வெள்ளி, 2 ஆகஸ்ட், 2013

இந்திய சாலைகளின் ராஜா! Ambassador !

யானையின் கம்பீரம். புலியின் பாய்ச்சல். இந்த இரண்டின் பெருமையான கலவைதான் அம்பாஸடர் கார். வெளிநாடுகளில் இந்தியா என்றாலே அம்பாஸடரும் நினைவுக்கு வரும் வகையில் நம் நாட்டை பிரதிநிதித்துவப்படுத்தும் வாகனம். இந்தியாவில் அதிகாரத்தை அடையாளப்படுத்தும் சிகப்பு விளக்கு, மற்ற எந்த வாகனத்தையும் விட அம்பாஸடரின் தலைக்குதான் பொருத்தமாக அமைகிறது.அம்பாஸிடர் என்றால் அப்படியொரு நம்பிக்கை. பாதுகாப்பான கார் என்பதால் மட்டுமல்ல, அம்பாஸடரில் வருபவர்கள் நாணயமானவர்கள் என்று அனைவரும் நம்புமளவுக்கும் கூட (எனவேதான் டிசம்பர் 2001ல் பாராளுமன்றத்தை தாக்கிய தீவிரவாதிகள் அம்பாஸடர் காரை பயன்படுத்தினார்கள். சிகப்பு விளக்கு பொருத்தப்பட்ட அம்பாஸடரை இந்தியாவில் எந்த காவலருமே மறித்து சோதிக்கமாட்டார்கள் என்று தீவிரவாதிகளுக்கு தெரியும்). ambassador


இரண்டாம் உலகப்போர் முடிந்த நிலையில் 1948ஆம் ஆண்டு ஹிந்துஸ்தான் மோட்டார்ஸ் நிறுவனம் தொடங்கப்பட்டது. பிரிட்டிஷ் தயாரிப்பான மோரிஸ் ஆக்ஸ்போர்ட் காரை பிரதியெடுத்து லேண்ட் மாஸ்டர் என்றொரு காரை முதன்முதலாக உருவாக்கினார்கள். ஐம்பதுகளின் இறுதியில் அம்பாஸடர் என்கிற பெயரோடு மார்க்-1 வகை கார்கள் சாலைகளுக்கு வந்தது. ‘இந்தியனாக இருப்போம், இந்தியப் பொருட்களையே வாங்குவோம்’ என்கிற கோஷம் பிரபலமாக ஒலித்துக் கொண்டிருந்த அந்த காலத்தில் முழுக்க இந்தியத் தயாரிப்பாக வந்த அம்பாஸடர் பெரும் வெற்றி கண்டது.

1500 சிசி ஆற்றல். மணிக்கு 110 கி.மீ. வேகத்தில் பறக்கலாம் என்கிற அம்பாஸடரின் ஆற்றலும் கார் பிரியர்களை கவர்ந்தது. ஒரு பெரிய குடும்பமே தாராளமாக நெருக்கடி இல்லாமல் அமரலாம். அதிகமான பயணச்சுமைகளை டிக்கியில் அடுக்கலாம். பொலிவான ‘ராயல்’ தோற்றம். நிலச்சுவான்தார்களும், பண்ணையார்களும், அதிகாரிகளும், அரசியல் தலைவர்களும் போட்டி போட்டுக்கொண்டு அம்பாஸடரை வாங்கினார்கள். வீட்டுக்கு முன்பாக ஒரு கார் நிற்பது குடும்பத்தின் கவுரவத்தை பறைசாற்றும் அம்சமாகவும் அப்போது கவனிக்கப்பட்டது.

64ல் மார்க்-2 கொஞ்சம் மாற்றங்களோடு அறிமுகப்படுத்தப்பட்டது. அடுத்த பத்தாண்டுகளுக்கும் மேலாக இந்திய சாலைகளின் ராஜா இதுதான். 75ல் மார்க்-3. அப்போதைய விலை ரூ.18,000/-தான். நான்கே ஆண்டுகளில் 79ல் மார்க்-4 சாலைகளில் ஓடத்தொடங்கியது. 1990 வரை இதே மாடல்தான்.

இந்த காலக்கட்டத்தில் மோட்டார் வாகனம் என்றாலே அம்பாஸடர்தான் என்று மக்களின் மனதில் அழுத்தமாக பதிந்திருந்தது. டாக்ஸியிலிருந்து, குடும்ப உபயோகம் வரை அம்பாஸடரே வசதியாக இருந்தது. போட்டி நிறுவனங்களில் தொல்லையை அனாயசமாக முறியடித்தது அம்பாஸடர். ஃபியட் நிறுவனத்தின் ப்ரீமியர் பத்மினி போன்ற கார்கள் சந்தைக்கு வந்திருந்தாலும், வடிவமைப்பில் எந்த பெரிய மாற்றங்களையும் செய்யாமல் அம்பாஸடரின் கொடி உயரப் பறந்தது.

ஆனால் எண்பதுகளின் தொடக்கத்தில் நிலைமை வெகுவாக மாறத்தொடங்கியது. மெட்ரோ நகரங்களின் தேவையை கருத்தில் கொண்டு மத்திய அரசு தன்னுடைய மோட்டார் கொள்கைகளை லேசாக தளர்த்திக் கொண்டது. சுஸுகி நிறுவனத்தோடு கைகோர்த்துக்கொண்டு மாருதி காரை மார்க்கெட்டுக்கு கொண்டுவந்தது. அளவில் சிறியதாக, போக்குவரத்து நெரிசலை தாக்குப்பிடித்து ஓட்டுவதற்கு வாகாக வந்த மாருதிகார்களை ‘தீப்பெட்டி கார்’கள் என்று செல்லமாக அழைத்து மக்கள் வரவேற்கத் தொடங்கினார்கள். அடுத்த இருபது ஆண்டுகளுக்கு – ஹுண்டாய், ஹோண்டா, ஃபோர்ட் உள்ளிட்ட நிறுவனங்கள் உள்ளே வரும் வரை – மாருதி கார்கள் விற்பனையில் சக்கைப்போடு போட்டன.

எண்பதுகளின் இறுதியில் நிலைமை கையை மீறிப்போவதை ஹிந்துஸ்தான் மோட்டார் நிறுவனம் உணர்ந்தது. இந்திய சந்தையை மட்டும் இனி நம்பி பிரயோசனமில்லை என்று ஜப்பான், இலங்கை, பாகிஸ்தான், பங்களாதேஷ் மற்றும் வளைகுடா நாடுகளுக்கு கார்களை தயாரித்து ஏற்றுமதி செய்ய ஆரம்பித்தது. துபாயில் டெலிவரி செய்ய வாகான வாகனமாக அம்பாஸடரே கருதப்பட்டது. அங்கு விற்பனைக்கு கிடைத்த மற்ற வாகனங்களை ஒப்பிடுகையில் அம்பாஸடரின் விலை கணிசமான அளவில் குறைவு. மட்டுமின்றி உழைப்பிலும் அம்பாஸடரை அடித்துக்கொள்ள ஆளில்லை.

1990ல் ஹிந்துஸ்தான் மோட்டார்ஸ் நிறுவனம் அறிமுகப்படுத்திய அம்பாஸடர் நோவா, அந்நிறுவனத்தின் வரலாற்றில் மைல்கல்லாக அமைந்தது. பழைய என்ஜின் மாற்றப்பட்டு சக்திவாய்ந்த 1800 சி.சி. புதிய என்ஜின் அறிமுகப்படுத்தப்பட்டது. நோவா வகை கார்களில் டீசல் என்ஜின்களும் கிடைத்தன. புதிய இசிஸூ என்ஜின்களின் ஆற்றலால் அதிகபட்சமாக 140 கி.மீ. வேகம் வரை கார்களை இயக்க முடிந்தது. அடுத்தடுத்த ஆண்டுகளில் அம்பாஸடர் கிராண்ட், அவிகோ என்று நிறைய மாடல்களை கொண்டுவந்தாலும், அது தன்னுடைய பழம்பெருமையை மீட்டுவிட முடியவில்லை. ஒரு காலக்கட்டத்தின் அடையாளமாகவே தேங்கிவிட்டது.

ஆனாலும் இராணுவம், காவல்துறை, தலைமைச் செயலகங்கள், அரசு அலுவலகங்கள் என்று இன்றும் அரசு தொடர்பான இடங்களில் அம்பாஸடரின் ஆளுமை குறையவேயில்லை. இடையில் வாஜ்பாய் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு வி.வி.ஐ.பி.களுக்கு பி.எம்.டபிள்யூ கார்களை வாங்க முடிவு செய்தது. ஆனால் 2004ல் அமைந்த ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அம்முடிவை மாற்றி அம்பாஸடருக்கே ‘ஜே’ போட்டது. அதன் விளைவுதான் நம்முடைய பாராளுமன்றத்தை எப்போதும் சுற்றி நிற்கிறது அம்பாஸடர் அணிவகுப்பு.

விலை மலிவான கார்களின் வருகையால் பெருநகரங்களின் சாலைகளில் ஓடிக்கொண்டிருக்கும் அம்பாஸடர்கள் மறைந்துகொண்டே வரலாம். ஒரே தயாரிப்பு எல்லா காலங்களையும் ஆளுவது சாத்தியமுமில்லை. ஆனால் அம்பாஸடர் நம்முடைய பாரம்பரியப் பெருமை. அதன் நினைவுகளை இந்தியா அத்தனை சீக்கிரமாக இழந்துவிடாது.


அம்பாஸடருக்கு ஆறுதல்!

எண்ணிக்கை அடிப்படையில் பார்க்கப் போனால் அம்பாஸடர் கார்களின் விற்பனை இப்போது அதலபாதாளத்தில்தான் இருக்கிறது. 2012-13 ஆண்டில் 3,390 கார்களை மட்டுமே அது விற்பனை செய்திருக்கிறது. கடந்த பிப்ரவரி மாதம் நடத்தப்பட்ட கணக்கெடுப்பு ஒன்றில் பன்னிரெண்டு வருட வரலாற்றில் இல்லாத அளவுக்கு கார் விற்பனை படுமந்தமாக இருக்கிறது என்று தெரியவந்திருக்கிறது. ஆனால் மற்ற கார்களை ஒப்பிடும்போது அம்பாஸடரின் விற்பனை மட்டும் 166 சதவிகிதம் பெருகியிருப்பதாக அதே கணக்கீடு கூறுகிறது. ஹிந்துஸ்தான் மோட்டாருக்கு ஒரே ஆறுதலான அம்சம் இதுதான். இதையடுத்து பீகார், ஒரிஸ்ஸா மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் கூடுதல் விற்பனையாளர்களை நியமித்து கார் விற்பனையை பெருக்க அந்நிறுவனம் திட்டமிட்டிருக்கிறது.

(நன்றி : புதிய தலைமுறை)

கருத்துகள் இல்லை: