ஞாயிறு, 10 ஆகஸ்ட், 2014

அழகிரி அர்ச்சனை : சகுனி கல்யாணசுந்தரத்தின் பின்னணியில் ஸ்டாலின் டிராமா !

மதுரை: அறிவாலயத்தில் அமர்ந்து கொண்டு, சகுனி வேலை பார்த்துக் கொண்டிருக்கும் 'சிலந்தி'யை, அங்கிருந்து அப்புறப்படுத்தினால் தான், கட்சி உருப்படும் என்று ஏற்கனவே சொல்லியிருந்தேன். அந்த சகுனியான சிலந்தி யார் என்பதை, இப்போது, கட்சித் தலைமை உணர்ந்து கொண்டு விட்டது. அதனால் தான், கல்யாணசுந்தரம், கட்சியில் இருந்து நீக்கப்பட்டு இருக்கிறார் என்று முன்னாள் மத்திய அமைச்சரும்,திமுகவில் இருந்து நீக்கப்பட்டவருமான மு.க.அழகிரி கூறியுள்ளார்.
கல்யாண சுந்தரம் நீக்கம் தி.மு.க., அமைப்புச் செயலர் பொறுப்பில் இருந்த, பெ.வீ.கல்யாண சுந்தரம், கழகக் கட்டுப்பாட்டை மீறி செயல்பட்டதால், கழக அடிப்படை உறுப்பினர் உட்பட, கழகத்தின் அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும், தற்காலிகமாக நீக்கி வைக்கப்படுகிறார். அந்த பொறுப்பில், வழக்கறிஞர் ஆலந்துார் ஆர்.எஸ்.பாரதி நியமிக்கப்படுகிறார்' என, தி.மு.க., பொதுச் செயலர் அன்பழகன் அறிவிப்பு வெளியிட்டிருக்கிறார்
கட்சிக்கு எதிராக.. கட்சிப் பொறுப்பில் இருந்தும், கலைஞர் 'டிவி'யின் இயக்குனர் பொறுப்பில் இருந்தும், தன்னை விடுவிக்குமாறு, கல்யாணசுந்தரம், தி.மு.க., தலைவர் கருணாநிதிக்கு கடிதம் அனுப்பி இருந்ததோடு, 'கட்சி தோல்வி பாதையில் செல்கிறது; கட்சிக்காக உழைக்கும் ஸ்டாலின், 2016 சட்டசபைத் தேர்தலுக்கான, முதல்வர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.
கட்சிக்கு எதிரான கருத்து ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளாகி இருக்கும் தயாநிதி, கனிமொழி, ஆ.ராஜா ஆகியோரை, கட்சியில் இருந்து நீக்க வேண்டும்; அப்போது தான், கட்சிக்கு ஏற்பட்டிருக்கும் அவப்பெயர் நீங்கும்' என்றெல்லாம், கட்சிக்கு எதிராக கருத்து சொல்லியிருந்தார். இதனால், அவர் மீது கடும் ஆத்திரமடைந்த கட்சித் தலைமை, உடனடியாக அவரை கட்சியை விட்டு நீக்கி அறிவித்திருக்கிறது.
அறிவாலய சிலந்தி கல்யாணசுந்தரம், திடுமென கட்சியை விட்டு நீக்கப்பட்டுள்ளது குறித்து கருத்து கூறியுள்ள அழகிரி, அறிவாலயத்தில் அமர்ந்து கொண்டு, சகுனி வேலை பார்த்துக் கொண்டிருக்கும் 'சிலந்தி'யை, அங்கிருந்து அப்புறப்படுத்தினால் தான், கட்சி உருப்படும் என்று ஏற்கனவே சொல்லியிருந்தேன். அந்த சகுனியான சிலந்தி யார் என்பதை, இப்போது, கட்சித் தலைமை உணர்ந்து கொண்டு விட்டது. அதனால் தான், கல்யாணசுந்தரம், கட்சியில் இருந்து நீக்கப்பட்டு இருக்கிறார் என்று கூறியுள்ளார்.
ஆரம்பத்தில், அவரின் செயல்பாடுகள் குறித்து, நான் தலைவரிடம் சொன்னபோது, அவரே கூட அதை நம்பவில்லை. ஆனால், கால தாமதமாக உணர்ந்து நடவடிக்கை எடுக்கின்றனர்.
கட்சித்தலைமைக்கு யோசனை கல்யாணசுந்தரம், கட்சியில் இருக்கும் சிலரை, ஊழல்வாதிகள் என்கிறார். அவர்களை கட்சியை விட்டு அப்புறப்படுத்தவும், கட்சித் தலைமைக்கு யோசனை சொல்கிறார். அவர் குறிப்பிடும் நபர்களை வைத்து, கல்யாணசுந்தரம், எந்த பலனையும் அனுபவிக்கவில்லையா?.
இவர்கட்சியில் செய்த ஊழல்கள், யாருக்கும் தெரியாது என்கிற நினைப்பில் கருத்து சொல்கிறார். இவர் யார் பின்னணியில், எந்த தைரியத்தில் இதையெல்லாம் சொல்கிறார் என்பதை, எல்லோரும் அறிவர்.
கட்சியில் இருந்து கொண்டு, கட்சிக்கு துரோகம் செய்பவர்களை, வரிசையாக அடையாளம் கண்டு, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் நேரம் வந்துவிட்டது.
ஸ்டாலின்தான் காரணம் இனி யாரும், கட்சித் தலைமையை ஏமாற்ற முடியாது. கட்சியின், அதிகார மையமாகிடத் துடிக்கும் ஸ்டாலின் தான், இப்படிப்பட்டவர்களின் பின்னணியாக இருந்து செயல்பட்டுக் கொண்டிருக்கிறார் என்பதையும், கட்சித் தலைமை உணர்ந்து கொண்டு விட்டது.
ஆக, கட்சியில் நடவடிக்கை எடுக்க வேண்டியது, ஒரே ஒருவர் மட்டும் தான். அவர் மீது, கட்சித் தலைமை உறுதியாக நின்று நடவடிக்கை எடுத்தால் போதும். கட்சி தானாவே நிமிர்ந்து விடும்
பகல்வேஷம் போடுவது யார்? நான் மீண்டும் கட்சிக்குள் திரும்பக் கூடும் என்று தகவல் பரவியதுமே, அது நடந்து விடக்கூடாது என்று திட்டம்போட்டு, 'டிராமா' போடுகின்றனர். அவர்களின் பகல் வேஷம் கலைந்து விட்டது
நான் அடுத்து என்ன செய்வேன் என்பது குறித்தெல்லாம், இப்போதைக்கு, விளக்கமாக என் ஆதரவாளர்கள் என்ன ஆவார்கள் என்கிற கவலை, யாருக்கும் தேவையில்லை.
நான் காப்பாற்றுவேன் என் ஆதரவாளர்களை, நான் ஒருபோதும் விட்டுக் கொடுத்ததில்லை;இனியும் விட்டுக் கொடுக்க மாட்டேன். என் உயிரையும் கொடுத்து, அவர்களை காப்பாற்றுவேன். அதனால் தான், அவர்கள் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட பின்னாலும், என் பின்னால் உறுதியாக நிற்கின்றனர். அவர்களுக்கு விரைவில் நல்லது நடக்கும்.
கட்சிக்குள்ளும், வெளியேயும் என்னவெல்லாம் நடக்கிறது என்பதை, நான் வெளிப்படையாகவே சொல்லி விட்டேன். அதையெல்லாம் ஆரம்பத்தில் புறக்கணித்தவர்கள், இப்போது, நான் சொல்லும் விஷயத்தின் ஆழத்தை புரிந்து கொண்டிருக்கின்றனர்.இனி நடப்பது, எல்லாமே நல்லதுக்காகவே நடக்கும்.
tamil.oneindia.in

கருத்துகள் இல்லை: