத்தில் அமர்ந்து இருந்தீர்கள். நாங்கள் பஞ்சாயத்து செய்தால் சரியாகாது என்று, இன்று சொல்லும் நீங்கள் அன்று ஏன் ‘பாயும்புலி’ பட ரிலீஸ் பஞ்சாயத்தில் ஏன் கலந்து கொள்ள வேண்டும்? அன்றைக்கு நடிகர் சங்கத்தை வைத்துக்கொண்டு ‘பாயும்புலி’யை ரிலீஸ் செய்ய வேண்டியதுதானே. அப்போது தயாரிப்பாளர்கள் சங்கத்தின் உதவியால்தானே உங்கள் படத்தை ரிலீஸ் செய்தீர்கள்.
விஷால்: தயாரிப்பாளர் சங்கத்தில் போண்டா, பஜ்ஜி சாப்பிடுகிறீர்களே?
சுப்ரமணியம்: நடிகர்கள் நடித்து முடித்த பிறகு அதோடு நம் வேலை முடிந்துவிட்டது என்று போய்விடுகிறார்கள். அதன்பின் அந்தப் படத்தை பணத்தைச் செலவு செய்து எடுத்த தயாரிப்பாளர் எப்படி இருக்கிறார்? உயிரோடு இருக்கிறாரா? என்று மனிதாபிமான முறையில் எண்ணி பார்ப்பதுகூட கிடையாது. எம்.ஜி.ஆர்., சிவாஜி காலத்திலும், ரஜினி, கமல் காலத்திலும் பிரச்னைகள் வந்து கொண்டுதான் இருந்தன. அப்படி பிரச்னைகள் வரும்போது தயாரிப்பாளர்களோடு ஹீரோக்களும் ஒன்றாக அமர்ந்து பிரச்னையை பேசி சுமூகமாக தீர்ப்பார்கள். இன்றைக்கு சினிமாவில் தங்கள் படத்துக்கு ஒரு பிரச்னை என்றால் எத்தனை ஹீரோக்கள் முன்வந்து நிற்கிறார்கள்?
விஷால்: நடிகர்கள் மோசமானவர்கள். நீங்கள் சரியானவர்கள் அப்படித்தானே?
சுப்ரமணியம்: நாங்கள், எங்கள் திரையரங்க உரிமையாளர்கள் சங்கத்தில் ஒரு தியேட்டரில் திருட்டு விசிடி எடுத்தால் அந்த தியேட்டரை காலவரையரையின்றி மூடச் சொல்கிறோம். நீங்கள், உங்கள் நடிகர் சங்கத்தில், ஒரு நடிகர் தயாரிப்பளருக்கு அதிக செலவு வைத்தால் அந்த நடிகரை தடை பண்ணுங்கள் என்று சொல்ல தைரியம் இருக்கிறதா? ஒரு திரைப்படத்தை ஆரம்பிக்கும்போது தயாரிப்பாளர் ஒரு பட்ஜெட்டில் ஆரம்பிக்கிறார். அதே படத்தை முடிக்கும்போது ஹீரோ அவர் வசதிக்கு ஏற்றபடி பட்ஜெட்டை அதிகமாக இழுத்துவிட்டு விடுகிறார்.
விஷால்: அதுக்காக சம்பளம் வாங்காமல் நடிக்க முடியுமா?
சுப்ரமணியம்: முதலில் படத்தின் கதை என்னவென்றே தெரியாமல் நிறைய தயாரிப்பாளர்கள் திரைப்படம் தயாரித்து வருகிறார்கள். ஏனென்றால், தற்போது முன்னணியில் இருக்கும் பத்து ஹீரோக்கள் அவர்கள்தான் கதை, கதாநாயகி, காமெடி நடிகர், இசையமைப்பாளர், டைரக்டர் என்று எல்லோரையும் தேர்வு செய்கிறார்கள். ஒரு திரைப்படம் வெற்றி பெற்றால் ‘எங்கள் படம்’ என்று தலைமேல் தூக்கிவைத்து கொண்டாடுகிறார்கள். அதே படம் தோற்றுப்போய் விட்டால் இந்தப் படத்துக்கும் எங்களுக்கும் சம்மந்தமே இல்லை என்று தயாரிப்பாளர், டைரக்டர் பக்கம் கையைக் காட்டிவிட்டு தப்பித்துக் கொள்கிறார்கள். வெற்றி, தோல்வி எல்லாவற்றிலும் நடிகர்கள் பங்கு எடுங்கள். நான் சினிமாவில் வந்து 35 வருடங்கள் ஆகின்றன. இந்த சினிமாவில் எந்த தயாரிப்பாளர் பங்களா வைத்து இருக்கிறார் என்று சொல்லுங்கள். எல்லா தயாரிப்பாளரும் இருக்கிற பங்களாவை விற்றுவிட்டு இருக்கிறார்கள். அதற்கு யார் காரணம்? ஹீரோதான் காரணம். நீங்கள் தயாரிப்பாளர்கள் வாழவேண்டும் என்று நினைத்து படத்தில் நடியுங்கள்.
விஷால்: ஹீரோக்களும் தயாரிப்பாளர்களாக இருக்கிறார்களே?
சுப்ரமணியம்: டைரக்டர் ஷங்கர் ஐந்து படங்கள் தயாரித்தார். அப்புறம் வேண்டாம் என்று விட்டுவிட்டார். கே.எஸ்.ரவிக்குமார் ஒரு படம் தயாரித்தார். அதோடு ஒதுங்கிக் கொண்டார். நீங்கள் மூன்று படங்கள் தயாரித்தீர்கள். அவ்வளவுதான். நடிகர்கள் எல்லாம் தயாரிப்பாளராக இருக்கிறார் என்று எந்த அடிப்படையில் சொல்கிறீர்கள், விஷால்? ஒரு தயாரிப்பாளர் கஷ்டப்பட்டு கடன் வாங்கி ஒருவரை நடிக்க வைத்து உயரத்தில் ஏற்றிவிட்டால், ஏற்றிவிட்ட ஏணியையே உதைக்கிறீர்கள். நீங்கள் சாதாரண நிலையில் இருந்தபோது ‘சண்டைக் கோழி’ படத்தின் வாயிலாக உங்களுக்கு அடையாளம் கொடுத்தவர் டைரக்டர் லிங்குசாமி. அவர் படத்தை தயாரித்து கஷ்டப்பட்டு நின்றாரே... அப்போது நீங்கள் எங்கே போனீர்கள்?
விஷால்: ...................................................................................................?
சுப்ரமணியம்: நாங்கள்தான் இரவு, பகலாக பேசி லிங்குசாமியின் பிரச்னையைத் தீர்த்தோம். நடிகர்கள் ஒழுங்காக நடித்து ஒத்துழைப்பு கொடுத்தால் தயாரிப்பாளர்கள் சங்கத்தில் பஞ்சாயத்து நடத்த வேண்டிய அவசியமே இல்லை. இப்போது வெளியாகும் புதுப்படங்களின் சாட்டிலைட் விற்பனையே கிடையாது. நடிகர்கள் அதற்காக தங்கள் சம்பளத்தை குறைத்துக் கொள்கிறார்களா? இல்லை, எங்கள் சாட்டிலைட் தொகைக்கு சம்பளப் பணத்தை குறைத்துக் கொண்டு கொடுங்கள் என்று எந்த நடிகராவது சொல்கிறாரா? சாட்டிலைட் விற்கவில்லை என்றாலும், ஒவர்ஸீஸ் விற்கவில்லை என்றாலும் எனக்கு ஒரு கவலையும் இல்லை... எனக்கு பேசிய சம்பளத்தை ஒரே தொகையாக லம்பாக கொடுத்து விடுங்கள் என்றுதானே நடிகர்கள் ஒற்றைக் காலில் நிற்கிறீர்கள். அப்புறம் எந்த முகத்தை வைத்துக்கொண்டு தயாரிப்பாளரை குறை சொல்கிறீர்கள்?
சீற்றத்துடன் முடிந்திருக்கும், இந்த பேட்டி திரையுலகில் விஷால் செய்து வரும் செயல்களின்மீது பல கேள்விக்கணைகளைத் தொடுத்து வருகிறது. நடிகர் சங்கத் தேர்தல் வாக்குப்பதிவின்போது அடிபட்டு, கஷ்டப்பட்டு வென்ற பதவி, தலைவர் பதவி. அடுத்து என்ன நடக்கிறதென்பதைப் பொருத்திருந்து பார்ப்போம். இன்றைய கடைசி பாடலாக ‘பரமசிவன் கழுத்திலிருந்து பாம்பு கேட்டது…’ பாடல் ஒலித்துக்கொண்டிருக்க இந்தக் கட்டுரை முடிவடைகிறது.

கருத்துகள் இல்லை: