செவ்வாய், 30 ஜூலை, 2013

தனி தெலுங்கான உதயம் ! ஹைதராபாத் பொது தலைநகரமாக தொடர்ந்து இருக்கும்

டெல்லி: நாட்டின் புதிய மாநிலமாக தெலுங்கானா உதயமாகிறது. தெலுங்கானா வட்டார மக்களின் 60 ஆண்டுக் கோரிக்கை நிறைவேறியது. 1953&ம் ஆண்டு மொழிவாரி மாநிலம் அமைக்கபட்ட போது தனித்தெலுங்கானா கோரிக்கை எழுந்தது. 1956&ம் ஆண்டு ஆந்திர மாநிலம் அமைக்கப்பட்டபோது தெலுங்கானா பகுதியும் இனைக்கப்பட்டது. தெலுங்கானா மக்களின் கோரிக்கையை ஏற்று தனி மாநிலம் அமைப்பதற்கு காங்கிரஸ் கட்சி மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் இன்று ஒருமனதாக ஒப்புதல் தெரிவித்துள்ளன. ஆந்திராவைப் பிரித்து 10 மாவட்டங்களை உள்ளடக்கி தனித் தெலுங்கானா மாநிலம் அமைக்க வேண்டும் என்ற நீண்ட கால போராட்டம் முடிவுக்கு வந்துள்ளது.


டெல்லியில் இன்று மாலை ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் தேசியவாத கட்சித் தலைவர் சரத்பவார், ராஷ்டிரிய லோக் தளத் தலைவர் அஜீத்சிங் ஆகியோர் இப்புதிய மாநில உருவாக்கத்துக்கு ஆதரவு தெரிவித்தனர். பின்னர் காங்கிரஸ் கட்சியின் காரியக் கமிட்டிக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தின் தெலுங்கானா தனி மாநிலம் அமைப்பதற்கு ஒருமனதாக ஆதரவு தெரிவிக்கப்பட்டது.

தனித் தெலுங்கானா மாநிலம் அமைப்பதற்கு காங்கிரஸ் மற்றும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் ஒருங்கிணைப்புக் குழு ஒப்புதல் தெரிவித்துள்ளதை தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சி வரவேற்றுள்ளது. தெலுங்கானா தனி மாநிலம் உதயமாவதைத் தொடர்ந்து அடுத்த கட்ட நடவடிக்கை தொடர்பாக ராயலசீமா காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் நாளை ஆலோசனை நடத்த உள்ளனர். தெலுங்கானா தனி மாநிலம் உதயமாவதால் சீமாந்த்ரா எனப்படும் கடலோர ஆந்திரா, ராயலசீமா பகுதிகளில் போராட்டங்கள் வெடித்துள்ளன. அங்கு துணை ராணுவப் படையைச் சேர்ந்த 1,200 பேர் ஏற்கெனவே குவிக்கப்பட்டுள்ளனர். அத்துடன் மேலும் 1,000 பேரை கொண்ட துணை ராணுவம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. கர்நாடகா ஆயுதப் படை போலீசார், தமிழக ஆயுதப் படை போலீசார் ஆகியோரும் ஆந்திரா, தெலுங்கானா பகுதிகளில் குவிக்கப்பட்டுள்ளனர்.

கருத்துகள் இல்லை: