ஞாயிறு, 17 மார்ச், 2013

தங்கத்தின் விலை குறைவது ஏன்?

சலசலப்பு;    உலகச் சந்தையில் தங்கத்தின் விலை குறைந்து வருகிறது. கடந்த 2011 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை கிட்டத்தட்ட 1900 டாலர்கள் என்ற அளவுக்குச் சென்றது. தற்போது அது 1600 டாலர்களுக்கும் கீழேயுள்ளது.
கடந்த 2004 ஆம் ஆண்டில் இருந்து தொடர்ந்து மேல் நோக்கிச் சென்று கொண்டிருந்த தங்கத்தின் விலை, இந்த ஆண்டு குறைய ஆரம்பித்துள்ளது. ஆண்டின் துவக்கத்திலிருந்து இதுவரை தங்கத்தின் விலை சுமார் 6 சதம் சர்வதேசச் சந்தையில் குறைந்து விட்டது.
உலகின் முன்னணி தங்க நுகர்வு நாடாக இருக்கும் இந்தியாவில், உள்ளூர் வரிகள் அதிகரிக்கப்பட்டதன் காரணமாகவும், ரூபாயின் மதிப்பு தொடர்ந்து வீழ்ந்து வருவதன் காரணமாகவும், தங்கத்தின் விலை வீழ்ச்சியால் ஏற்பட்ட முழு பயன்கள் மக்களுக்கு கிடைக்கவில்லை. இருந்தும் ஒரு கிராம் தங்கத்தின் விலை தற்போது 3 ஆயிரம் ரூபாய்க்கும் கீழேதான் உள்ளது.
பொருளாதார மந்த நிலை காரணமாக இந்தியாவில் தங்கத்தின் வர்த்தகம் குறைந்துள்ளதாகக் கூறுகிறார் சென்னை கோல்ட் கவுன்சிலின் தலைவர் ஆனந்த பத்மநாபன். அதேநேரம் தங்கத்தின் விலை மேலும் குறைய வாய்ப்புள்ளதாகவும் அவர் கூறுகிறார்.
அதேநேரம் உலக அரசியலில் போர் போன்ற மாற்றங்கள் ஏற்பட்டால் தங்கத்தின் விலை மீண்டும் உயரும் என்று கூறிய அவர், குறைந்த விலைக்கு தங்கத்தை வாங்கிய பல முதலீட்டாளர்கள் தற்போது தங்கத்தை விற்று லாபடமைந்து கொண்டிருப்பதாகவும் கூறினார்.
”இந்தியாவில் மத மற்றும் கலாச்சாரத் தேவைகளுக்காக தங்கம் பெரிதளவில் வாங்கப்படுகிறது. கச்சா எண்ணைக்கு அடுத்தபடியாக தங்க இறக்குமதிக்கே அதிக அளவு அன்னியச் செலாவணி செலவிடப்படுகிறது. இந்தியர்களின் தங்க மோகத்தை தணிக்க அரசு நடவடிக்கைகளை எடுக்க வேணடும், பூட்டி வைக்கப்படும் தங்கத்தால் எவ்வித பொருளாதாரப் பயன்களும் ஏற்படப் போவதில்லை” என்ற குரல்கள் எழுந்து வந்தாலும், ஒப்பீட்டளவில் தங்கத்தின் மீதான வரிகள் குறைவாகவே உள்ளன.

கருத்துகள் இல்லை: