வெள்ளி, 2 ஆகஸ்ட், 2013

பொதுசொத்து சேத வழக்கில் இருந்து ராமதாசை விடுவிக்க வேண்டுமாம் ? ஜாதி அதிகாரிகள் ஆலோசனை !

சென்னை: பொது சொத்து சேதத்திற்கு, இழப்பீடு கோரும் வழக்குகளில்
இருந்து, பா.ம.க., நிறுவனர் ராமதாசை விடுவிக்கக் கோரி, மனு தாக்கல் செய்துள்ள நிலையில், அவரை விடுவிப்பது சாத்தியமா என்பது குறித்து, அதிகாரிகள் மட்டத்தில், ஆலோசனை நடந்து வருகிறது.சென்னையை அடுத்த, மாமல்லபுரத்தில் நடந்த, வன்னியர் இளைஞர் பெருவிழா, மரக்காணம் மோதல், தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்த முயன்ற, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ், கைதைத் தொடர்ந்து, வட மாநிலங்களில் வன்முறை நடந்தது. இதையடுத்து, "தமிழ்நாடு சொத்துக்கள் (சேதம் மற்றும் இழப்பு தடுப்பு) சட்டம் - 1992'ன்படி, இழப்பீட்டுத் தொகையை, பா.ம.க.,வினரிடமிருந்து பெற, அரசு நடவடிக்கையை முடுக்கி விட்டுள்ளது. ஆயிரத்துக்கும் மேற்பட்ட வழக்குகள் போடப்பட்டு, வருவாய் துறை நிர்வாக ஆணையர் ஸ்ரீதர், சிவில் நீதிபதியாக இருந்து, வழக்குகளை விசாரித்து வருகிறார். பா.ம.க., நிறுவனர் ராமதாஸ், மாநிலத் தலைவர் மணி, வன்னிய சங்கத் தலைவர் காடுவெட்டி குரு மீது தான், அதிக வழக்குகள் உள்ளன.

இவர்களுக்கு சம்மன் அனுப்பப்பட்டு, விசாரணை நடந்து வருகிறது. இதுவரை, 229 வழக்குகள் விசாரணைக்கு வந்துள்ளன. மீதமுள்ள வழக்குகளும், அடுத்தடுத்து விசாரணைக்கு வர உள்ளன. இந்த வழக்குகளில், பா.ம.க., கோர்ட்டுக்கு போக முடியாத சூழல் ஏற்பட்டுள்ள நிலையில், வழக்குகளிலிருந்து, பா.ம.க., நிறுவனர் ராமதாசை விடுவிக்க வேண்டும் என்ற கோரிக்கையை, பா.ம.க., முன் வைத்துள்ளது.
இதுகுறித்து பா.ம.க., வழக்கறிஞர் பாலு கூறுகையில், ""பொது சொத்து இழப்பு சட்டத்தின் படி, ஒரு இயக்கத்திடம் இழப்பீடு பெற வேண்டுமானால், அந்த இயக்கத்தின் தலைவர், பொறுப்பேற்க வேண்டும். பா.ம.க., சார்பில், மாநிலத் தலைவர் கோ.க.மணி, அதற்கு தயாராக இருக்கும் பட்சத்தில், பா.ம.க., நிறுவனர் ராமதாசை விடுவிக்க வேண்டும் என்பதே எங்கள் வாதம். இதற்காக, ஆணையரகத்தில் மனு தாக்கல் செய்துள்ளோம்,'' என்றார்.

இதுகுறித்து, வருவாய்த் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: பொது சொத்து சேதத்துக்கு, அவர்களிடமிருந்தே இழப்பீடு பெறும் வகையிலான சட்டத்தின் படி, நடவடிக்கை எடுப்பது, இதுவே முதல் முறை. அரசு இதில் உறுதியாக உள்ளது. பா.ம.க.,வைப் பொறுத்தவரை, கட்சியின் நிறுவனரான ராமதாஸ் தான், முக்கியமானவர். அடுத்து, கட்சித் தலைவர் மணி வருகிறார். வன்னியர் சங்க இளைஞர் பெருவிழா என்பதால், காடுவெட்டி குரு வருகிறார். இந்த அடிப்படையில் தான், வழக்குகளில் சேர்க்கப்பட்டு, சம்மன் அனுப்பப்படுகிறது. வழக்குகளில் சம்பந்தப்பட்டவர் தான் ஆஜராக வேண்டும் என்பது இல்லை; இதில், அவர் சார்பில் வழக்கறிஞர் ஆஜராகலாம். அப்படியிருக்க, ராமதாசை வழக்கிலிருந்தே விடுவிக்க வேண்டும் எனக் கோருவது சரியானது அல்ல. இருந்த போதிலும், பா.ம.க., வழக்கறிஞர்கள் தாக்கல் செய்த மனு குறித்து, ஆய்வு நடந்து வருகிறது. அரசு உயர் அதிகாரிகள், சட்ட நிபுணர்களுடன் கலந்தாலோசிக்கப்பட்டு வருகிறது. அதன்பிறகே, வழக்கிலிருந்து ராமதாசை விடுவிக்கக் கோரும் மனு மீது, ஆணையம் இறுதி முடிவு எடுக்கும். இவ்வாறு, அவர் கூறினார்.dinamalar.com

கருத்துகள் இல்லை: