சனி, 6 ஜூலை, 2013

சமூகநீதி இப்படி குடை சாயலாமா? கி.வீரமணி அறிக்கை!

தமிழ்நாடு முதல் அமைச்சர் அவர்களுக்கு வணக்கம்.
ஆசிரியர் தகுதி தேர்விலும், பணி நியமனத்திலும் சமூகநீதிக்கு எதிரான வழி முறைகள் பின்பற்றப்பட்டு இருப்பது தொடர்பாக சர்ச்சைகள் தமிழ்நாட்டில் கிளம்பி இருப்பதைத் தங்களின் கவனத்திற்குக் கொண்டு வருவது எங்களது தலையாய கடமையாகும். பொதுவாக இந்தத் தகுதி தேர்வே தேவையற்றது என்றாலும், தேசிய ஆசிரியர் கல்விக் கழகம் அறிவுறுத்தலின்படி தேர்வு நடத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதைப் புரிந்து கொள்ள முடிகிறது.
அதே நேரத்தில் தேசிய ஆசிரியர் கல்விக் கழகத்தின் அறிவுறுத்தலில் தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர், முன்னேறிய வகுப்பினர்க்குத் தகுதி மதிப்பெண்கள் தனித்தனியே நிர்ணயிக்கப்படுவது குறித்தும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
அதன்படி ஆந்திர மாநிலத்தில் முன்னேறிய பிரிவினருக்கு 60 சதவீத மதிப்பெண்களும் பிற்படுத்தப் பட்டோருக்கு 50 சதவீத மதிப்பெண்களும், தாழ்த்தப் பட்டோருக்கு 40 சதவீத மதிப்பெண்களும் நிர்ணயிக்கப் பட்டுள்ளன. பீகாரில் முன்னேறிய பிரிவினருக்கு 60 சதவீத மதிப்பெண்களும், பிற்படுத்தப்பட்டோருக்கும் மற்றவர்களுக்கும் 55 சதவீத மதிப்பெண்களும், ஒடிசா மாநிலத்தில் முன்னேறிய பிரிவினருக்கு 60 சதவீத மதிப்பெண்களும், மற்ற பிரிவினருக்கு 50 சதவீத மதிப்பெண்களும் தனித்தனியே நிர்ணயிக்கப்பட்டுள்ளன.


சமூகநீதியின் விளை நிலமான தமிழ்நாட்டிலோ இந்தச் சமூக நீதிக் கண்ணோட்டம் பின்பற்றப்படாமல் முன்னேறிய பிரிவினர் தாழ்த்தப்பட்டோர், மலைவாழ் மக்கள் பிற்படுத்தப்பட்டோர் அனைவருக்கும் தகுதி மதிப்பெண்கள் 60 சதவீத மதிப்பெண்கள் என்று சகட்டுமேனிக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது!
இது தேசிய ஆசிரியர் கழகத்தின் வழிகாட்டுதலுக்கு முரணானது என்பதோடு சமூகநீதிக்கும் எதிரானது என்பதை நீங்கள் ஒத்துக் கொள்வீர்கள் என்றே கருதுகிறோம்.
எடுத்துக்காட்டாக, பொறியியல் கல்லூரிகளில் தாழ்த்தப்பட்டோருக்கான தகுதி மதிப்பெண் 35 சதவீதம் என்று தமிழ்நாடு அரசு நிர்ணயம் செய்துள்ளது. அகில இந்திய தொழில் நுட்பக் கவுன்சிலோ 40 சதவீதம் என்று நிர்ணயித்துள்ளது. அதனை எதிர்த்தே தங்களின் தலைமையிலான தமிழ்நாடு அரசு உயர்நீதிமன்றம் சென்ற நிலையில், அரசுக்கு எதிரான தீர்ப்பையும் புறந்தள்ளி உச்சநீதிமன்றம் வரை சென்றுள்ளீர்கள். பாராட்டுகிறோம்.
பொறியியல் கல்லூரியில் கடைப்பிடிக்கப்பட்ட அந்தச் சமூக நீதிக் கண்ணோட்டம் தமிழ்நாடு அரசின் ஆசிரியர் தகுதித் தேர்வில் இல்லாமல் போனது ஆச்சரியத்தை அளிக்கிறது.
ஒருக்கால் இந்தப் பிரச்சினை உங்கள் கவனத்துக்கு வராமலே நடந்திருக்கலாம் என்று எண்ணத் தோன்றுகிறது.
69 சதவீத இடஒதுக்கீட்டைக் காப்பாற்ற தாங்கள் காட்டிய ஆர்வத்தை அறிந்தவர்கள் என்கிற  முறையில் இப்படி நினைக்கத் தோன்றுகிறது. உங்கள் ஆட்சியில் சமூகநீதிக்கு இப்படி ஒரு அபாயம் தோன்றியிருக்கவே கூடாது.
சமீபத்தில்கூட, தமிழ்நாட்டில் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்கள் உள்தேர்வுகளை ஆங்கில மொழியில் தான் எழுத வேண்டும் என்ற தமிழ்நாடு உயர்கல்வி மன்றத்தில் ஆணை என் கவனத்திற்கு வராமலேயே பிறப்பிக்கப்பட்டது என்று கூறி தாங்கள் அந்த ஆணையை ரத்து செய்தீர்கள். அதேபோல இந்தப் பிரச்சினையிலும் நடந்திருந்தால், தாங்கள் தலையிட்டு சமூகநீதிக்கு எதிராக ஆசிரியர் தகுதித் தேர்வு மற்றும் பணி நியமனத்தில் மேற்கொள்ளப்பட்ட தவறுகளைச் சரி செய்து மறு ஆணை பிறப்பிக்க ஆவன செய்யுமாறு தங்களைக் கேட்டுக் கொள்கிறோம்.
பல்லாயிரக்கணக்கான தாழ்த்தப்பட்ட, மிகப் பிற்படுத்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களின் வாழ்வுரிமைப் பிரச்சினை இது!
இடஒதுக்கீட்டின் அனைத்துப் பிரிவினருக்கும் 60 சதவீத மதிப்பெண்கள் அடிப்படைத் தகுதியாக வைக்கப்பட்டுள்ளதால் தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட் டோருக்கான இடங்கள் நிரப்பப்பட முடியாமல் காலியாக உள்ளன என்பதிலிருந்தே இந்த அளவுகோல் சமூக நீதிக்கு எதிரானது என்பது மிகவும் வெளிப்படையாகவே தெரியவில்லையா?
எல்லோருக்கும் 60 சதவீத மதிப்பெண்கள் என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளதால், திறந்த போட்டி என்பது முழுக்க முழுக்க உயர்ஜாதியினருக்கு மட்டுமே திறந்து விடப்படும் வி°தாரமான இடமாகி விட்டதே! (டீயீநn  ஊடிஅயீநவவைiடிn என்பது டீவாநச ஊடிஅஅரnவைல அல்ல) திறந்த போட்டியிலும் தாழ்த்தப்பட்டவர்களுக்கும், பிற்படுத்தப்பட் டோருக்கும் கிடைத்து வந்த இடங்களும் இதனால் பறி போயுள்ளன.

எனவே அனைத்துப் பிரிவினருக்கும் ஒரே தகுதி மதிப்பெண் (60 சதவீதம்) என்று நிர்ணயிக்கப்பட்டுள்ள தமிழ்நாடு அரசு ஆணை எண் 181 திருத்தப்பட்டு ஆந்திரா மாநிலம் போன்று தனித்தனியே தகுதி மதிப்பெண் நிர்ணயிக்கப்பட ஆவன செய்ய வேண்டும் என்று தங்களைக் கேட்டுக் கொள்கிறோம்.
அது போலவே தமிழ்நாடு அரசு ஆணை எண் 252 இல் கூறப்பட்டுள்ள பணி நியமனத்தில் வெயிட்டேஜ் முறை என்பதும் சமூகநீதிக்கு எதிரானதாகும். எனவே இந்த ஆணையை ரத்து செய்ய வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழ்நாடு சட்டப் பேரவையில் இந்தப் பிரச்சினை குறித்து சி.பி.எம். உறுப்பினர் அ. சவுந்தரராசன் கேள்வி எழுப்பியபோது உயர் கல்வித் துறை அமைச்சர்  பி.பழனியப்பன் இந்தப் பிரச்சினை முதல் அமைச்சர் பரிசீலனையில் உள்ளது என்று குறிப்பிட்டார். பிறகு அதே அமைச்சர் அரசின் கொள்கை முடிவு என்று சட்டப் பேரவையில் தெரிவித்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சமூகநீதிக்கு எதிரான அணுகுமுறைதான் தமிழ்நாடு அரசின் கொள்கை முடிவு என்பதுதானே இதன் பொருள்! இதுகுறித்து முதல் அமைச்சர் அவர்களுக்குக் கருத்தினை தெரிந்து கொள்ள விரும்புகிறோம். ஆசிரியர் தகுதித் தேர்வு  நியமனம் குறித்து தமிழ்நாட்டின் பல பகுதிகளிலும் எதிர்ப்புக் குரல்கள் கிளப்பி வருகின்றன.
திராவிடர் கழக மாணவர் அணியின் சார்பாக நேற்று (5.7.2011) மாலை சென்னை பெரியார் திடலில் கருத்தரங்கமும் பொது மாநாடும் நடைபெற்றன.
கருத்தரங்கில் தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் மன்றத்தின் பொதுச் செயலாளர் க. மீனாட்சி சுந்தரம் பொதுப் பள்ளிகளுக்கான மாநில மேடையின் பொதுச் செயலாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு, லயோலா கல்லூரி பேராசிரியர் தேவா. தமிழ்நாடு மாற்றுத் திறனுடையோர் சங்கங்களில் கூட்டமைப்பின் துணைத் தலைவர் டி.எம்.என். தீபக் ஆகியோர் சிறந்த முறையில் கருத்துக்களை எடுத்து வைத்தனர்.
தொடர்ந்து எனது தலைமையில் நடைபெற்ற பொது மாநாட்டில் மேனாள் உயர்கல்வித் துறை அமைச்சர் பேராசிரியர் டாக்டர் க. பொன்முடி, விடுதலைச் சிறுத்தைக் கட்சியின் பொதுச் செயலாளர் தொல். திருமாவளவன், இந்தியக் கம்யூனிஸ்டுக் கட்சியின் (மார்க்ஸிஸ்டு) மாநில செயற்குழு உறுப்பினர் தோழர் கனகராஜ் திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் பொதுச் செயலாளர் பேராசிரியர் சுப. வீரபாண்டியன், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் மாநில மாணவர் பேரவைச் செயலாளர் திரு ஏ. செய்யது பட்டாணி ஆகியோர் கலந்து கொண்டு, அரசியல் உணர்வுகளுக்கு அப்பால் நின்று தமிழ்நாட்டில் ஆசிரியர் தகுதி தேர்வு பணி நியமனம்  குறித்துத் தெளிவான கருத்துக்களை எடுத்துக் கூறினார்.
கருத்தரங்கிலும் மாநாட்டிலும் பங்கு கொண்ட அனைவரும் இந்தப் பிரச்சினையை முதல் அமைச்சர் அவர்களின் கவனத்துக்கு கொண்டு செல்ல வேண்டும் என்ற கருத்தினை வெளிப்படுத்தினர். அந்த அடிப்படையில்தான் இந்தத் திறந்த வேண்டுகோள் மடல் தங்களுக்கு எழுதப்படுகிறது. தீர்மானமும் மாநாட்டில் நிறைவேற்றப்பட்டுள்ளது. முதற்கட்ட முடிவின்படி இந்தக் கடிதம் மூலம் இந்தப் பிரச்சினையில் தங்கள் கவனத்துக்கு மேற்கண்ட தகவல்களையும், கருத்துக்களையும், வேண்டுகோளையும் முன் வைக்கிறோம்.
இந்தியாவின் வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத 69 சதவிகித இடஒதுக்கீடு 9வது அட்டவணைப் பாதுகாப்புடன் உள்ள ஒரே மாநிலம் தமிழ்நாடு. அதற்கு முந்தைய தங்களது ஆட்சியின் பங்கே முழுக் காரணம் என்ற வரலாறு இருக்கும் மாநிலத்தில் சமூகநீதி இப்படி குடை சாயலாமா? அருள்கூர்ந்து சிந்தித்து ஆவன செய்திட வேண்டுகிறோம்.
மேற்கண்டவற்றைக் கருத்தில் கொண்டு சமூக நீதிக்கு இணக்கமான நல்லதோர் முடிவை எடுப்பீர்கள் என்று எதிர்பார்த்து இம்மடலை முடிக்கின்றோம்.
இவ்வாறு கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை: