சனி, 3 செப்டம்பர், 2016

இன்னும் எத்தனை நாளைக்குத்தான் பெண்ணை பலவந்தப்படுத்தி காதலிக்கும் சினிமா எடுப்பீர்?

thetimestamil.com :குடும்பம் உள்ளிட்ட பண்பாட்டு அமைப்புகள் ஆண் திமிரை வளர்த்தது
போலவே…காதலை ஒப்புக் கொள்ளாத பெண்ணிடம் குட்டிக்காரணம் போட்டு , குரங்கு சேட்டை பண்ணி , பலவந்தம் செய்துக் கொண்டேயிருந்தால் காதலை ஒப்புக்கொண்டு விடுவாள் என்ற கருத்தை இளைஞர்கள் மனதில் பிரம்மாண்டமாக விதைத்ததில் முக்கியப் பங்கு.. கடந்த 30 ஆண்டுகளாய் வெளிவந்த பல அரைவேக்காட்டு சினிமாக்களுக்கு இருக்கிறது.
காதலை ஒப்புக்கொள்ளாத நாயகியை பலவந்தப்படுத்தி தொந்தரவு செய்துக் கொண்டே இருப்பார் ஹீரோ , சில காட்சிகள் கழித்து ஹீரோவின் (ஆண்மைக்கு ) அடங்கிப் போய் , பம்மிப் போய் தனது காதலை நாணத்தோடு தெரிவிப்பார் காதலி. 90 களின் தலைமுறை இத்தகைய காட்சிகளை நிறையப் பார்த்து வளர்ந்திருக்கிறது.

ஆண்மையின் அபத்த இலக்கணங்களை சினிமா உருவாக்கவில்லை, ஆனால் அவற்றை பிரம்மாண்டமாக boost செய்து romanticise செய்து பார்வையாளனிடம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.
கலைப் படைப்போ , மசாலா படைப்போ…. ‘பெண் காதலை ஒப்புக்கொள்ளாதது பெரிய தோல்வியோ இழுக்கோ அல்ல , அது அவளது முழு உரிமை , வாழ்க்கை ஒரு பெண்ணின் no வோடு முடிந்து விடுவதுமல்ல , ஆம்பள சிங்கம் என்றெல்லாம் ஒன்றுமில்லை ‘.. என்ற கருத்தை வரும் தலைமுறையிடம் வலுவாக விதைத்து , முந்தைய தலைமுறை அரைவேக்காட்டு படைப்பாளிகள் செய்த பாவத்தை கழுவ வேண்டிய பொறுப்பு தற்போதைய படைப்பாளிகளுக்கு இருக்கிறது.
வேதாளம் படு மசாலா படம் தான்.. ஆனால் அதில் அஜீத் பேசும் ஒரு வசனம் வரும் ‘ஒரு பொண்ணு no சொன்ன அப்புறமும் அவளை கட்டாயப்படுத்தி விரட்டுறவன் ஆம்பள இல்ல’ என்று. அதே போல் கபாலியில் முதன்முறையாக ரஜினிகாந்த தன் பட நாயகியை இழிவுபடுத்தாமல் பெரிதும் மதித்திருப்பார். இவைகள் நல்ல தொடக்கங்கள் ,.
இதனைப் போல பெண்ணை சிதர்வதை செய்யாத ,அடக்க நினைக்காத நாய்கர்களை ,பெண்ணுக்கு மரியாதை கொடுக்கும் நாயகர்களை , பெண்ணை விட தன்னை உயர்வாக காட்டிக்கொள்ளாத நாயகர்களை புதிய படைப்பாளிகள் திரையில் உலா வர விடவேண்டும்.
தொடர்ந்து முற்போக்காளர்களும், சமூக அக்கரையாளர்களும் The most Massive media வான சினிமாவை கைக்கொள்ளும் போது.. காலப்போக்கில் பண்பாட்டுத் தளத்தின் பல கூறுகளிலும் அதிர்வுகளை ஏற்படுத்தலாம். அப்படி வலுவாக மக்களோடு பேசிட சினிமாவின் பரிமாணங்களை புரிந்துக் கொள்ள உழைப்பைச் செலுத்துவதும் அவசியம். ஏனெனில் நமது பணி காலதேவனின் மனதில் உறைந்திட வேண்டும்.
அருண் பகத், திரை இயக்குநர்.

கருத்துகள் இல்லை: