சனி, 23 மார்ச், 2013

ஜோசியர் மற்றும் சாமியார் நிகழ்ச்சிகளை டிவியில் ஒளிபரப்ப தடை!

திரிபுரா மாநிலத்தில் சில ஜோசியர்கள் டிவியில் விளம்பர நிகழ்ச்சிகளை நடத்துகின்றனர். இதேபோல் சாமியார்கள் என்றும் மந்திரவாதிகள் என்றும் தங்களை அழைத்துக்கொள்ளும் சிலரும் டிவியில் நிகழ்ச்சி நடத்துகின்றனர்.இந்த நிகழ்ச்சிகளின் மூலம் இவர்கள் மக்களை ஏமாற்றுகின்றனர் என்று திரிபுரா அரசு குற்றம் சாட்டியுள்ளது. சில மாதங்களுக்கு முன்பு அகர்தலாவில் உள்ள ஒரு வீட்டில் ஒரு பூஜை நிகழ்ச்சி நடைபெற்றது. குடும்பத்தின் நலனுக்காக சில சித்து வேலைகளை செய்ய வேண்டும் என்று கூறி பாபா கமால்ஜேடி என்ற மந்திரவாதியை அழைத்து வந்தனர். ஆனால் இந்த நபர் அந்த வீட்டில் இருந்த ரூபாய் 15 லட்சம் மதிப்புள்ள தங்க நகைகளை எடுத்துக்கொண்டு தலைமறைவாகிவிட்டார்.சாமியார்களும், மந்திரவாதிகளும், ஜோசியர்களும் கேபிள் டிவி நடத்துபவர்களிடம் நிகழ்ச்சி நடத்த உரிமை பெறுகின்றனர். <>இவர்கள் நகரில் உள்ள ஓட்டல்களில் அறை எடுத்து தங்கிக்கொள்கின்றனர். டிவி நிகழ்ச்சிகளில் இவர்கள் தங்களுக்கு தெய்வீக சக்தி இருப்பதாக விளம்பரம் செய்கிறார்கள். சில மந்திர, தந்திர நிகழ்ச்சிகளை டிவியில் செய்து காட்டுகின்றனர். தொலைபேசியில் கேள்வி கேட்டு இறுதியில் தங்களை நேரில் சந்திக்கும்படி சாமியார்களும், ஜோசியர்களும், மந்திரவாதிகளும் அழைப்பு விடுகின்றனர்.இவர்களால் பொதுமக்கள் ஏமாற்றப்படுகிறார்கள் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. எனவே இத்தகைய டிவி நிகழ்ச்சிகளுக்கு தடை விதிக்க திரிபுரா அரசு முடிவு செய்துள்ளது. சட்டமன்ற தேர்தல் போன்ற சில முக்கிய பிரச்சனைகளால் நடவடிக்கை எடுக்க முடியவில்லை என்றம், தற்போது சட்டமன்ற தேர்தல் முடிந்துவிட்டதால் இத்தகைய டிவி நிகழ்ச்சிகளை தடுக்க தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மேற்கு திரிபுரா மாவட்ட மாஜிஸ்திரேட் கிரண் கிட்டி கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை: