சனி, 16 மார்ச், 2013

பெண்களுக்கு எதிரான குற்ற தடுப்பு மசோதாவுக்கு பாஜ கடும் எதிர்ப்பு

பெண்களுக்கு எதிரான குற்ற தடுப்பு மசோதாவில் விருப்பத்துடன் பாலியல் உறவு கொள்ளும் வயது 16 ஆக குறைக்கப்பட்டிருப்பதற்கு பாஜ, திரிணாமுல் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. டெல்லி மாணவி பலாத்கார சம்பவத்தை தொடர்ந்து பலாத்கார குற்றத்துக்கு மரண தண்டனை விதிக்கும் அவசர சட்டத்தை கடந்த மாதம் மத்திய அரசு கொண்டு வந்தது. விரிவாக ஆலோசனை நடத்தப்பட்டு புதிய விதிமுறைகளுடன் புதிய சட்டம் பட்ஜெட் கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்படும் என அப்போது அறிவிக்கப்பட்டது. அதன்படி தற்போது புதிய மசோதா ஒன்றை மத்திய சட்ட அமைச்சகம் தயாரித்துள்ளது. அதில் விருப்பத்துடன் பாலியல் உறவு கொள்ளும் வயது 18ல் இருந்து 16 ஆக குறைக்கப்பட்டுள்ளது.
மற்றவர்களின் உறவை மறைந்திருந்து பார்ப்பது, பெண்களை பின்தொடர்வது போன்றவை தண்டனைக்குரிய குற்றமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை நேற்று முன்தினம் ஒப்புதல் அளித்தது. இந்த மசோதா குறித்து அரசியல் கட்சிகள் மத்தியில் ஒருமித்த கருத்து ஏற்படுத்துவதற்காக வரும் திங்கள் கிழமை அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறுகிறது. இதில் விருப்பத்துடன் உறவு கொள்வதற்கான வயது வரம்பை 16 ஆக குறைத்திருப்பதற்கு பாஜ, திரிணாமுல், சமாஜ்வாடி, ராஷ்ட்ரிய ஜனதா தளம் மற்றும் ஐக்கிய ஜனதா தளம் கடும் எதிர்ப்பு தெரிவிக்க முடிவு செய்துள்ளது. சட்டீஸ்கர் பாஜ முதல்வர் ராமன்சிங் மிக வெளிப்படையாக தனது எதிர்ப்பை தெரிவித்துள்ளார். இந்தியா போன்ற பழமையான நம்பிக்கைகளில் ஊறிப்போன சமூகத்தால் இது போன்ற அல்ட்ரா மாடர்ன் திருத்தங்களை ஏற்றுக் கொள்ள முடியாது என தெரிவித்துள்ளார்.

ராஜஸ்தான் முன்னாள் முதல்வர் வசுந்தரா ராஜே கூறுகையில், ‘‘வயதை குறைப்பது குறித்து விரிவான விவாதம் நடத்தப்பட வேண்டும்’’ என்றார். வயது குறைப்பு தொடர்பான அம்சத்தை நீக்கினால் மசோதா நிறைவேற முழு ஒத்துழைப்பு அளிக்கப்படும் என பாஜ மூத்த தலைவர் ஒருவர் தெரிவித்துள்ளார். அந்தரங்க உறவை மறைந்திருந்து பார்ப்பது, பெண்களை பின்தொடர்வது போன்ற அம்சங்களுக்கு சமாஜ்வாடி, ராஷ்ட்ரிய ஜனதா தளம் மற்றும் ஐக்கிய ஜனதா தளம் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. அதே சமயம் ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் உள்ள கட்சிகள் அனைத்தும் பெண்களுக்கு எதிரான குற்ற தடுப்பு மசோதாவில் சேர்க்கப்பட்டுள்ள புதிய அம்சங்களுக்கு ஆதரவு தெரிவித்துள்ளன. மத்திய அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவு அளித்து வரும் மாயாவதியும் இந்த சட்ட மசோதாவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை: