சனி, 6 ஜூலை, 2013

5000 பள்ளிகளில் பிராட்பேண்ட் இணைப்பு துண்டிப்பு! கட்டணம் செலுத்தாததால்

தஞ்சை: அரசு உரிய கட்டணம் செலுத்தாததால், தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் உள்ள பிராட்பேண்ட் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளதால் இ,மெயில் மூலம் மேற்கொள்ளப்படும் பணிகள் அனைத்தும் பாதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் தொடக்கப் பள்ளிகளின் எண்ணிக்கை 34,208. நடுநிலைப் பள்ளிகள் 42,225, உயர்நிலைப் பள்ளிகள் 5,046, மேல்நிலைப் பள்ளிகளின் எண்ணிக்கை 4,530. தமிழகத்திலுள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும், தனியார் பள்ளிகளில் மொத்தம் 1.35 கோடி மாணவ, மாணவிகள் படிக்கின்றனர். பள்ளிகளிலும், கல்வித் துறையிலும் கணினியின் பயன்பாடு அதிகரித்து வருகிறது. பள்ளிகளுக்கு கல்வித் துறையிலிருந்து அனுப்பி வைக்கப்படும் அனைத்துத் தகவல்களும் கணினி மூலமே பரிமாறிக்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், மேல்நிலை மற்றும் உயர்நிலைப் பள்ளிகளில் மாணவர்களுக்கு வருமான சான்றிதழ், ஜாதி சான்றிதழ், இருப்பிட சான்றிதழ் போன்றவைகள் ஆன்லைன் மூலமே விண்ணப்பித்து மாணவர்களுக்கு பெற்றுத் தரப்படுகிறது.
10வது மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு பதிவுகளும் பள்ளியிலேயே ஆன்லைன் மூலம் செய்யப்பட்டு வருகிறது. மாணவர்களின் விவரங்கள், தேர்வு விவரங்கள், மதிப்பெண் விவரங்கள், ஆசிரியர்கள் மற்றும் பள்ளியின் நிர்வாகம் தொடர்பான அனைத்து விவரங்களும் கணினி மூலமே பதிவு செய்யப்பட்டு வருகின்றன. கல்வித்துறையும் பள்ளி நிர்வாகமும் இத்தகவல்களை பரிமாறிக்கொள்ளவும், மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் பல்வேறு சேவைகளை மேற்கொள்ளவும் 3 ஆண்டுகளுக்கு முன் அனைத்து உயர்நிலைப் பள்ளிகளுக்கும், மேல்நிலைப் பள்ளிகளுக்கும் எல்காட் மூலம் பிஎஸ்என்எல் பிராட்பேண்ட் இணைப்பு வழங்கப்பட்டது. அதற்கான தொகையை அரசே செலுத்தி வந்தது. ஆனால், பள்ளிகளுக்கு பிராட்பேண்ட் இணைப்புக்கான கட்டணம் கடந்த ஏப்ரல் முதல் 3 மாதங்களாக செலுத்தப்படவில்லை.  இதனால், பள்ளிகளுக்கான பிராட்பேண்ட் இணைப்பை பிஎஸ்என்எல் துண்டித்துள்ளது. இதனால், பள்ளிகளில் இ,மெயில் மூலம் மேற்கொள்ளப்படும் வழக்கமான பணிகள் அனைத்தும் பாதிப்படைந்துள்ளன.
இதுகுறித்து தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கழக தலைவர் எத்திராஜூலு கூறுகையில், ‘கல்வித் துறையிலிருந்து பள்ளிகளுக்கு தினமும் பல மெயில்கள் வருகின்றன. அதற்கான பதில்களும், கோரப்படும் தகவல்களும் மெயில் மூலமே அனுப்பி வைக்கப்படுகின்றன.
தற்போது, பிராட்பேண்ட் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளதால் வழக்கமான பணிகளை மேற்கொள்வதில் மிகுந்த சிரமம் ஏற்பட்டுள்ளதுÕ என்றார்.
இதுகுறித்து கல்வித்துறை அதிகாரிகள் கூறுகையில், ‘பள்ளி நிர்வாகமே நிலுவைத்தொகையை கட்டி மீண்டும் பிராட்பேண்ட் இணைப்பை பெற்றுக்கொள்ள வேண்டும். இதற்கு மாத வாடகை ரூ.750 மற்றும் வரிகள் உள்பட மொத்தம் ரூ.826 மாத கட்டணம் செலுத்த வேண்டியுள்ளது. ஒரு சில பள்ளிகள் மட்டுமே உரிய தொகையை செலுத்தி பிராட்பேண்ட் இணைப்பை பெற்றுள்ளன. 3 மாத நிலுவைத்தொகையுடன் வாடகை செலுத்த முடியாமல் பல பள்ளிகள் உள்ளன. எனவே, பள்ளிகளுக்கு வழங்கப்பட்டுள்ள பிராட்பேண்ட் இணைப்புக்கான முழு கட்டணத்தையும் அரசே செலுத்தி மீண்டும் இணைப்பு கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்Õ என்றனர். dinakaran.com

கருத்துகள் இல்லை: