திங்கள், 9 டிசம்பர், 2013

3000 ஏடிஎம் மையங்களில் குறைந்தபட்ச பாதுகாப்பு வசதிகளை கூட NO

பெங்களூரில் கடந்த மாதம் நடந்த ஏடிஎம் கொள்ளை சம்பவம் நாடு  முழுக்க பெரும் பீதியை கிளப்பியது. ஏடிஎம்மில் பணம் எடுக்க வந்த பெண் வங்கி அதிகாரியை, சைக்கோ திருடன் ஒருவன் சரமாரியாக கத்தியால் வெட்டியது ஏடிஎம் மைய சிசிடிவி கேமராவில் பதிவாகியது. இந்த வீடியோ டிவி சேனல்களிலும், பேஸ்புக், யூ டியூப் என சமூக வலைதளங்களிலும் பரபரப்பாக பேசப்பட்டது. இந்த சம்பவத்துக்கு பிறகு கூட சென்னையில் உள்ள ஏடிஎம் மையங்களில் பாதுகாப்பு வசதிகளை ஏற்படுத்த எந்த வங்கியும் ஒரு நடவடிக்கை கூட எடுக்கவில்லை என்பது தான் வேதனையானது. ‘இது எங்களின் 10,020வது ஏடிஎம் மையம்‘ என பெருமையாக மார்தட்டிக் கொள்ளும் வங்கிகள், அதில் மக்களுக்கு தேவையான குறைந்தபட்ச பாதுகாப்பு வசதிகளை கூட செய்வதில்லை என்பதுதான் வேதனை. அதிலும், பெங்களூர் போன்ற மிரட்டும் சம்பவங்கள் நடந்த பிறகும் வங்கிகள் மாறாதது பொதுமக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை நகரத்தை பொறுத்த வரை சுமார் 3000 ஏடிஎம் மையங்கள் உள்ளன. சந்து, பொந்து என எங்கு பார்த்தாலும் ஏதாவது ஒரு ஏடிஎம் இருக்கத்தான் செய்கிறது. இவற்றில் 100க்கு 90 சதவீதம் ஏடிஎம் மையங்களில் காவலாளி இருப்பதே இல்லை. அப்படியே காவலாளி இருந்தாலும், அவருக்கே ஒருவர் பாதுகாப்பு தர வேண்டிய நிலையில்தான் இருக்கிறார். ஆட்டோமேட்டிக் கதவு என்றாலும் அவைகள் முறையாக இயங்குவதில்லை.

எப்போதும் திறந்தே கிடக்கிறது. இதனால், புறநகர் பகுதிகளில் இரவு நேரங்களில் பெண்கள் அச்சத்துடனே ஏடிஎம் மையங்களில் சென்று வருகின்றனர்.
இந்நிலையில், ஏடிஎம்களில் பாதுகாப்பு வசதிகள் குறித்து வங்கி உயர் அதிகாரிகளுடன் போலீஸ் உயர் அதிகாரிகள் நடத்திய ஆலோசனை கூட்டம் சமீபத்தில் நடைபெற்றது. இதில், வரும் 31ம் தேதிக்குள் எல்லா ஏடிஎம் மையங்களிலும் காவலாளிகளை நியமிக்க  வேண்டும் என வங்கிகளுக்கு போலீசார் கெடு விதித்துள்ளனர். மேலும், ஏடிஎம்களில் குற்றசம்பவங்கள் நடப்பதை தடுக்க வங்கிகளுக்கு பல்வேறு நிபந்தனைகளையும் போலீசார் விதித்துள்ளனர். அவைகளில் சில...
இனியாவது வங்கி ஏடிஎம்களில் காவலாளிகள் நியமிக்கப்படுவார்களா?

*   ஏடிஎம் மையங்களில் சிசிடிவி கேமரா பொருத்துவதோடு மட்டும் இல்லாமல், வெளியிலும் கேமராவை பொருத்த வேண்டும்.

*  ஒவ்வொரு ஏடிஎம்களிலும் காவலாளி நியமிப்பது அவசியம். துப்பாக்கி ஏந்திய திடகாத்திரமான ஓய்வு பெற்ற ராணுவ வீரராக காவலாளி இருக்க வேண்டும். வரும் 31ம் தேதிக்குள் அனைத்து வங்கிகளும் தங்கள் ஏடிஎம் மையத்துக்கு காவலாளியை நியமிக்க வேண்டும்.

*  ஒரு சமயத்தில் ஒருவரை மட்டுமே ஏடிஎம் மையத்துக்குள் அனுமதிக்க வேண்டும்.

*  ஏடிஎம்மில் நடக்கும் சம்பவங்களை வெளியில் இருந்தும் தெளிவாக பார்க்கும் விதமாக கண்ணாடி கதவுகள் அமைக்கப்பட வேண்டும். சூரிய ஒளியை தடுக்க சன்-கன்ட்ரோல் பிலிம் கண்டிப்பாக ஒட்டக் கூடாது.

*  ஆட்டோமேடிக் கதவுகள் கண்டிப்பாக பொருத்தப்பட வேண்டும். எந்நேரமும் அவை செயல்பட வேண்டும். ஏடிஎம் கார்டை நுழைத்தால் மட்டுமே கதவு திறக்க வேண்டும்.

*  ஷிப்ட் முறையில் காவாலாளிகள் நியமிக்கப்பட வேண்டும். இரவு நேரங்களில் அவர்கள் முறையாக பணியாற்றுகிறார்களா என்பதையும் வங்கி நிர்வாகம் அவ்வப்போது கண்காணிக்க வேண்டும். இவ்வாறு போலீசார் ஆலோசனை வழங்கியுள்ளனர்.


வங்கி உயர் அதிகாரிகளை போல காவலாளிகளை நியமிக்கும் செக்யூரிட்டி ஏஜென்சி நிறுவனங்களுடனும் போலீசார் ஆலோசனை நடத்தி உள்ளனர்.
இது குறித்து போலீஸ் உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘பொதுவாக சென்னையில் கட்டிட வேலையில் தொடங்கி ஹோட்டல், ஷாப்பிங் மால் என எல்லா சின்ன சின்ன வேலைக்கும் வடமாநில இளைஞர்கள் அதிகம் வேலையில் அமர்த்தப்படுகின்றனர்.

இதற்கு காவலாளி வேலை கூட விதிவிலக்கில்லை. செக்யூரிட்டி ஏஜென்சிகள் வடமாநிலத்தை சேர்ந்தவர்களை தனியார் நிறுவனங்கள் மற்றும் ஏடிஎம்களில் பாதுகாப்பு பணியில் ஈடுபட செய்கின்றனர். அவர்களில் சிலர் குற்ற சம்பவங்களில் ஈடுபட்டவர்களாக இருக்கின்றனர். சமீபத்தில், திரிபுராவில் சிறுமியை பலாத்காரம் செய்த 3 பேர் சென்னை ஏடிஎம்மில் காவலாளியாக பணிபுரிவது கண்டுபிடிக்கப்பட்டு அவர்கள் கைதாகினர். இதனால், வேறு மாநிலத்தவரை வேலைக்கு அமர்த்தும் போது அவர்கள் சொந்த ஊரில் இருந்து போலீசாரிடம் நற்சான்றிதழ் வாங்கி வர வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஒவ்வொரு காவலாளியை நியமிக்கும் போதும், அவர்களின் நடத்தை பற்றி முழுமையாக தெரிந்து கொண்ட பின்னரே வேலை வழங்க வேண்டுமெனவும் கூறப்பட்டுள்ளது’ என்றார். dinakaran.com 

கருத்துகள் இல்லை: