வியாழன், 14 ஆகஸ்ட், 2014

நீதிபதிகள் நியமன ஆணைய மசோதா எதிர்ப்பின்றி நிறைவேறியது !

புதுடெல்லிt;நீதிபதிகள் நியமன ஆணைய மசோதா பாராளுமன்றத்தில் நிறைவேறியது.
நீதிபதிகள் நியமன ஆணையம் நமது நாட்டில் ஐகோர்ட்டு, சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் நியமனத்தில் 1993–ம் ஆண்டு முதல் சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி, மூத்த நீதிபதிகளைக் கொண்ட ‘கொலிஜியம்’ முறை பின்பற்றப்பட்டு வருகிறது.
ஆனால் இந்த முறையிலான நீதிபதிகள் நியமனத்தில் சமீப காலமாக பெருத்த சர்ச்சைகள் எழுந்தன. இந்த நிலையில், நீதிபதிகள் நியமனத்தில் ‘கொலிஜியம் முறை’யினை ஒழித்து விட்டு, நீதிபதிகள் நியமனத்தில் வெளிப்படையான தன்மையைக் கொண்டு வரவும், நியாயமான நடைமுறைகளை பின்பற்றச் செய்யவும் ஏற்ற வகையில் நீதிபதிகள் நியமன ஆணையம் அமைக்க மத்திய அரசு முடிவு செய்தது.

இதற்கான மசோதாவை பாராளுமன்றத்தில் மத்திய சட்ட மந்திரி ரவி சங்கர் பிரசாத் கடந்த 12–ந் தேதி தாக்கல் செய்தார். இதற்கு அரசியல் சட்ட அந்தஸ்து அளிக்கும் வகையில் அரசியல் சட்ட 99–வது திருத்த மசோதாவும் தாக்கல் செய்யப்பட்டது.
விவாதத்துக்கு பதில் அவற்றின் மீது இரண்டு நாட்களாக விவாதம் நடந்தது. இந்த விவாதத்துக்கு பதில் அளித்து மத்திய சட்ட மந்திரி ரவி சங்கர் பிரசாத் நேற்று பேசினார். அப்போது அவர் கூறியதாவது:–
நீதிபதிகள் நியமன ஆணையம் அமைப்பதற்கான புதிய சட்ட மசோதா, நீதித்துறையின் சுதந்திரத்தில் எந்தவொரு பாதிப்பையும் ஏற்படுத்தாது. சுப்ரீம் கோர்ட்டு, ஐகோர்ட்டு நீதிபதிகள் நியமனத்தில் விரிவான ஆலோசனைகளுக்கு இந்த புதிய சட்டம் வழி ஏற்படுத்தி தரும்.
நீதித்துறையின் புனிதம் நாங்கள் நீதித்துறையின் புனிதத்தைக் காக்கவே இருக்கிறோம். இந்த சபை, நீதித்துறையின் சுதந்திரத்துக்கு மதிப்பு தருகிறது என்று நாங்கள் குறிப்பிட்டிருக்கிறோம். அதற்கு உத்தரவாதம் தரப்படுகிறது.
நீதித்துறையின் கண்ணியத்தை பேணுகிற சபையாக இந்த சபை அமைந்துள்ளது என்ற செய்தி புறப்பட்டு செல்லட்டும்.
மூப்பு, திறன், தகுதி சுப்ரீம் கோர்ட்டு, ஐகோர்ட்டு நீதிபதிகளை நியமிக்க தற்போது பின்பற்றப்பட்டு வருகிற ‘கொலிஜியம் முறை’யில் பல குறைபாடுகள் உள்ளன. பல சிறந்த நீதிபதிகள், சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகளாக வர முடிவதில்லை.
புதிய சட்டத்தின்கீழ், சுப்ரீம் கோர்ட்டு, ஐகேர்ட்டு நீதிபதிகள் நியமனத்தை ஆணையம் முடிவு செய்யும். நீதிபதிகள் பதவி உயர்வில் மூப்புடன் திறன், தகுதி ஆகியவையும் கவனத்தில் கொள்ளப்படும்.
மாநில கமிஷன் கிடையாது நீதிபதிகள் நியமனம் தொடர்பாக மாநில அளவிலான கமிஷன் அமைக்க முடியாது. அரசியல் சாசன சட்டம் பிரிவு 124, சுப்ரீம் கோர்ட்டு மற்றும் 24 ஐகோர்ட்டுகளின் நீதிபதிகளை ஜனாதிபதிதான் நியமிக்க முடியும் என்பதை தெளிவுபடுத்தி உள்ளது.
நீதிபதிகள், வக்கீல்களிலிருந்து மிகச் சிறப்பானவர்களை ஐகோர்ட்டு, சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகளாக நியமிப்பதில், நியமன ஆணையத்தின் கூட்டு அறிவின் மீது உறுப்பினர்கள் நம்பிக்கை வைக்க வேண்டும்.
ஐகோர்ட்டு, சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் நியமனங்களில் பரிந்துரை செய்யப்படுவதற்காக வக்கீல்கள், நீதிபதிகளின் பெயர்களை சேகரித்து வைக்கும் தகவல் வங்கியை உருவாக்க பாடுபடுவேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
காங்கிரஸ் திருத்தம் நீதிபதிகள் நியமன ஆணைய மசோதாவில், ‘ஒரு நீதிபதியின் நியமனத்தின்போது, நீதிபதிகள் நியமன ஆணையத்தின் சிபாரிசை தேவைப்பட்டால் திரும்பப் பரிசீலிக்குமாறு ஜனாதிபதி கேட்டு திரும்ப அனுப்பி வைக்கலாம்; ஆனால் ஆணையம் ஒருமனதாக மீண்டும் பரிந்துரை செய்தால் அதை ஜனாதிபதி ஏற்று நியமனம் செய்வார்’ என்ற அம்சம் இடம்பெற்றிருந்தது.
ஆனால் இதில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முன்னாள் சட்டமந்திரி வீரப்ப மொய்லி, ஒரு திருத்தம் கொண்டு வர வலியுறுத்தி பேசினார். அதை மத்திய அரசு ஏற்றுக்கொண்டது. அதன்படி, ‘ஒரு நீதிபதியின் நியமனத்தில் ஆணையத்தின் சிபாரிசை ஜனாதிபதி திரும்ப அனுப்புகிறபோது, அதை ஆணையம் மீண்டும் ஒரு மனதாக பரிந்துரை செய்ய வேண்டும் என்பதில்லை. ஒரு மனதாக பரிந்துரை செய்யாமல், (ஓரிருவரின் எதிர்ப்புடன்கூட) மீண்டும் ஜனாதிபதிக்கு அனுப்பினால், அதை அவர் ஏற்று, அந்த நீதிபதியை நியமனம் செய்வார்’.
எதிர்ப்பின்றி நிறைவேறியது சட்ட மந்திரி ரவி சங்கர் பிரசாத் பதில் அளித்து பேசிய பின்னர் நீதிபதிகள் நியமன ஆணைய மசோதாவும், அரசியல் சட்ட 99–வது திருத்த மசோதாவும் குரல் ஓட்டெடுப்புக்கு விடப்பட்டன. அதில் சபையில் இருந்த 367 உறுப்பினர்களும் மசோதாவுக்கு ஆதரவாக குரல் கொடுத்தனர்.
ஒருவர் கூட எதிர்ப்பு குரல் கொடுக்கவில்லை. எனவே மசோதாக்கள் எந்தவித எதிர்ப்புமின்றி நிறைவேறியது.
எப்போது அமல்? இந்த மசோதாக்கள் டெல்லி மேல்–சபையில் நிறைவேற்றப்பட வேண்டும். அத்துடன் அரசியல் சட்ட அந்தஸ்து வழங்கப்படுவதற்காக அரசியல் சாசன சட்ட திருத்த மசோதா, மாநில சட்டசபைகளுக்கு அனுப்பி வைக்கப்படும். 50 சதவீத மாநில சட்டசபைகள் அதற்கு ஒப்புதல் வழங்க வேண்டும். இதற்கு 8 மாத காலம் ஆகலாம்.
அதன்பின்னர் மசோதா, ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்படும். அவர் ஒப்புதல் அளித்து கையெழுத்திட்டு, அதிகாரப்பூர்வ அறிவிக்கை வெளியிட்ட பின்னர் நீதிபதிகள் நியமன ஆணையம் அமலுக்கு வரும். ‘கொலிஜியம் முறை’ முடிவுக்கு வரும். அதைத் தொடர்ந்து, சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி, சுப்ரீம் கோர்ட்டின் மூத்த நீதிபதிகள் 2 பேர், பிரபலங்கள் 2 பேர், மத்திய சட்ட மந்திரி ஆகிய 6 பேரை கொண்ட நீதிபதிகள் நியமன ஆணையம், நீதிபதிகள் நியமனத்தை கவனிக்கும்.dailythanthi.com

கருத்துகள் இல்லை: