செவ்வாய், 7 மே, 2013

வடக்கை மிஞ்சிய தென் மாநிலங்கள் ! விழிப்புணர்ச்சி காரணமாகவே இந்த வளர்ச்சி

பெங்களூரு: சிறந்த அரசாங்கம், கல்வி மற்றும் திறமையான ஆட்சி
ஆகியவற்றால் தென் மாநிலங்கள் வடமாநிலங்களை விட மேம்பாடான நிலையில் இருப்பதாக ஆய்வறிக்கை ஒன்று தெரிவிக்கிறது.
கர்நாடக மாநிலம் பெங்களூருவை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் தன்னார்வ தொண்டு நிறுவனமான பப்ளிக் அபயர்ஸ் சென்டர் (பிஏசி) என்ற நிறுவனம், நாட்டின் வடக்கு மற்றும் தென் மாநிலங்களில் வசிப்போர்களின் தனிநபர் வருமானம், வறுமைக்கோடு உள்ளிட்ட முக்கிய விஷயங்களைக் கொண்டு ஆய்வு ஒன்றை நடத்தியது. அந்த ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: தமிழகம், கர்நாடகா, ஆந்திரா மற்றும் கேரளாவை உள்ளடக்கிய தென் மாநிலங்களில் நிலவும் நிலையான அரசாங்கம் மற்றும் திறமையான ஆட்சி காரணமாக, தனிநபர் வருமானம் அதிகரித்து. அதன் காரணமாக வறுமை பெருமளவு குறைந்துள்ளது. கடந்த 2009-10ம் ஆண்டில் தென் மாநிலங்களின் தனிநபர் வருமானம் ரூ. 19 ஆயிரத்து 531 ஆகும். இதுவே வடமாநிலங்களில் (பீகார், ம.பி., ராஜஸ்தான், உ.பி., உத்தர்கண்ட், ஜார்க்கண்ட் மற்றும் சட்டீஸ்கர்) ரூ. 8951 ஆகும். இதே போல், 2009-10ல் வறுமையில் வாடுபவர்கள் தென்மாநிலங்களில் 19 சதவீதமாகவும், வடமாநிலங்களில் 38 சதவீதமாகவும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

கடந்த 50 ஆண்டுகளுக்கு முன் இந்த நிலை அப்படியே தலைகீழ். கடந்த 1960ம் ஆண்டு தென் மாநிலங்களில் வறுமையின் அளவு 66 சதவீதமாக இருந்த நிலையில், வடமாநிலங்களில் இது 55 சதவீதமாக இருந்தது. அப்போது தென் மாநிலங்களில் இருந்து அதிகமானோர் வேலை தேடி வடமாநிலங்களுக்கு சென்றனர். தற்போது வேலை தேடி வடமாநிலத்தவர்கள் அதிகம் பேர் தென்மாநிலங்களைத் தேடி வருகின்றனர். நாடு சுதந்திரம் அடைந்த போது தென்மாநிலங்களில் காணப்பட்ட அதிகளவிலான படிப்பறிவு, குழந்தைகள் இறப்பு மற்றும் மக்கள் தொகை காரணமாக இம்மாநிலங்களில் உற்பத்தி சதவீதம் அதிகம் காணப்பட்டது.

இவை தவிர, தற்போது தென் மாநிலங்களில் நிலவும் சிறப்பான சட்டம் ஒழுங்கு, திறமையான நிர்வாகம் மற்றும் நிலையான அரசாங்கம் காரணமாக தென் மாநிலங்களில் வளர்ச்சி அதிகரித்துள்ளது. மேலும், தொழில்நுட்ப கல்வி, மின்சார உற்பத்தி மற்றும் நகரமயமாக்கல் போன்றவை இவ்வளர்ச்சிக்கு முக்கிய காரணிகளாக விளங்கி வருகின்றன. நாட்டிலுள்ள இன்ஜினியரிங் கல்லூரிகளில் பாதிக்கும் மேற்பட்ட கல்லூரிகள் தென் மாநிலங்களில் தான் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

எனினும் இவ்வளர்ச்சி ஏதோ அதிசயம் போல் வந்து விடவில்லை என்றும், தென் மாநிலங்களில் நடந்த தொடர்ச்சியான போராட்டங்கள் காரணமாக மக்களிடையே ஏற்பட்ட விழிப்புணர்ச்சி காரணமாகவே இந்த வளர்ச்சி ஏற்பட்டுள்ளதாக அந்த அறிக்கை கூறுகிறது. மெட்ராஸ் பிரசிடன்சி என்றழைக்கப்பட்ட சென்னை மாகாணத்தில் நடந்த போராட்டங்கள் காரணமாக, தாழ்த்தப்பட்டோர்கள் கல்வி கற்கவும், அவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையும் வலுப்பெற்றது. இதனை அப்போது அமைந்த அரசுகளும் ஆதரித்ததால் மக்களிடையே கல்வி அதிகரிப்பு, விழிப்புணர்வு, வேலைவாய்ப்பு அதிகரித்தது. இவை வளர்ச்சிக்கு வித்திட்டன. அதே சமயம் இது போன்ற போராட்டங்கள் வடமாநிலங்களில் நடக்காத காரணத்தால் மக்கள் எழுச்சியும், விழிப்புணர்வும் ஏற்படவில்லை என அந்த அறிக்கை தெரிவிக்கிறது.dinamalar.com

கருத்துகள் இல்லை: