ஞாயிறு, 10 ஆகஸ்ட், 2014

தினமலர் :கல்யாணசுந்தரம் கொளுத்தி போட்டது வெடியா? காமெடியா? அழகிரி - ஸ்டாலின் வட்டாரத்தில் புது சர்ச்சை?

தி.மு.க.,வின் முதல்வர் வேட்பாளராக, ஸ்டாலினை வரும் 2016 சட்டசபை தேர்தலுக்கு, உடனடியாக அறிவிக்க வேண்டும்' என, கட்சியில் இருந்து விலக்கப்படுவதற்கு முன், கட்சியின் அமைப்புச் செயலர் கல்யாண சுந்தரம் கொளுத்திப் போட்டு உள்ள வெடி, விரைவில் எல்லா இடங்களிலும் வெடிக்கும் என, ஸ்டாலின் ஆதரவு வட்டாரம் கூறுகிறது.
கலந்துரையாடல்:அதற்கு உதாரணமாக, காஞ்சிபுரம் மாவட்டத்தில், ஸ்டாலின் நடத்திய முதல் கலந்துரையாடல் கூட்டத்திலேயே, இந்த கோரிக்கை வலியுறுத்தப்பட்டுள்ளதாக, அவரது ஆதரவு வட்டாரம் கூறுகிறது.அதேநேரத்தில், அழகிரி வட்டாரமோ, 'கல்யாணசுந்தரம் கொளுத்தி போட்டது வெடி அல்ல; வெறும் காமெடி' என்று கிண்டலடிக்கிறது.

இதுபற்றி அவர்கள் கூறுகையில்,'இப்படியொரு கடிதம்,கடந்த மாதம், 30ம் தேதி எழுதப்பட்ட தகவல்,அழகிரிக்கு முதலிலேயே தெரியும். அதனால் தான் அவர் அவசர அவசரமாக, சென்னை கிளம்பி வந்தார். சென்னையில் தங்கியிருந்து, கல்யாணசுந்தரத்தை நீக்கும் வரை காத்துஇருந்தார். அவர் நீக்கப்பட்ட தகவல் கிடைத்த பிறகு தான்,மதுரைக்கு திரும்பினார்'என்கின்றனர்.
தி.மு.க.,வின் அமைப்புச் செயலராக இருந்த கல்யாணசுந்தரம், பொருளாளர் ஸ்டாலினின் தீவிர ஆதரவாளர். அவரது ஆசியுடன் தான், அமைப்புச் செயலர் வரை உயர்ந்தார். அறிவாலயத்தில், ஸ்டாலினின் பிரதிநிதியாகவே செயல்பட்டார்.அதுமட்டுமின்றி, கட்சித் தலைவர் கருணாநிதி யின் குடும்பத்தினரால் நடத்தப்படும், கலைஞர் 'டிவி' யிலும் இயக்குனர் ஆக்கப்பட்டார். அந்தளவுக்கு ஸ்டாலினின் நம்பிக்கைக்கு உரியவராக அவர் வலம் வந்தார்.
அப்படிப்பட்டவர், அறிவாலயத்தில் இருந்து கொண்டே, ஸ்டாலினுக்கு தெரியாமல், இப்படியொரு கடிதத்தை எழுத முடியுமா என்று கேள்விஎழுப்புகிறது, கட்சியில் பெரும்பான்மையாக உள்ள ஸ்டாலின் ஆதரவு வட்டாரம்.
இதுகுறித்து, அந்த வட்டாரம் மேலும் கூறியதாவது:இந்த கடிதம் எழுதிய கையோடு, கல்யாணசுந்தரம் தன் ராஜினாமா கடிதத்தையும், தலைவர், பொதுச் செயலர் மற்றும் பொருளாளர் ஆகிய மூவருக்கும் தனித்தனியாக எழுதியுள்ளார்.
ராஜினாமா:கோபாலபுரம் வீட்டுக்கு சென்று, கருணாநிதியிடம் நேரில் கொடுக்காமல், அவரது உதவியாளரிடம் கடிதத்தைக் கொடுத்துள்ளார். ஆனாலும், அந்த கடிதம் பத்தரிகைகளில் வெளிவரும் வரையில், அவரது ராஜினாமா ஏற்கப்பட்டதா அல்லது மறுக்கப்பட்டதா என்ற தகவல், அறிவாலயத்தில் இருந்து தெரிவிக்கப்படவில்லை.
விலகல் கடிதம் கொடுத்த பிறகும், அவரை சமாதானப்படுத்தும் முயற்சியே நடந்திருக்கிறது. அந்தளவுக்கு ஸ்டாலின் ஆதரவு அவருக்கு இருந்து உள்ளது.மேலும், கல்யாணசுந்தரம் கூறிய விஷயங்கள் எதுவும் கட்சிக்கு புதிதல்ல. ஸ்டாலின் தரப்பில் ஏற்கனவே எழுப்பப்பட்டவைதான். சென்னை யில் நடந்த தி.மு.க., பொதுக்குழுவில், தென் சென்னை மாவட்ட செயலர் ஜெ.அன்பழகன், இதுபற்றி ஏற்கனவே பேசியிருக்கிறார்.
எனவே, கல்யாண சுந்தரம் கடிதமும், நீக்கமும் முன்கூட்டியே திட்டமிடப்பட்ட ஒன்று. இனிவரும் நாட்களில், பல மாவட்டங்களில் இருந்து, இந்த கோஷம் கிளம்பும். ஏனென்றால், இந்த கோரிக்கைகளுக்கு, தி.மு.க.,வினர் மத்தியில் ஆதரவு அதிகம் உள்ளது.கட்சித் தலைவராக கருணாநிதி நீடிக்க வேண்டும் என்பதுதான் அழகிரியின் நிலை. எனவே, அதை தவிர்த்து விட்டு, முதல்வர் வேட்பாளராக ஸ்டாலினை அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கையை கையில் எடுத்துஉள்ளனர். இதன்மூலம், கருணாநிதியையும் திருப்திப்படுத்த முயன்றுள்ளனர்.
நடவடிக்கை:ஆனால், இதற்கு பின்னணி யில் ஸ்டாலின் இருப்பதும், அவர் தான் இப்படி கடிதம் எழுத வைத்துள்ளார் என்றும் செய்தி வெளியாவதை, அவர் விரும்பவில்லை. அதனால்தான், கல்யாணசுந்தரம் மீது நடவடிக்கை எடுப்பதற்கு உடன்பட்டுள்ளார். அதுவும் தற்காலிக நீக்கம் தான்; நிரந்தரமானதல்ல. விரைவிலேயே கல்யாணசுந்தரம் மீது எடுக்கப்பட்டிருக்கும் நடவடிக்கை விலக்கிக் கொள்ளப்பட்டுவிடும்.இவ்வாறு, ஸ்டாலின் ஆதரவு வட்டாரத்தில் dinamalar.com

கருத்துகள் இல்லை: