ஞாயிறு, 5 மே, 2013

அரசியலுக்கு அடிமைப்பட்டுப் போன சி.பி.ஐ

ஒரு காலத்தில், பலருக்கு உதறல் எடுக்கும் அளவுக்குப் பணியாற்றிய அமைப்பு, சி.பி.ஐ., என்ற, "சென்ட்ரல் பீரோ ஆப் இன்வெஸ்டிகேஷன்!' அரசியலுக்கு அடிமைப்பட்டுப் போன அதை, எதிர்க்கட்சியினரும், பிரபல பத்திரிகையாளர்களும், "காங்கிரஸ் பீரோ ஆப் இன்வெஸ்டிகேஷன்' என்றே கூறினர். அதுவும் சரியல்ல, "ஐ' என்பதற்கு, "இன்வெஸ்டிகேஷன்' என்பதற்கு பதிலாக, "இன்ஜஸ்டிஸ்' (நீதி இல்லாத) என்று சொல்வதே பொருத்தம். இப்போது இதை வேறு வார்த்தைகளில் சொல்லியிருக்கிறது உச்ச நீதிமன்றம்.மத்திய அரசு, அதன் ஒரு துறையான சி.பி.ஐ.,க்கும் இதை விடக் கேவலமான விமர்சனம், இதுவரை வந்ததில்லை. உச்ச நீதிமன்றம் இப்படிச் சொன்ன மறு நிமிடமே, மன்மோகன் சிங் ராஜினாமா செய்திருக்க வேண்டும். செய்யவில்லை; அவரது மனச்சாட்சி, அவரை உறுத்தவில்லை. ஏனென்றால், அவர் சி.பி.ஐ., யார் மீதும் ஏவி விடவில்லை.சரி, அவர் பிரதமர் பதவியில் இருக்கட்டும். சி.பி.ஐ., தலைவராவது கொஞ்சம் வெட்கப்பட்டு, வேதனைப்பட்டு ராஜினாமா செய்திருக்கலாம். செய்யவில்லையே... அவரிடம் இழிவுக்கு நாணப்படும் மான உணர்வு இல்லையா? அப்படி எந்த மனிதரையும் சொல்ல முடியாது. அவர் விரும்பினாலும் ராஜினாமா செய்ய முடியாது. விமர்சனத்தை அடுத்து ராஜினாமா செய்தால், அது உண்மை என்பது தெரிய வந்துவிடும். அதனால் ராஜினாமா செய்யாதீர்கள் என்று, அவருக்குக் கட்டளை வந்திருக்கலாம். யாரிடமிருந்து?

சரி, சி.பி.ஐ., தலைவருக்கு யார் அந்தக் கட்டளையைப் பிறப்பிக்க முடியும். பிரதமரா? அவரே பத்திரிகைகளைப் படித்து தான் அரசு நிர்வாகம் சம்பந்தப்பட்ட சங்கதிகளைத் தெரிந்து கொள்கிறார். அப்படியானால், வேறு யார்? மாட்சிமை மிக்க சோனியாவை தவிர, வேறு யாராக இருக்க முடியும்?ஆக, பதவியில் இருப்பவர்கள் தொடர்வதும், விலகுவதும், அரசியல் சாசனத்திற்குப் புறம்பான நிழல் நிர்வாகப் பதவியை வகிக்கும் ஒரு நபரிடம் இருக்கிறது. அவர் தனக்கு வேண்டியதைதெல்லாம் செய்து கொள்வார். ஆனால், எதிலும் மாட்டிக் கொள்ள மாட்டார். அவருக்குக் கண்டனம் கிடையாது; தண்டனை கிடையாது. பிரதமரின் நேரடி ஆட்சி என்றால், அவர் சி.பி.ஐ., தலைவரை இந்நேரம் பதவி விலகச் சொல்லியிருப்பார். ஆனால் தானே ஒரு பினாமி என்பதனால், அவரால் அப்படிச் செய்ய முடியவில்லை.
பாவம்!இப்படி, ஒவ்வொன்றிற்கும் சுப்ரீம் கோர்ட்டின் கண்டனத்தைப் பெறும் அவலமான நிலைமை, இந்திய அரசிற்கு இதுவரை வந்ததில்லை. என்ன கேவலம் இது என்று மக்கள் பதைக்கின்றனர். "பாவம் ஓரிடம், பழி வேறிடம்' என்ற இந்த ஆட்சி முறையை எதிர்த்து அரசியல்வாதிகள், சமூக சிந்தனையாளர்கள் வீரியமாக எழுதாமல் இருப்பதும், பேசாமல் இருப்பதும், சோனியாவுக்கு வசதியாக இருக்கிறது.
அரசியல் நிர்வாகத்தில் இவரது இருட்டுத் தலையீட்டிற்குப் பிறகே, இவ்வளவு அலங்கோலம் நிகழ்ந்திருக்கிறது. இந்த அவலமான, கேவலமான நிலையில் மன்மோகன் சிங் பதவி விலக வேண்டுமென்று தான் எதிர்க்கட்சிகள் கூச்சலிட முடிகிறதே ஒழிய, சோனியா அரசியலிருந்து விலக வேண்டும் என்று, கூப்பாடு போட முடிவதில்லை. இந்த நிலையில், நாட்டு மக்கள் என்ன செய்ய வேண்டும்?
சோனியாவே அரசியலிலிருந்து விலகு என்று, முழக்கம் எழுப்பி, அவரை நேரடி மறைமுகப் பதவிகளிலிருந்தும், பொறுப்புகளிலிருந்தும் விலகச் செய்ய வேண்டும். அதைக் காங்கிரஸ் அல்லாத கட்சிகள் செய்ய முன்வர வேண்டும். இதற்காக நாடு தழுவிய போராட்டம் நடைபெற வேண்டும். இதை தவிர, மீட்சிக்கு வேறு வழியில்லை.குற்றங்களை விசாரிக்க வேண்டிய சி.பி.ஐ., நடுநிலை தவறி அரசியல் தலைமைக்காக செயல்படுகிறது என்று, உச்ச நீதிமன்றம் சொல்லிவிட்ட பின், இந்த அமைப்புக்கு என்ன நம்பகத் தன்மை இருக்கிறது?
பெரிய குடும்பத்தை சேர்ந்த முதலாளி, லைசென்ஸ் இல்லாமல் கார் ஓட்டி, சாலையில் சிலரைக் கொன்று விட்டால், அவரா ஜெயிலுக்கு போவார்? "டிரைவர் காரை ஓட்டினார்; அஜாக்கிரதையால் விபத்து' என்று வழக்கு பதிவு செய்யப்படும். டிரைவர், "ரிமாண்ட்' செய்யப்படுவார். உடனே, ஜாமினில் வெளியே வந்து விடுவார். பின், நத்தை வேக விசாரணையில், "காரில் பழுது இல்லை; டிரைவரும் நன்றாக ஓட்டினார். செத்தவர்கள், எருமை மாடுகள் மிரட்டியதால் ஓடி வந்த போது தடுக்கி விழுந்து, கார் சக்கரத்தில் சிக்கிக் கொண்டனர்' என்று, வழக்கு முடிவுக்கு வரும்.
நம் நாட்டு நிர்வாக வாகனத்தின் லைசென்ஸ், மன்மோகன் சிங் பெயரில் இருக்கிறது. ஓட்டுபவர் சோனியா என்று அனைவருக்கும் தெரியும். ஆனால், அவர் பிடிபட மாட்டார். அது மட்டுமல்ல, லைசென்ஸ் யார் பெயரில் இருக்கிறதோ, அவரையும் காப்பாற்றி விடுவார். ஆனால், விபத்துகளின் போது சாலையில் திரளும் மக்கள், டிரைவரை திட்டுவர். தர்ம அடி கொடுப்பர். எஜமான விசுவாசத்திற்காக எல்லாவற்றையும் அவர் தாங்கிக் கொள்ள வேண்டும்; தாங்கிக் கொண்டிருப்பார். பல திரைப்படங்களில் பார்க்கிறோமே, வடிவேலு காமெடிப் பாத்திரமாக வந்து, தர்ம அடி வாங்குவார். அதுபோல நம் பிரதமர் மன்மோகன், நம் அரசியல் நாடகத்தில் ஒரு காமெடி பாத்திரம்.
இந்த மோசமான, படுபாதகமான அரசு நிர்வாகம் பாரத மாதாவுக்கு நேர்ந்துள்ள அவமானம். நாட்டை ஆண்ட முகலாயர்களும், பிரிட்டிஷ்காரர்களும், பிரெஞ்சுகாரர்களும், போர்த்துக்கீசியரும் இப்படி அதிகேவலமாக நிர்வாகம் செய்ததில்லை.சி.பி.ஐ., எப்போதோ, எஸ்.பி.ஐ., என்று மாறி விட்டது. அது "காங்கிரஸ் பீரோ ஆப் இன்வெஸ்டிகேஷன்' அல்ல. "சோனியா பீரோ ஆப் இன்வெஸ்டிகேஷன்!' காங்கிரஸ்காரர்கள் இப்படிப்பட்ட அயல், நிழல் தலைமை பற்றி வெட்கப்படுவதில்லை. இதற்காக, நாம் காங்கிரஸ்காரர்களின் தேச பக்தியை சந்தேகிக்க வேண்டாம். அவர்களுக்கு தேச பக்தி இருக்கிறது. ஆனால், அவர்களது தேசம் இந்தியா அல்ல; இத்தாலி. ஆனாலும் இந்தியா, காங்கிரஸ்காரர்களுக்கு மட்டும் சொந்தம் என்று சொல்ல முடியாது அல்லவா? நாமும் இருக்கிறோமே.
மானமுள்ள மக்களாகிய நாம், ஏதாவது செய்தாக வேண்டும். என்ன செய்வது என்று புரியாத நிலையில், சோனியாவின் மறைமுக நிர்வாகத்தை நினைத்து நொந்து போகும் போது, மகாபாரதத்தின் திரவுபதி துகிலுரிப்பு நிகழ்ச்சியே நினைவுக்கு வருகிறது. பாஞ்சாலி சபதத்தில் பரிதவித்து பாடுவார் பாரதியார்."நீண்ட கருங்குழலை நீசன் கரம்பற்றி முன்னிழுத்துச் சென்றான். வழிநெடுக மொய்த்தவராய்; என்ன கொடுமை இதுவென்று பார்த்திருந்தார். ஊரவர்தம் கீழ்மை உரைக்கும் தரமாமோ? வீரமிலா நாய்கள்,
விலங்காம் இளவரசன்...'பாரதியார் இகழ்ந்து பாடிய, உரைக்க முடியாத அளவுக்கு, நாட்டை கீழ்மையில் தள்ளியுள்ளவர்கள், சோனியாவின் தலைமையை ஏற்றுக் கொண்டுள்ளவர்கள். "விதியே, விதியே என்செய நினைத்தாய் தமிழ்ச் ஜாதியை...' என்று பாரதியார் அங்கலாய்த்தார். "தமிழ் ஜாதியை' என்பதை இப்போது, "இந்திய ஜாதியை' என்று மாற்றிக் கொள்ளலாம். கோரமான விதியின் பிடியிலிருந்து நம்மை மீட்டுக் கொள்வது, மக்களாகிய நம் கையில் தான் இருக்கிறது. எதிர் வரும் தேர்தலில், சோனியாவையும், காங்கிரசையும் விலக்கி வைப்பது தான் ஒரே வழி. செய்வோமா? இல்லையென்றால், மக்களே, நாம் இப்படிப் பாட வேண்டியிருக்கும். அதற்குத் தயாரா?
பாரதம் - இது நம் பாரதம், பாண்டவர்கள் இல்லாத கவுரவர்களின் பாரதம்; இது நவ பாரதம், இங்கே தேசப் பாஞ்சாலியின் தீனக்குரலைக் கேட்டு, எப்போது வருவார் கண்ணபிரான், துச்சாதனர்கள் வென்ற பிறகா?'பாஞ்சாலியைக் காப்பாற்றிய கண்ணபிரானே, நீ பாரத மாதாவைக் காப்பாற்றுவாயா?
email: hindunatarajan@hotmail.com
- ஆர்.நடராஜன் -அமெரிக்க தூதரக முன்னாள்அரசியல் ஆலோசகர்

கருத்துகள் இல்லை: