வியாழன், 26 மார்ச், 2015

இரவும் பகலும் வரும் ! அங்காடிதெரு மகேஷுக்கு ப்ரேக் கொடுக்குமா?

பால ஸ்ரீராம் இயக்கத்தில் ’அங்காடித்தெரு’ மகேஷ், அனன்யா, இயக்குனர் வெங்கடேஷ், ஜெகன் நடித்து வெளியாகியிருக்கும் திரைப்படம் இரவும் பகலும் வரும். நாட்டில் அதிகமாகிவிட்ட கொள்ளை சம்பவங்களைப் பற்றி விவாதிக்கிறது இந்த திரைப்படம். எந்தவொரு மனிதனும் திருடனாக பிறப்பதில்லை, அவனைச் சுற்றியிருக்கும் சுழ்நிலையும், சந்தர்ப்பங்களுமே ஒருவனை திருடனாக்குகிறது என்பதைச் சொல்லியிருக்கிறார்கள். 
கல்லூரி மாணவனான மகேஷ் பகல் நேரத்தில் மாணவனாகவும், இரவு நேரங்களில் திருடனாகவும் பார்ட் டைம் ஜாப் செய்துவருகிறார். யாரென்றே தெரியாத ஒருவரைப் பார்த்தாலும் சிறியவயதில் நான் உங்க வீட்டுக்கு பக்கத்தில் குடியிருந்தேனே என பேச்சுகொடுத்து அவர்களை குழம்பவைத்து மகிழ்ச்சியடையும் குணமுள்ள மகேஷின் திருட்டு வாழ்க்கை நன்றாகவே சென்றுகொண்டிருக்கிறது. அதெப்படி நன்றாக இருக்கலாம் என்பது போல் மகேஷின் வாழ்க்கையில் நுழைகிறார் அனன்யா.

பார்த்ததும் காதல் என்ற வழக்கமான முறையில் காதலை துவங்கும் மகேஷ், வித்தியாசமாக காதலியிடம் நேரில் சென்று பேசாமல் அனன்யாவுக்கு தெரிந்தவர்களிடமெல்லாம் அவரது காதலனாக அறிமுகமாகிறார். இப்படி முகம் காட்டாமலே அனன்யாவின் காதலனாகிவிட்ட மகேஷ், ஒருமுறை திருடச் செல்லும்போது அனன்யாவின் கண்ணில் பட்டுவிடுகிறார். ஆனால் இது தெரியாமல் மகேஷ் அனன்யாவை சந்திக்க முடிவெடுத்து மெரீனா கடற்கரையில் காத்துக்கிடக்கிறார்.


மகேஷை மெரினாவில் கண்டதும் திருடனைக் கண்டுபிடித்த மகிழ்ச்சியில் போலீஸில் புகார்செய்து சிக்கவைக்கிறார். போலிஸில் சிக்கிய மகேஷுக்கு அப்போது தான் தெரிகிறது, போலிஸ் கமிஷனரான வெங்கடேஷ் தான் ஊரெங்கும் திருடிக்கொண்டிருக்கும் கும்பலின் தலைவன் என்று. திறமையான திருடனாகிய மகேஷை வெங்கடேஷ் தனது கும்பலில் சேர்த்துக்கொள்வதுடன், திருடனை அடையாளம் காட்டிய அனன்யாவை தீர்த்துக்கட்டவும் முடிவு செய்கிறார். கல்லூரி மாணவனான மகேஷ் ஏன் திருடனானான்? போலிஸ் கமிஷனரிடமிருந்து தன் காதலியை காப்பாற்றினானா? அவன் காதல் கைகூடியதா? என்பதெல்லாம் ட்விஸ்டுகளுடன் கூடிய சோகமான க்ளைமாக்ஸ்.

கொள்ளை சம்பவங்களை அதன் உண்மையான பிண்ணனிகளுடன் நன்றாகவே எடுத்துச் சொல்லியிருக்கிறார் இயக்குனர். முதல் பாதியில் ஏற்படும் திரைக்கதையின் சோர்வை நீக்கும் அம்சங்கள் படத்தில் இல்லாததால், இரண்டாம் பாதியும் மந்தமாகவே செல்கிறது. பின்னணி இசை, ஒளிப்பதிவு ஆகியவற்றில் மேலும் கவனம் செலுத்தியிருக்கலாம். இப்படியெல்லாமா பன்றாங்க? என்று அதிரவைக்கும் இயக்குனர் இப்புடி பன்றீங்களேப்பா? என புலம்ப வைத்தது மைனஸ். காமெடி நடிகர் ஜெகனை இன்னும் பயன்படுத்தியிருக்கலாம்.



மகேஷ் கிடைத்த வாய்ப்பை நன்றாக பயன்படுத்தியிருக்கிறார். தற்போது இருக்கும் தமிழ்த் திரையுலக ஹீரோ போட்டியில் இந்த நடிப்பு மட்டும் போதாது பாஸ். சண்டைக் காட்சிகளில் எதார்த்தமாக இருப்பது ப்ளஸ். ரொமாண்டிக் காட்சிகளில் வரண்டு இருப்பது மைனஸ். அனன்யா ஆறுதல். பக்கத்துவீட்டு பெண் போல் வரும் அனன்யா குறும்புத்தனத்துடன் படம் முழுக்க ரசிக்கவைத்து, க்ளைமாக்ஸ் காட்சியில் அதிரவைக்கிறார். இந்த கதாபாத்திரத்தை இவரன்றி வேறு யார் நடிக்க முடியும் என்பதுபோல சிறந்த பங்களிப்பை தந்திருக்கிறார். தொடர்ந்து ஜொலிக்க வாழ்த்துக்கள் அனன்யா.

கருத்துகள் இல்லை: