திங்கள், 29 ஜூலை, 2013

பிரிக்கப்படும் ஆந்திரா.. புது பெயர்கள் சர்ச்சை? சீமாந்த்ரா, ராயல தெலுங்கானா, ஹைதராபாத்!

ஹைதராபாத்: ஆந்திராவில் உச்சகட்ட பரபரப்பு... மாநிலம் 2 ஆக பிரிக்கப்படுவது உறுதியாகிவிட்டது.. பிரிவினைக்கு எதிராக ஆதரவாக குரல்கள் உரத்து ஒலிக்கின்றன. ஆந்திர மாநிலத்தைப் பொறுத்தவரை 3 பகுதிகள் உள்ளன. தெலுங்கானா, கடலோர ஆந்திரா, ராயலசீமா ஆகிய மூன்றையும் உள்ளடக்கியதுதான் ஆந்திர மாநிலம். 1956ஆம் ஆண்டு சென்னை மாகாணத்தில் இருந்து ஆந்திரா தனி மாநிலமாக பிரிக்கப்பட்ட போது தெலுங்கானா தனி பிரதேசமாகவே இருந்தது. பின்னர் தெலுங்கானா பகுதியும் சில கோரிக்கைகளுடன் ஆந்திராவுடன் இணைக்கப்பட்டது. ஆனால் தொடர்ந்தும் தெலுங்கானா பகுதி புறக்கணிக்கப்படுவதாகக் கூறி கடந்த அரை அரை நூற்றாண்டு காலமாக தனி மாநிலம் கோரி போராடி வருகின்றனர். இதன் கிளைமாக்ஸாக தற்போது ஆந்திரா பிரிக்கப்படுவது உறுதியாகி இருக்கிறது. இருப்பினும் போராட்டக்காரர்கள் கோருவது போல் தனி தெலுங்கானாவாக இல்லாமல் ராயலசீலமாவின் 2 மாவட்டங்களை உள்ளடக்கி 'ராயல தெலுங்கானா'வை உருவாக்க முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. இது பெரும் சர்ச்சையை கிளப்பியிருக்கிறது. அதாவது 10 தெலுங்கானா மாவட்டங்களுடன் இரண்டே இரண்டு ராயலசீமா மாவட்டங்கள்தானே இணைகிறது.. அதற்காக 'ராயல' தெலுங்கானா என்று வைப்பீர்களா? என்று கேட்கிறது தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி. அத்துடன் தெலுங்கானா தவிர்த்த எஞ்சிய ஆந்திர பகுதிக்கு என்ன பெயர் என்பதிலும் சர்ச்சை வெடித்திருக்கிறது. தெலுங்கானா தவிர்த்த பகுதிக்கு 'ஹைதராபாத்' என்ற பெயர் வைக்கலாமா என்று காங்கிரஸ் மேலிடம் பரிசீலித்தது. ஆனால் ஆந்திர மாநில காங்கிரஸ் தலைவர்களோ, ஹைதராபாத் நிஜாம் ஆட்சிக்காலத்தை நினைவூட்டுவதாகக் கூறி இதை நிராகரித்துவிட்டனர். அப்படியானால் 'சீமாந்த்ரா' என்று வைக்கலாமா என்று பரிசீலிக்கப் போய் கடலோர ஆந்திராவின் 9 மாவட்டங்களுடன் ராயலசீமாவின் 2 மாவட்டங்கள்தானே இணைகிறது.. அப்படியெனில் எதற்கு சீமாந்த்ரா? பேசாமல் 'ஆந்திரபிரதேசம்' என்றே வைக்கலாமே என்றும் ஒரு தரப்பு போர்க்கொடி தூக்கியிருக்கிறது.. இத்தகைய சர்ச்சைகளால் ஆந்திராவில் பதற்றம் தொடர்கிறது.
oneindia.in

கருத்துகள் இல்லை: