திங்கள், 11 ஆகஸ்ட், 2014

பட்ஜெட் : கார்ப்பரேட் முதலாளிகளுக்கு மோடியின் காணிக்கை

“இது பணக்காரர்களுக்கும் ஏழைகளுக்குமான பட்ஜெட்” எனத் தனது முதல் பட்ஜெட்டை வருணித்திருக்கிறார், நிதியமைச்சர் அருண் ஜெட்லி. அம்பானி, அதானி தொடங்கி ஒட்டுமொத்த இந்தியத் தரகு முதலாளித்துவ வர்க்கமும் மோடி அரசின் முதல் பட்ஜெட்டை ஆரவாரமாக வரவேற்றிருப்பதால், இது அவர்களுக்கான பட்ஜெட்தான் என்பதை நம்மால் சந்தேகத்திற்கு இடமின்றிப் புரிந்துகொள்ள முடிகிறது. எனினும், அருண் ஜெட்லி குறிப்பிடும் ஏழை யார் என்பதுதான் நாம் தெளிவுபடுத்திக் கொள்ள வேண்டிய விடயம். அதற்கும் பட்ஜெட்டிலேயே விடை இருக்கிறது.

பட்ஜெட்வெங்காயத்தின் விலை சாமானிய மக்கள் நெருங்க முடியாத அளவிற்கு ஏறிக் கொண்டிருந்த சமயத்தில் வெளிவந்த நரேந்திர மோடி அரசின் பட்ஜெட்டில் 19 இன்ஞ்சுக்குக் குறைவான எல்.சி.டி. மற்றும் கேதோடு கதிர் டி.வி.க்கள், மைக்ரோ அவன் அடுப்பு, தண்ணீர் சுத்திகரிக்கும் இயந்திரங்கள், குளிர்பதனப் பெட்டிகள், சலவை இயந்திரங்கள் உள்ளிட்ட பல்வேறு மின்னணுப் பொருட்கள் மீதான வரிகள் குறைக்கப்பட்டு, அவை இனி விலை மலிவாகக் கிடைப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன் பொருள், வீடு, கார் தொடங்கி ஐ பேட், ஐ ஃபோன் வரையிலான நவீனமான நுகர்பொருட்கள் அனைத்தையும் இ.எம்.ஐ. மூலமே வாங்கி அனுபவித்துவரும் நகர்ப்புறத்துப் புதிய நடுத்தர வர்க்கம்தான் மோடி அரசின் பார்வையில் ஏழைகள். அதற்குக் கீழே வாழும் பல்வேறு தட்டுக்களைச் சேர்ந்த சாமானிய மக்களனைவரும் இந்த அரசிற்குத் தேவையற்றவர்கள்.
இந்த பட்ஜெட் இந்தியத் தரகு முதலாளிகள்-பன்னாட்டு ஏகபோக முதலீட்டாளர்கள்-புதிய நடுத்தர வர்க்கத்திற்கானது. இன்னும் குறிப்பாகச் சொல்லப் போனால், 10,000 கோடி ரூபாய் முதலீடு செய்து தன்னைப் பிரதமராக அமர வைத்த இந்தியத் தரகு முதலாளிகளுக்கு நன்றிக்கடன் பட்டுள்ள நரேந்திர மோடி, அக்கடனுக்கான முதல் தவணையை பட்ஜெட்டாகச் சமர்ப்பித்திருக்கிறார்.
இந்தியாவின் இயற்கை வளங்கள், நிதி ஆதாரங்கள் அனைத்தையும் தரகு முதலாளிகளுக்கும் பன்னாட்டு நிறுவனங்களுக்கும் ஒரேயொரு உத்தரவு மூலம் பட்டா போட்டுக் கொடுத்துவிடும் துணிவு கொண்ட பாசிஸ்டுதான் மோடி என்றபோதும், தேர்தல், நாடாளுமன்றம், நீதிமன்றம், எதிர்க்கட்சிகள் என்ற ஜனநாயக சல்லாத்துணியை இந்தியா போர்த்திக் கொண்டிருப்பது அவரின் விருப்பத்திற்குத் தடையாக இருக்கிறது. அதனால்தான் பி.பி.பி. (அரசு-தனியார் கூட்டு Public Private Partnership) என்ற ரூட்” வழியாக இந்திய நாட்டின் வளங்களைத் தரகு முதலாளிகளுக்கும் பன்னாட்டு முதலாளிகளுக்கும் பங்கு போட்டுக் கொடுக்கும் திட்டத்தைத் தீட்டியிருக்கிறார், அவர். இதுதான் (பி.பி.பி.) இந்த பட்ஜெட்டின் உயிர்நாடி.
ஆவடி மேற்கு காந்திநகர் தெரு
அடிக்கட்டுமான வளர்ச்சியில் இரு துருவங்கள் : சென்னை – ஆவடியிலுள்ள மேற்கு காந்திநகர் தெரு
ஏற்கெனவே உள்ள நகர்ப்புறங்களையொட்டி 100 புதிய நகரங்களை அமைப்பது, இரண்டாம் மற்றும் மூன்றாம் மட்ட நகரங்களில் புதிய விமான நிலையங்களை அமைப்பது, 16 புதிய துறைமுகங்களை உருவாக்குவது, 11,635 கோடி ரூபாய் செலவில் தூத்துக்குடி துறைமுகத்தை விரிவுபடுத்துவது, 5,000 கோடி ரூபாய் செலவில் நாடெங்கும் குளிர்பதனக் கிடங்குகளை அமைப்பது, 4,200 கோடி ரூபாய் செலவில் உ.பி.யின் அலகாபாத்திலிருந்து மேற்கு வங்கத்திலுள்ள ஹால்தியா வரையில் கங்கை நதியில் 1,500 டன் எடை கொண்ட கப்பல் போக்குவரத்தை அமைப்பது எனத் தனியார் பங்கேற்புடன் அடிக்கட்டுமான வசதிகளை உருவாக்கும் திட்டங்கள் பட்ஜெட் முழுவதும் நிரம்பி வழிகின்றன.
மோடி எந்தளவிற்கு தனியார்மயத்தின் சேவகன் என்பதற்கு ரயில்வே பட்ஜெட் இன்னொரு சாட்சி. ரயில் நிலையங்களையும் முனையங்களையும் நவீனப்படுத்துவது, ரயில் நிலையங்களைத் துறைமுகங்களுடன் இணைப்பது என்பவை உள்ளிட்டு அத்துறையின் கேந்திரமான பணிகள் அனைத்தும் இனி பி.பி.பி.-இன் வழியாகத்தான் நிறைவேற்றப்படும் என அறிவித்து, ஒரே பட்ஜெட்டில் ரயில்வே துறையை கார்ப்பரேட் முதலாளிகள் சுரண்டிக் கொழுப்பதற்கான களமாக மாற்றிவிட்டது, மோடியின் அரசு.
கிருஷ்ணகிரி - தோப்பூர் விரைவுச் சாலை
அடிக்கட்டுமான வளர்ச்சியில் இரு துருவங்கள் : கிருஷ்ணகிரி – தோப்பூர் விரைவுச் சாலை (கோப்புப் படம்)
ஈருடல் ஓருயிராக அடிக்கட்டுமானத் துறையும் கார்ப்பரேட் நிறுவனங்களும் எந்தளவிற்கு வளர்கின்றனவோ அந்தளவிற்கு இந்தியப் பொருளாதாரமும் வளர்ச்சியை எட்டிப் பிடிக்கும் என்ற மோடியின் ஃபார்முலா, மன்மோகன் சிங் ஃபார்முலாவின் ஜெராக்ஸ் காப்பிதானே தவிர, இதில் புதுமையும் கிடையாது; சுயமான புத்திசாலித்தனமும் கிடையாது. அது மட்டுமல்ல, மோடியின் பட்ஜெட், ப.சி.யின் இடைக்கால பட்ஜெட்டின் நீட்சிதான் என்பதை மோடியின் ஆதரவாளர்களால்கூட மறுக்க முடியவில்லை. அதனால்தான், “காங்கிரசு இல்லாத நாட்டை உருவாக்குவோம் எனத் தேர்தலில் சவடால் அடித்த மோடியால் காங்கிரசு முத்திரை இல்லாத பட்ஜெட்டைக்கூடப் போட முடியவில்லை” எனக் கூறி, மோடியின் மூக்கை உடைத்திருக்கிறார் ப.சிதம்பரம்
மோடி அரசின் பட்ஜெட் அடிப்படையில் புதிய மொந்தை பழைய கள்ளுதான் என்றாலும், தரகு முதலாளிகள் மற்றும் பன்னாட்டு ஏகபோக நிறுவனங்களின் கோரிக்கைகளை நிறைவேற்றிக் கொடுப்பதில் அவரது அரசு காட்டியிருக்கும் வேகம் மன்மோகன் சிங் கும்பலையே அசர வைத்துவிடும். அடிக்கட்டுமானத் திட்டங்களில் பி.பி.பி. முறையில் நுழையும் தரகு முதலாளித்துவ நிறுவனங்களுக்குக் கடன் அளிப்பதற்கு ஏற்ப பொதுத்துறை வங்கிகள் தனிச் சிறப்பான முறையில் சந்தையிலிருந்து சேமிப்புகளைத் திரட்டிக் கொள்ளவும், அப்படி திரட்டப்படும் சேமிப்புகளை ரிசர்வ் வங்கியின் கண்காணிப்பு மற்றும் கட்டுப்பாடுகளிலிருந்து விடுவிக்கவும் அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது. வாராக் கடன்கள் பொதுத்துறை வங்கிகளைத் திவாலாக்கிவிடும் சூழ்நிலையில் அளிக்கப்பட்டிருக்கும் இந்த அபாயகரமான அனுமதி, கார்ப்பரேட் முதலாளிகள் பொதுத்துறை வங்கிகளிலுள்ள பொதுமக்களின் சேமிப்புகளை மனம்போன போக்கில் சூறையாடுவதற்குக் கொடுக்கப்பட்டுள்ள லைசென்சு தவிர வேறில்லை. மேலும், அரசு-தனியார் கூட்டுறவு திட்டங்களைத் தடங்கலின்றி நிறைவேற்றுவதற்காக “3பி” என்ற பெயரில் அரசு நிறுவனமொன்று உருவாக்கப்பட்டு, அதற்கு 500 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டிருக்கிறது.
ஆளுங்கும்பலின் செல்லப்பிள்ளையாகக் கவனிக்கப்பட்ட ரியல் எஸ்டேட் துறை சரிந்து கிடப்பதால், அதனைத் தூக்கி நிறுத்தும் நோக்கில் வங்கிகள் வழங்கும் வீட்டுக் கடன்களுக்கு வட்டி விலக்கு அளிக்கும் வரம்பு 1.5 இலட்சம் ரூபாயிலிருந்து 2 இலட்ச ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் தங்களுக்குத் தேவைப்படும் மூலதனத்தைப் பொதுமக்களிடமிருந்து திரட்டிக் கொள்ள அனுமதிக்கப்பட்டிருப்பதோடு, அப்பங்குகளுக்கு கார்ப்பரேட் வரி விதிப்பிலிருந்து விலக்கும் அளிக்கப்பட்டிருக்கிறது. மேலும், ரியல் எஸ்டேட் துறையில் அந்நிய ஏகபோக நிறுவனங்கள் நுழைவதற்கு ஒரு கோடி அமெரிக்க டாலர்கள் மூலதனமிட வேண்டும்; 50,000 சதுர மீட்டர் பரப்பளவிற்கு மேற்பட்ட கட்டுமானத் திட்டங்களில் மட்டுமே அந்நிறுவனங்கள் நுழைவதற்கு அனுமதிக்கப்படும் என்றிருந்த கட்டுப்பாடுகள் 20,000 சதுர மீட்டர் பரப்பளவு, 50 இலட்சம் அமெரிக்க டாலர்கள் எனத் தளர்த்தப்பட்டுள்ளன.
05-1-captionகார்ப்பரேட் நிறுவனங்கள் மீது பின் தேதியிட்டு வரி விதிக்கும்படியான பொது வரி ஏய்ப்பு தடுப்புச் சட்டத்தை உருவாக்கிய காங்கிரசு கூட்டணி அரசு, இந்தியத் தரகு முதலாளிகளும் பன்னாட்டு ஏகபோக நிறுவனங்களும் அச்சட்டத்திற்குத் தெரிவித்த எதிர்ப்புக்கு அணிபணிந்து, அதனை ஏப்.2015 வரை அமலுக்குக் கொண்டுவரப் போவதில்லை என்ற முடிவை எடுத்திருந்தது. அரசனை விஞ்சிய விசுவாசியாக இச்சட்டத்தை ‘வரி தீவிரவாதம்’ எனத் தனது தேர்தல் அறிக்கையிலேயே குற்றஞ்சுமத்தியிருந்த பா.ஜ.க., இச்சட்டத்தை நீக்குவது தொடர்பாக ஆராய்ந்து வருவதாகவும், அதுவரை இச்சட்டத்தின் கீழ் புதிய வழக்குகள் பதிவு செய்ய மாட்டோம் என்ற வாக்குறுதியை கார்ப்பரேட் முதலாளிகளுக்கு அளித்திருக்கிறது. தற்பொழுதுள்ள வணிக வரி விதிப்பு முறையைக் கைவிட்டு, அதனிடத்தில் நாடெங்கும் ஒரேமாதிரியான, கார்ப்பரேட் நிறுவனங்களுக்குச் சாதகமான சரக்கு மற்றும் சேவை வரிவிதிப்பு முறையை இந்த ஆண்டின் இறுதிக்குள் கொண்டுவரவும், சிறப்புப் பொருளாதார மண்டலங்களில் மீது விதிக்கப்படும் டிவிடெண்ட் வரி, மாட் வரிகளைச் சீரமைக்கவும் உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளது. மின்சார உற்பத்தி மற்றும் விநியோகத்தில் ஈடுபடும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு பத்தாண்டு கால வரி விடுமுறை அளிக்கப்பட்டிருக்கிறது.
இவற்றுக்கு அப்பால், காங்கிரசு கூட்டணி அரசால் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு கடந்த சில ஆண்டுகளில் அளிக்கப்பட்டிருந்த ஐந்து இலட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமான வருமான வரிச் சலுகைகள் மீது மோடி அரசும் கைவைக்கவில்லை என்பதோடு, தனிநபர் வருமான வரி, சுங்க வரி, கலால் வரி ஆகியவற்றில் மேலும் 22,000 கோடி ரூபாய் அளவிற்கு வரிவிலக்குகள் அளிக்கப்பட்டுள்ளன. நடுத்தர வர்க்கத்திற்கும் புதுப் பணக்கார கும்பலுக்கும் அளிக்கப்பட்டுள்ள தனிநபர் வருமான வரி விலக்கு மற்றும் முதலீட்டுக்கான வரி விலக்குகளால் அவர்களுக்கு ஆண்டொன்றுக்கு 5,000 ரூபாய் முதல் 40,000 ரூபாய் வரை மிச்சமாகுமென்று கூறப்படுகிறது.
டெல்லி விமான நிலையம்
டெல்லி விமான நிலையம் – பி.பி.பி திட்டங்களில் நடக்கும் கார்ப்பரேட் பகற்கொள்ளைக்கு எடுப்பான உதாரணம்.
இந்த வரி விலக்குகளால் அரசுக்கு ஏற்பட்டுள்ள வருமான இழப்பை ஈடுகட்ட 7,525 கோடி ரூபாய் அளவிற்கு மறைமுக வரிகள் உயர்த்தப்பட்டுள்ளன. அன்றாடங் காய்ச்சிகளான சாமானிய மக்கள் மீது தொடுக்கப்பட்டுள்ள தாக்குதல் இது. இதற்கு அப்பால் 20,000 கோடி ரூபாய் அளவிற்கு பெட்ரோலியப் பொருட்கள் மீதான மானியம் ரத்து செய்யப்பட்டுள்ளது. யூரியாவிற்கு வழங்கப்படும் மானிய முறையை மாற்றியமைப்பதன் மூலம் உர மானியத்தில் 20,000 கோடி ரூபாய் அளவிற்கு வெட்டிவிடவும் திட்டங்கள் தயாராகி வருகின்றன. பட்ஜெட்டுக்கு முன்பாகவே ரயில் கட்டண உயர்வு, டீசல் விலை உயர்வு; பட்ஜெட்டில் மானிய வெட்டு, மறைமுக வரி உயர்வு – “நாங்கள் ஆட்சிக்கு வந்தால் விலைவாசியைக் குறைப்போம்” எனச் சவடால் அடித்த உத்தமர்களின் யோக்கியதை இதுதான்.
இவை ஒருபுறமிருக்க, பற்றாக்குறையை ஈடுகட்ட 63,000 கோடி ரூபாய் பெறுமான பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை – கணிசமான இலாபத்தில் இயங்கும் செயில், ஓ.என்.ஜி.சி., கோல் இந்தியா ஆகியவற்றின் பங்குகளைத் தனியாருக்கு விற்பதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இத்தனியார்மய நடவடிக்கையோடு, காப்பீடு துறையிலும் இராணுவத் தளவாட உற்பத்தித் துறையிலும் 49 சதவீத அளவிற்கு அந்நிய முதலீட்டுக்கு அனுமதி, இணையதள வர்த்தகத்தில் 100 சதவீத அந்நிய முதலீட்டுக்கு அனுமதி – என மோடியின் பட்ஜெட் ஏழைகளுக்கு எதிரானதாகவும் கார்ப்பரேட் முதலாளி வர்க்கம் மற்றும் புதுப் பணக்கார கும்பலின் மனதைக் குளிர்விப்பதாகவும் தயாரிக்கப்பட்டிருக்கிறது.
அடிக்கட்டுமானத் திட்டங்களுக்காக 2.5 இலட்சம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டிருப்பதைச் சுட்டிக்காட்டி, “இதுதான் இந்த பட்ஜெட்டின் குறிப்பிடத்தக்க அம்சம்” என தினமணி நாளிதழின் நடுப்பக்க கட்டுரையொன்று சிலாகித்துப் பேசுகிறது. “இவ்வளவு கோடி ரூபாயைச் செலவழித்து உருவாக்கப்படும் இந்த உள்கட்டமைப்பு வசதிகள் யாருக்குப் பயன்படும்?” என்ற கேள்விதான் இந்த பட்ஜெட்டின் மக்கள் விரோதத் தன்மையை முழுமையாக வெளிப்படுத்தும்.
வேலை தேடி நகர்ப்புறங்களுக்கு வரும் கிராமப்புற ஏழைகள் தகரக் கொட்டகையிலும், நடைபாதையிலும், கட்டுமானங்கள் நடக்கும் பொட்டல் வெளியிலும் தங்க வேண்டிய அவலத்தில் இருத்தப்பட்டுள்ளனர். அவர்களின் உயிருக்கு எவ்விதப் பாதுகாப்பும் கிடையாது என்பதை மௌலிவாக்கம் சாவுகள் அம்பலப்படுத்தின. நகர்ப்புற வளர்ச்சித் திட்டங்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ள 75,000 கோடி ரூபாய், நகர்ப்புற வளர்ச்சியின் வேராக இருக்கும் இத்தொழிலாளர்களுக்கு ஒரு குடிசையைக்கூட கட்டிக் கொடுக்கப் பயன்படப் போவதில்லை. ஏனென்றால், நகர்ப்புற சேரி ஒழிப்புத் திட்டத்தை கார்ப்பரேட் நிறுவனங்களின் சமூகப் பொறுப்பாக்கிவிட்டு தனது பொறுப்பைக் கைகழுவிவிட்டது, மோடி அரசு.
100 புதிய நகர்ப்புறங்களை அமைக்க 7,000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியிருக்கும் மோடி அரசு, கிராமப்புறங்களில் தொழிற்பேட்டைகளை அமைக்க வேண்டும் என்ற சிறுதொழில் முனைவோரின் கோரிக்கையைக் கண்டுகொள்ளவில்லை.
இந்தியாவின் தொழில்துறை உற்பத்தியில் 45 சதவீதத்தை சிறு, குறு தொழில் நிறுவனங்கள் நிறைவு செய்கின்றன; இந்தியாவின் மொத்த ஏற்றுமதியில் 40 சதவீதம் சிறு, குறு தொழில் நிறுவனங்களைச் சார்ந்திருக்கிறது. 10.5 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு அளித்து வருவதும் சிறு, குறு தொழில் நிறுவனங்கள்தான். பெரும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு பல இலட்சம் கோடி ரூபாய் மூலதனத்தையும் பல இலட்சம் கோடி ரூபாய் வரிச் சலுகை களையும் அளித்திருக்கும் மோடி அரசு, இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த இத்துறைக்கு பட்ஜெட்டில் ஒதுக்கியிருப்பது, “இந்நிறுவனங்களுக்கு ஊக்க மூலதனம் அளிக்க 10 ஆயிரம் கோடி ரூபாய் கொண்ட நிதியம் உருவாக்கப்படும்” என்ற வாக்குறுதி மட்டும்தான்.
ரயில்வே துறையில் தாழ்த்தப்பட்டோர் மலம் அள்ளிவரும் அவலத்தை ஒழித்து, ரயில் பெட்டிகளிலுள்ள கழிப்பறைகளை நவீனப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையைக் கண்டுகொள்ளாத ரயில்வே பட்ஜெட், பெருநகர ரயில்வே நிலையங்கள் அனைத்திலும் “வைஃபி” இணைப்புப் பொருத்தப்படுவதற்கு முக்கியத்துவம் அளிக்கிறது. முன்பதிவு செய்யப்படாத பெட்டிகளை அதிகப்படுத்த வேண்டும் என்ற சாமானிய மக்களின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டு, ஏ.சி. பெட்டிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கத் திட்டம் போடுகிறது, ரயில்வே அமைச்சகம். இதற்காகத் தூங்கும் வசதி கொண்ட பெட்டிகளின் எண்ணிக்கையைக் குறைத்து, நடுத்தர வர்க்கத்தையும் புலம்ப வைத்துவிட்டது. சென்னையிலிருந்து தென்தமிழகம் செல்லும் தடத்தை இரட்டைப் பாதையாக மாற்றக் கோரும் நீண்ட நாள் கோரிக்கை புறக்கணிக்கப்பட்டு, 50,000 கோடி ரூபாய் செலவில் புல்லட் ரயில் விடுவதற்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.
அடிக்கட்டுமான வளர்ச்சி என்ற பெயரில் நகர்ப்புறங்களில் கட்டப்பட்டிருக்கும் பாலங்களும், விரைவுச் சாலைகளும், மிக நவீனமான விமான நிலையங்களும் சாமானிய மக்களின், கிராமப்புற விவசாயிகளின் குடிசைகளை, வாழ்வாதாரங்களைப் பறித்திருக்கிறதேயொழிய, அவர்களது வாழ்க்கையிலிருந்து வறுமையை விரட்டியடித்து விடவில்லை. வாஜ்பாயி காலத்தில் கொண்டுவரப்பட்ட தங்க நாற்கரண சாலை கட்டணக் கொள்ளையை நிரந்தரமாக்கியதேயொழிய, வேலைவாய்ப்புகளை நிரந்தரமாக்கவில்லை. மன்மோகன் சிங் ஆட்சியில் கட்டப்பட்ட டெல்லி மற்றும் மும்பய் விமான நிலையங்கள் கார்ப்பரேட் நிறுவனங்களின் பகற்கொள்ளைக்கும், ஊழலுக்கும் எடுத்துக்காட்டாக விளங்குகின்றன. பொதுத்துறை வங்கிகளின் வாராக் கடனில் 53 சதவீதம் கட்டுமான கார்ப்பரேட் நிறுவனங்கள் ஏப்பம் விட்டதாகும். மோடி அரசின் அடிக்கட்டுமான மற்றும் பி.பி.பி. திட்டங்கள் இதிலிருந்து வேறுபட்டதாக இருந்துவிடப் போவதில்லை.
இந்த பட்ஜெட் அடுத்த ஓரிரு ஆண்டுகளில் எட்டு சதவீத வளர்ச்சியைச் சாதிக்கும் நோக்கில் தயாரிக்கப்பட்டிருப்பதாக மோடியின் ஆதரவாளர்கள் கூறுகிறார்கள். 2008-க்கு முன்பு சாதிக்கப்பட்ட எட்டு சதவீத ‘வளர்ச்சி’ இரண்டு இலட்சத்துக்கும் அதிகமான விவசாயிகளைத் தற்கொலைக்கு தள்ளிவிட்டது. பல இலட்சக்கணக்கான விவசாயிகளை நடோடிகளாக நகர்ப்புறங்களை நோக்கி விசிறியடித்தது. உத்தரவாதமற்ற வேலையும், அற்பக்கூலியும், விலைவாசி உயர்வும் சாமானிய மக்கள் சந்திக்க வேண்டிய நிரந்தரப் பிரச்சினைகளாகின. இந்த நிலையில் மன்மோகன் சிங்கைவிடத் தீவிரமான தனியார்மய விசுவாசியான மோடி முன்னிறுத்தும் எட்டு சதவீத வளர்ச்சியைக் கற்பனை செய்து பார்ப்பதே மரண பயத்தை ஏற்படுத்துகிறது.
- செல்வம் vinvau.com

கருத்துகள் இல்லை: