ஞாயிறு, 22 மார்ச், 2015

லிங்கா பட நஷ்ட ஈட்டில் பங்கு கேட்கும் வேந்தர் மூவீஸ்


சென்னை,மார்ச் 21 (டி.என்.எஸ்) ரஜினிகாந்தின் ‘லிங்கா’ படத்தின் பிரச்சினை தற்போது முடிவுக்கு வந்து விட்டது. வினியோகஸ்தர்கள் மற்றும் திரையரங்க உரிமையாளர்களுக்கு நஷ்ட ஈடாக, லிங்கா பட தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷ், ரஜினிகாந்த் உள்ளிட்ட படக்குழுவினர் ரூ.10 கோடி வழங்கிவிட்டார்கள். இந்த பணத்தை பிரித்துக் கொள்வதில் எழுந்த பிரச்சினையும் முடிவுக்கு வந்து விட்டது.இந்த நிலையில், லிங்கா படத்தின் தமிழக உரிமையை வாங்கிய வேந்தர் மூவிஸ், நிறுவனம் ரஜினிகாந்த வழங்கிய 10 கோடியில் தங்களுக்கும் பங்கு கொடுக்க வேண்டும் என்று கேட்கிறதாம். இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள வினியோகஸ்தர்கள் தரப்பு, ஆட்டோவில் வந்து நஷ்ட ஈடு வாங்கும் பாதிக்கப்பட்ட வினியோகஸ்தர்கள் மத்தியில், ஆடி காரில் வரும் வேந்தர் மூவிஸ் நஷ்ட ஈடு கேட்பது என்ன நியாயம், பிச்சை எடுத்தான் பெருமாள் அதை பிடுங்க வந்தான் அனுமான், என்ற ரீதியில் நடந்துக்கொள்ளும் வேந்தர் மூவிஸின் இந்த செயல் கண்டிக்கத்தக்கது, என்று கூறியுள்ளார்கள்.


மேலும் வேந்தர் மூவிஸ் நிறுவனத்தில் பணிபுரியும், தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் செயலாளரான, அம்மா கிரியேஷன்ஸ் சிவா, பேச்சு வார்த்தையில் தயாரிப்பாளர்கள் சங்க நிர்வாகியாக அல்லாமல், வேந்தர் மூவிஸ் நிறுவனத்தின் சார்பாக ஒருதலை பட்சமாக பேசுவதாக, குற்றம் சாட்டியுள்ள வினியோகஸ்தர்கள், அவர் செயலாளர் பதவியில் இருந்து விலக வேண்டும், என்றும் வலியுறுத்தியுள்ளனர்.  tamil.chennaionline.com

கருத்துகள் இல்லை: