வெள்ளி, 24 ஜனவரி, 2014

மகனை ஓரின சேர்க்கையில் ஈடுபடுத்த முனைந்ததன் காரணமாகவே கொலையாளியாக்கப்பட்டான்: கண்ணீர் மல்க தாயார்



தனது மகனை காப்பாற்ற யாரும் முன்வராத நிலை தொடர்பிலும் தாயார் கண்ணீர் மல்க தெரிவித்தார்.
2006ஆம் ஆண்டு காரினால் ஒருவரை மோதி கொலை செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்டு கடந்த 21ஆம் திகதி அதிகாலை சுட்டுக்கொலைசெய்யப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்ட கொம்மாதுறையினை சேர்ந்த கிருஸ்ணபிள்ளை ரவீந்திரன் நிரபராதியென அவரது தாயார் நாகரெட்னம் தெரிவித்தார்.
மட்டக்களப்பு செங்கலடி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கொம்மாதுறையானது மட்டக்களப்பு வாழைச்சேனை –மட்டக்களப்பு பிரதான வீதியில் வந்தாறுமூலையில் உள்ள கிழக்கு பல்கலைக்கழகத்துக்கு அடுத்ததாகவுள்ள கிராமமாகும்.

மிகவும் வறிய மக்கள் வாழும் கிராமமான இங்கிருந்து அதிகளவான இளைஞர் யுவதிகள் மத்திய கிழக்கு நாடுகளில் தொழில்புரிந்துவருகின்றனர்.
இங்கு கிருஸ்ணபிள்ளை  -நாகரெட்னம் தம்பதியினரின் மூன்றாவது பிள்ளையாக ரவீந்திரன் இருந்துவருகின்றார். இவர்கள் குடும்பத்தில் 11 பிள்ளைகள். இவர்களில் ஒருவர் 1988ஆம் ஆண்டு காலப்பகுதியில் இப்பகுதியில் செயற்பட்ட ஆயுதக்குழுவினால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். மூத்த பெண் மத்திய கிழக்கு நாடொன்றில் 1990ஆம் ஆண்டு கடமையாற்றிவந்த நிலையில் வீட்டில் சிலிண்டர் வெடித்து உயிரிழந்துள்ளார்.
தங்களது வீட்டின் வறுமை நிலைமை காரணமாகவே தங்களது பிள்ளைகளை வெளிநாடு அனுப்பினோம்.ஆனால் அவர்கள் பிணங்களாக திரும்பியமை தமக்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக உயிரிழந்தவரின் தாயார் தெரிவித்தார்.
தனது மூத்த மகள் மத்திய கிழக்கு நாடு ஒன்றில் வீட்டு பணிப்பெண்ணாக கடமையாற்றிய வேளையில் அந்த வீட்டில் இருந்து காஸ் சிலின்டர் வெடித்து உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டது. அவரது சாம்பலைக்கூட நாங்கள் காணவில்லை.
அவரை இழந்து நின்ற நாங்கள் இன்று எமது மகனையும் இழந்து அவரின் சடலத்தினையும் காணமுடியாதது வேறு எந்த தாய்க்கும் ஏற்படாத நிலையெனவும் தெரிவித்தார்.
கடந்த ஐந்தாம் திகதி டூபாய் சென்று சிறையில் தனது மகனை சந்தித்தபோது தான் நிரபராதியெனவும் தன்னைக்காப்பாற்றும்படியும் எங்களிடம் மன்றாடினார். தன்னை தனது எஜமானாரும் வேறு மூவரும் இணைந்து பாலைவனப்பகுதிக்கு அழைத்துச்சென்று அங்கு அவர்கள் மது அருந்திக்கொண்டிருந்தபோது தன்னை ஓரின சேர்க்கைக்கு அழைத்ததாகவும் அவர்களிடம் இருந்து தப்புவதற்காக காரை எடுத்து ஓட முயன்றபோது இந்த விபத்து சம்பவம் நிகழ்ந்ததாகவும் தெரிவித்தார்.
அவரை கைதுசெய்த பொலிஸாரிடமும் இதனை தெரிவித்துள்ளார். ஆனால் இவருக்கு பத்து வருடங்கள் சிறைத்தண்டனை என்றே தீர்ப்பு வழங்கப்பட்ட நிலையில் அவை திடிரென மாற்றப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
யாரோ தொலைபேசி அழைப்பு மூலம் வழங்கிய அழைப்பின் மூலமே தனக்கு மரண தண்டனை நிறைவேற்றப்படவுள்ளதாக தனது மகன் தெரிவித்ததாகவும் தாயார் தெரிவித்தார்.
இதேவேளை  சம்பவத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்தினரை சந்தித்து மன்னிப்புக்கோரி தனது சகோதரனுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை நிறுத்தலாம் என்று உயிரிழந்தவரின் குடும்பத்தினரை சந்திக்க முயற்சிசெய்தபோதும் நாங்கள் ஏமாற்றப்பட்டோம் என  மரண தண்டனை விதிக்கப்பட்டு உயிரிழந்த ரவீந்திரனின் சகோதரியான கோமளாவதி என்பவர் தெரிவித்தார்.
எனது சகோதரன் எமது குடும்ப நிலைமை காரணமாகவே வெளிநாட்டுக்காக தொழிலுக்காக சென்றார்.  இன்று அவரது மனைவியினைக்கூட    அவரது சடலத்தினை பார்க்க அனுமதிக்கவில்லை.இந்த கொலையில் எங்களுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் பல்வேறு தரப்பினரிமும் முறையிட்டும் எமக்கு நீதி கிடைக்கவில்லை.
எங்களது சகோதரனின் உடலையாவது இங்கு கொண்டுவர நடவடிக்கையெடுக்கவேண்டும்.   இது தொடர்பில் பல்வேறு தரப்பினரிடமும் முறையிட்டுள்ளோம்  .ஆனால் எதுவித சாதகமான பதில்களும் கிடைக்கவில்லை.எங்கள் சகோதரனின் முகத்தினை கடைசி ஒரு தடவையாவது பார்க்க ஏற்பாடுகளை செய்து தருமாறு கோரிக்கை விடுத்தனர்.

கருத்துகள் இல்லை: