வியாழன், 12 டிசம்பர், 2013

சென்னையில் பார்ப்பன நீதிபதிகள் ஆதிக்கம்! மேலும் இரு பார்ப்பன பெண்நீதிபதிகளா?

சென்னை உயர்நீதிமன்றத்தில் ஏற்கெனவே பார்ப்பன நீதிபதிகளின் ஆதிக்கம் நிறைந்துள்ள நிலையில், பெண் நீதிபதிகள் என்ற பெயரால் மேலும் இரண்டு பார்ப்பனப் பெண்கள் நியமனம் செய்யப்பட இருப்பதை எதிர்த்து, நீதிபதிகள் நியமனத்தில் இதுவரை வாய்ப்பு மறுக்கப்பட்ட பிரிவினருக்கு வாய்ப்பு அளிக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி, வரும் 16ஆம் தேதி சென்னையிலும், மதுரையிலும் திராவிடர் கழகத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு: சென்னை உயர்நீதிமன்றத்திற்கு அனுமதிக்கப் பட்டுள்ள நீதிபதிகளின் எண்ணிக்கை 60ஆகும்.
இதில் தற்போது - ஓய்வு பெற்ற நீதிபதிகள் நீங்கலாக - காலியாக உள்ள நீதிபதிகளின் எண்ணிக்கை 14 ஆகும்.
மூத்த உயர்நீதிமன்ற நீதிபதிகளுடன் தலைமை நீதிபதியும் இணைந்த 3 நீதிபதிகள்தான் கொலிஜியம் என்ற முறையில், தங்களுக்குத் தாங்களே (அரசியல் சட்ட விதிகளில் இல்லை என்றாலும் எப்படியோ, நீதிமன்ற அறிவுரை, ஆலோசனை கருத்துரைகள் என்ற கொல்லைப் புற வழியே இது உருவாக்கப்பட்டு கடந்த சில ஆண்டுகளாகவே நடைமுறையில் உள்ளது) தேர்வு செய்கிறார்கள்.
தமிழ்நாட்டில் வெளி மாநிலங்களிலிருந்து தலைமை நீதிபதி வருபவராக உள்ளார்; அவருடன் மூத்த (சீனியர்) உயர்நீதிமன்ற நீதிபதிகள் இருவர் இணைந்து கொலி ஜியம் ஆகி, காலியாகும் நீதிபதி பதவிகளுக்கு பரிந்துரை செய்கின்றனர்.
மாநில முதல் அமைச்சர்கள் ஒப்புதல் முக்கியம் அல்லவா?
சட்டப்படி - உயர்நீதிமன்றத்தின் செலவுக்குப் பணம் - நிதி தரும் (தமிழக) மாநில அரசின் தலைமையான முதல் வருக்கே கூடத் தெரியாத அளவுக்கு இந்த நீதிபதிகளின் நியமனப் பரிந்துரைப் பட்டியல் நேரே உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதிக்கு அனுப்பப்படுகிறது. அங்கே கொலிஜியம் முதல் நான்கு நீதிபதிகளாக இருந்து அவர்களின் ஏற்புதலுக்குப் பிறகு மத்திய அரசுக்கு - குடி அரசுத் தலைவருக்குச் செல்லுகிறது. பழைய முறையில், அரசியல் சட்டத்தின் விதிமுறைப்படி மாநில ஆட்சித்
தலைமையிடம் ஒப்புதல் பெற வேண்டும்;
பிறகு ஒப்புதல் தேவையில்லை - கலந்து ஆலோசித் தால் போதும் என்றாக்கப்பட்டது;
Instead of “Concurrence” “Consulting” என்பதாக மாற்றப்பட்ட சில உச்சநீதிமன்ற தீர்ப்புகள் மூலம் இந்த கொலிஜியம் முறையில், நியமனம் நடைமுறைக்கு வந்து விடுகிறது.
இதனால் வெளி மாநிலத்திலிருந்து வரும் தலைமை நீதிபதிகளுக்கு அந்தந்த மாநிலத்தில் உள்ள வழக்குரை ஞர்கள், பற்றியோ அல்லது மாவட்ட நீதிபதிகள் பற்றியோ சரியான புரிதலுக்குரிய வாய்ப்பு மிகவும் குறைவு.
இன்றுள்ள நடைமுறை சரிதானா?
இங்குள்ள மூத்த நீதிபதிகள் இருவரின் பரிந்துரை களே பெரிதும் நியமனத்திற்குரிய காரணியாக அமைந்து விடுகின்றன.
இதில் மூத்தவர்கள் என்ற முறையில் அந்த இருவரும்கூட வெளி மாநில நீதிபதிகளாக அமைந்துள்ள நிலைதான் சென்னை உயர்நீதிமன்றத்திலேயே உள்ளது. இங்கே கொலிஜியம் எப்படி அமைந்துள்ளது என்றால்
1. தலைமை நீதிபதி ஜஸ்டீஸ் திரு அகர்வால் வெளி மாநிலத்தைச் சேர்ந்தவர்.
2. ஜஸ்டீஸ் சதீஷ் அக்னிஹோத்திரி, வெளிமாநிலத்தவர்.
3. ஜஸ்டிஸ்  திருமதி சித்ரா வெங்கட்ராமன் ஆகியோர்.
மூன்று நீதிபதிகளில் இரண்டு பேர் பார்ப்பன நீதிபதிகள்.
சென்னை உயர்நீதிமன்றத்தில் பார்ப்பன நீதிபதிகளின் ஆதிக்கம்
தமிழ்நாட்டு நீதிமன்றத்தில் சமூகநீதி ஏற்கெனவே முந்தைய பரிந்துரைப் பட்டியலிலேயே புறக்கணிக்கப்பட்ட நிலைதான்!
8 பேர்களை பரிந்துரை செய்ததில் அது கடும் விமர் சனத்திற்கு ஆளாகியது; பிறகு வந்த நியமன ஆணை களில்கூட (மொத்தம் 6,7 பேர் என்ற நிலையில்) 2 பார்ப்பனர்கள் நீதிபதிகளாகி விட்டனர்!
ஏற்கெனவே பார்ப்பன நீதிபதிகளின் எண்ணிக்கை அவர்களது விகிதச்சாரத்திற்கு மேல் பன்மடங்கு அதிகம் உள்ள நிலையில், இந்த இரண்டும்கூடச் சேர்ந்து ஆறு பார்ப்பனர்கள் நீதிபதிகளாக உள்ளனர்!
மலைவாழ் மக்கள், மீனவர் சலவையாளர், மருத்துவர்களுக்கு வாய்ப்பு மறுக்கப்படுவது ஏன்?
தமிழ்நாட்டில் இதுவரை நீதிபதிகளாகவே பிரதிநிதித் துவம் இல்லாத ஒடுக்கப்பட்ட சமுதாயமான மீனவர், சலவையாளர், மருத்துவர், தாழ்த்தப்பட்ட மலைவாழ் மக்கள் (S.T) போன்றவர்களில் பல திறமைவாய்ந்த வழக்குரைஞர்கள் இருந்தும்கூட அவர்களின் பெயர்கள் பரிசீலிக்கப்பட்டதாகவே தெரியவில்லை.
உச்சநீதிமன்றத்தில் உள்ள 31 நீதிபதிகளில் ஒரே ஒரு தாழ்த்தப்பட்ட சமுதாயத்து நீதிபதிகூட இல்லாததும், பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட நீதிபதிகளும் போதிய அளவுக்கு (Adequate Representation)  இல்லாத தும் சமூக அநீதி அல்லவா?
உயர்நீதிமன்றங்களில் மூத்த நீதிபதிகள் S.C.யில் இருக்கின்றனரே; தமிழ்நாட்டில் உள்ளனரே;  அவர்களுக்கு வாய்ப்புத் தரலாமே!
அதுபோலவே பிற்படுத்தப்பட்ட நீதிபதிகளும், உயர்நீதிமன்றத்திலிருந்து உச்சநீதிமன்றத்திற்கு நியமனம் செய்யப்படுதல் வேண்டும்.
இதற்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியும், மத்திய அரசும் சரியான பரிகாரம் தேடிடவும், சம வாய்ப்பும், சமூக நீதியும் அனைத்து சமூகத்தவருக்கும் இடம் கிடைக்கவும் வாய்ப் புகள் புதிய நியமனப் பரிந்துரைகளில் கிட்ட வேண்டும்.
மேலும்  இரு பார்ப்பனப் பெண் நீதிபதிகளா?
புதிதாக 5,6 நீதிபதிப் பதவிகளை நிரப்பத் தயாரிக்கப் பட்டுள்ள புதுப் பட்டியலில் ஏற்கெனவே இருந்த பார்ப்பன  நீதிபதிகள் எண்ணிக்கையை அதிகப்படுத்தும் வகையில் மதுரையிலிருந்து ஒரு பார்ப்பன  அம்மையார், டில்லியி லிருந்து மற்றொரு பார்ப்பன அம்மையார் ஆகிய இருவ ரின் பெயர்களும் இடம் பெற்றுள்ளதாக, உயர்நீதிமன்ற வட்டாரங்களில் பேச்சுகள் பலமாக உலவுகின்றன!
ஏற்கெனவே 6 பேர்; மேலும் இரண்டு பார்ப்பனர்களா?
இது உண்மையாக இருந்தால், அது சமூகநீதியாளர் களின் உண்மையான கண்டனத்திற்குரியது; எதிர்ப்புக் காட்டி சமூக அநீதியைத் தடுத்து நிறுத்த வேண்டும்.
சென்னையிலும், மதுரையிலும் ஆர்ப்பாட்டம்
முதற்கட்டமாக, வருகிற 16ஆம் தேதி அன்று சென்னையிலும், மதுரையிலும், நீதித்துறையில் சமூக நீதியை நிலை நாட்டும் வண்ணம் பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
பெண்கள் என்றால் பார்ப்பனரல்லாத பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட - இதுவரை வாய்ப்பு தரப்படாத சமூகங்கள், ஜாதிகளைச் சார்ந்த அனுபவம் மிக்க பெண் வழக்குரைஞர்களுக்கா பஞ்சம்? பின் ஏன் மீண்டும் இரண்டு பார்ப்பனப் பெண்கள் சிபாரிசு? கேட்க நாதி இல்லையா? உடனே இதில் சம்பந்தப்பட்டவர்கள் தலையிட்டு நீதி வழங்க முன்வர வேண்டும்.

கருத்துகள் இல்லை: