வியாழன், 9 மே, 2013

800க்கு விற்ற மல்லிகை கிலோ 60 ரூபாய் வாடும் விவசாயிகள். திருவிழா, திருமணம் குறைந்தது

ஆரல்வாய்மொழி: திருவிழா, திருமணங்கள் குறைந்ததால் பூக்கள் விற்பனை
டல் அடித்துள்ளது. குமரி மாவட்டம் தோவாளை மார்க்கெட்டில் கிலோ ரூ.800&க்கு விற்று வந்த மல்லிகை பூ இன்று ரூ.60&க்கு விற்கப்பட்டது. இதனால் பூ உற்பத்தியாளர்கள் வேதனை அடைந்துள்ளனர்.குமரி மாவட்டம் தோவாளையில் பூக்கள் சந்தை உள்ளது. ஆரல்வாய்மொழி, தோவாளை, காவல்கிணறு, பழவூர், ஆவரைகுளம், ஆகிய பகுதிகளில் இருந்து பிச்சிப்பூவும், தோவாளையை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து அரளி பூவும், மதுரை, ராஜபாளையம், சங்கரன்கோவில், கொடைரோடு ஆகிய பகுதிகளில் இருந்து மல்லிகை பூவும், பெங்களூர் அருகே உள்ள ஒசூரில் இருந்து மஞ்சள் கிரேந்தி மற்றும் பட்டர் ரோஸ், திருக்குறுங்குடி, அம்பாசமுத்திரம், தென்காசி ஆகிய பகுதிகளில் இருந்து பச்சை மற்றும் துளசி வருகிறது. தோவாளை சந்தையில் இருந்து குமரி மாவட்டம் மட்டுமின்றி பிற மாவட்டங்கள், கேரளா, வெளிநாடுகளுக்குகூட பூக்கள் செல்கிறது.


கடந்த சில தினங்களுக்கு முன்பு வரை திருமண விசேஷங்கள், கோயில் திருவிழாக்கள் தொடர்ச்சியாக நடந்ததால் பிச்சிப்பூ கிலோ ஒன்றுக்கு ரூ.700 வரையிலும், மல்லிகை கிலோ ரூ.800 வரையிலும், சம்பங்கி கிலோ ரூ.300 வரையிலும் விற்பனையானது. தற்போது திருமண சீசனும், கோயில் திருவிழாக்களும் குறைந்ததால் பூக்கள் விலை திடீரென குறைந்துள்ளது. இன்று பிச்சிப்பூ கிலோ ரூ.250, மல்லிகை கிலோ ரூ.60, அரளி கிலோ ரூ.40, சம்பங்கி கிலோ ரூ.40, ரோஸ் பாக்கெட் ரூ.10, கிரேந்தி, வாடாமல்லி, கோழிக்கொண்டை ஆகியன கிலோ ரூ.20க்கும் விற்பனையாகி வருகிறது. பூ பறிக்கும் கூலிகூட கிடைக்கவில்லை என பூ உற்பத்தியாளர்கள் சோகத்துடன் கூறினர்.tamilmurasu.org

கருத்துகள் இல்லை: