சனி, 28 மார்ச், 2015

திமுக அதிமுக உட்பட அனைத்து கட்சிகளும் மேகதாது அணை பிரச்சனைக்காக டெல்லி......

காவிரியின் குறுக்கே கர்நாடகா அணை கட்டுவதை தடுக்கக் கோரும் சட்டசபை தீர்மானத்தை, பிரதமரிடம் வழங்க, தமிழகத்தைச் சேர்ந்த, எதிரெதிர் துருவங்களான தி.மு.க., - அ.தி.மு.க., ஒன்று சேர்கின்றன. அவற்றுடன், பா.ம.க., - பா.ஜ., - காங்., - கம்யூனிஸ்ட் என, எல்லா கட்சிகளின் எம்.பி.,க்களும் டில்லி செல்ல முன்வந்துள்ளனர். எலியும் பூனையுமாக இருக்கும் இக்கட்சிகள் அனைத்தும், இந்த விஷயத்தில், அ.தி.மு.க., அழைப்பை ஏற்று அணி சேர்ந்துள்ளது, அதிசய கூட்டணியாகவே கருதப்படுகிறது. 'காவிரியில் புதிய அணை கட்ட, கர்நாடகத்துக்கு மத்திய அரசு தடை விதிக்க வேண்டும்' என, சட்டசபையில் நேற்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானத்தை, டில்லியில், பிரதமர் மோடியிடம் அளிப்பதற்கு, தமிழகத்தைச் சேர்ந்த எல்லா கட்சிகளின், எம்.பி.,க்களும் வர வேண்டும் என, அ.தி.மு.க., தரப்பில், முதல்வர் பன்னீர்செல்வம் வேண்டுகோள் விடுத்தார்.அதை, பிரதான எதிர்க்கட்சியான, தி.மு.க., ஏற்றுக் கொண்டுள்ளதுடன், தன் கட்சி சார்பில், டில்லி செல்லும் குழுவில், திருச்சி சிவா இடம் பெறுவார் என்றும் அறிவித்துள்ளது.அதேபோல், பா.ம.க., தரப்பில், அக்கட்சியின் ஒரே எம்.பி.,யான அன்புமணியும், இதற்கு ஒப்புதல் அளித்துள்ளார்.  மாநில பிரச்சினைகளில் இணைந்து செயல்பட வேண்டும் என்பது திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் நீண்ட கால கோரிக்கை. அதை அலட்சியப்படுத்தி வந்தது அதிமுக தான்.

லோக்சபாவில் இல்லாவிட்டாலும், ராஜ்யசபாவில் இடம் பெற்றுள்ள காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகளும், அ.தி.மு.க., அரசின் அழைப்பை ஏற்க முன்வந்துள்ளன.

சட்டசபையில் நேற்று, தனி நபர் தீர்மானத்தை கொண்டு வந்து, முதல்வர் பேசியபோது, ''இந்த தீர்மானத்தின் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு, தமிழகத்தைச் சேர்ந்த, அனைத்து எம்.பி.,க்களும், பிரதமரை நேரில் சந்திக்க வேண்டும். தமிழகத்தின் கவலையையும், நிலைப்பாட்டையும், பிரதமரிடம் எடுத்துரைக்க வேண்டும்,'' என, கேட்டுக்
கொண்டார். அ.தி.மு.க., ஆட்சிக்கு வந்த பின், முதல் முறையாக, இப்படியொரு அழைப்பு, எதிர்க்கட்சிகளுக்கு விடப்பட்டுள்ளது. அதை அனைத்துக் கட்சிகளும் ஏற்றுக் கொண்டதும், இதுவே முதன் முறையாகும்.
39 எம்.பி.,க்கள்:
தமிழகம் சார்பில், லோக்சபாவில், அ.தி.மு.க., - 37; பா.ம.க., மற்றும் பா.ஜ.,வுக்கு தலா ஒன்று என, 39 எம்.பி.,க்கள் உள்ளனர்.ராஜ்யசபாவில் அ.தி.மு.க., - 11; தி.மு.க., - நான்கு; இந்திய கம்யூ., மார்க்சிஸ்ட், காங்கிரஸ் தலா ஒன்று என, 18 எம்.பி.,க்கள் உள்ளனர்.காவிரி உள்ளிட்ட தமிழகத்தின் முக்கிய பிரச்னைகளில், மத்திய அரசை வலியுறுத்த, அனைத்துக் கட்சி கூட்டம் நடத்த வேண்டும்; பிரதமரை, அனைத்துக் கட்சிகளின் பிரதிநிதிகளும் கூட்டாக சந்திக்க வேண்டும் என்பது, நீண்ட கால கோரிக்கை. கட்சிகளுக்கு இடையேயான கருத்து வேறுபாடு காரணமாக, சமீப காலமாக, இதற்கு வாய்ப்பு இல்லாமல் இருந்து வந்தது. தற்போது, பொதுப் பிரச்னைகளில் ஒன்று கூடும் எண்ணம், தமிழக கட்சிகளிடம் மீண்டும் துளிர்த்திருப்பதாகவும், அதை வரவேற்பதாகவும் இக்கட்சிகள் தெரிவித்துள்ளன.

தி.மு.க., ராஜ்யசபா எம்.பி., குழு தலைவர் கனிமொழி கூறுகையில்,பிரதமரை சந்தித்து, தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை கொடுப்பது என்று முடிவெடுக்கப் பட்டுள்ளது. இதற்காக, தமிழகத்தின் அனைத்து கட்சி எம்.பி.,க்களும் பிரதமரை சந்திக்கவும், முதல்வர் பன்னீர்செல்வம் வேண்டுகோள் விடுத்துள்ளார். தி.மு.க., சார்பில், திருச்சி சிவா எம்.பி., அக்குழுவில் இடம் பெறுவார் என, அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் நலன் காக்கும் எந்த விஷயமாக இருந்தாலும், அதில், அனைத்து கட்சியினரும் ஒன்றாக இருந்து செயல்பட வேண்டும் என்பது தான், தி.மு.க.,வின் விருப்பம் என்றார்.

பா.ம.க., - எம்.பி., அன்புமணிகூறுகையில்,இது, வரவேற்கப்பட வேண்டிய விஷயம். அனைத்து கட்சி எம்.பி.,க்கள் குழுவில், நானும் கலந்து கொள்கிறேன். இதைத் தான், நாங்கள் காலம் காலமாக வலியுறுத்திக் கொண்டிருக்கிறோம். இப்பவாவது, அது நடக்கிறது என்பதில் சந்தோஷம் தான். முதல்வரின் இந்த முயற்சி வரவேற்கத்தக்கது என்றார்.
கர்நாடக கட்சிகளும் ஒன்று சேர்கின்றன:
அணை கட்டக் கூடாது என்பதில், தமிழக கட்சிகள் ஒன்று சேர்ந்துள்ளது போல, மேகதாதுவில் அணை கட்ட வேண்டும் என்பதில், கர்நாடக கட்சிகள் ஒன்று சேர்ந்துள்ளன.கர்நாடக சட்டசபையில், நேற்று, மதச்சார்பற்ற ஜனதா தள தலைவர் குமாரசாமி, ''மேகதாது திட்டத்துக்கு எதிராக, தமிழக சட்டசபையில், தீர்மானம் நிறைவேற்றியது போல், கர்நாடக சட்டசபையிலும் நிறைவேற்றி, திட்டத்தை செயல்படுத்த வேண்டும். மேகதாது திட்டத்தை செயல்படுத்தியே ஆக வேண்டும்,'' என்றார்.

- நமது நிருபர் குழு -தினமலர்.com

கருத்துகள் இல்லை: