வியாழன், 12 டிசம்பர், 2013

உருகுவேயில் கஞ்சாவுக்கு சட்டப்பூர்வ அனுமதி ! உலகிலேயே முதல் நாடு

மாண்டிவிடியோ,

கஞ்சாச்செடியை வளர்க்கவும், கஞ்சாவை விற்பனை செய்யவும், பயன்படுத்தவும் எந்தவொரு நாட்டிலும் சட்டப்பூர்வ அனுமதி இல்லை. இந்த நிலையில் தென் அமெரிக்க நாடான உருகுவேயில் கஞ்சாவுக்கு சட்டப்பூர்வ அனுமதி அளிப்பதற்கான மசோதா, பாராளுமன்றத்தில் கடந்த ஆகஸ்டு மாதமே நிறைவேறியது. செனட் சபையில் இந்த மசோதா நிறைவேற வேண்டி இருந்தது.
இப்போது செனட் சபையிலும் மசோதா நிறைவேறி விட்டது. மசோதாவுக்கு ஆதரவாக 16 வாக்குகளும், எதிராக 13 ஓட்டுக்களும் விழுந்தன.
கஞ்சா சட்டப்பூர்வமாக்கப்பட்டிருப்பதால், 18–வயதான கஞ்சா உபயோகிக்கிறவர்கள் மாதம் ஒன்றுக்கு 40 கிராம் கஞ்சா வாங்கிக்கொள்ளலாம்.
கஞ்சா விற்பனை அதற்கான உரிமம் பெற்ற மருந்துக்கடைகளில் மட்டுமே நடைபெறும். கஞ்சா பயன்படுத்துகிறவர்கள் தங்கள் பெயரை அரசிடம் பதிவு செய்து கொள்ள வேண்டும். மாதம் ஒன்றுக்கு அவர்கள் எவ்வளவு கஞ்சா வாங்குகிறார்கள் என்பது கண்காணிக்கப்படும். 120 நாளில் (ஏப்ரல் மாதம்) இந்த சட்டம் அமலுக்கு வரும்.
இந்த சட்டம் அமலுக்கு வந்த பின்னர், ஒருவர் தனது வீட்டில் ஆண்டுக்கு 6 கஞ்சா செடி வளர்க்க முடியும். அதாவது 480 கஞ்சா உற்பத்தி செய்ய முடியும். கஞ்சா புகை பிடிப்போர் விடுதிகளில் ஆண்டுக்கு 99 கஞ்சா செடிகள் வளர்க்கலாம்.
கஞ்சாவுக்கு சட்டப்பூர்வ அனுமதி வழங்கப்பட்டிருப்பது குறித்து உருகுவே செனட் சபையின் பெண் உறுப்பினர் ஒருவர் கூறுகையில், ‘‘ஏப்ரல் மாதம் முதல் புதிய அனுபவத்தைப் பெறப்போகிறோம். இது பெரிய கலாசார மாற்றத்துக்கு வித்திடும். இதன் மூலம் போதைப்பொருட்கள் கடத்தல் முடிவுக்கு வரும்’’ என்றார். dailythanthi.com

கருத்துகள் இல்லை: