சனி, 23 மார்ச், 2013

இலங்கையில் 46 சர்வதேச நிறுவனங்களில் 43 நிறுவனங்கள் இந்தியாவைச் சேர்ந்தவை”

சமீப நாட்களாக தமிழகத்தில் இலங்கை தொடர்பான வர்த்தக நிலையங்கள் மற்றும் வங்கிகள் தாக்கப்பட்டு வரும் நிலையில், இந்தியாவுக்கான இலங்கை தூதர் பிரசாத் கரியவாசம், “இலங்கையில் செயல்படும் 46 சர்வதேச நிறுவனங்களில் 43 நிறுவனங்கள் இந்தியாவைச் சேர்ந்தவை” என்று கூறியுள்ளார்.
மும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், “இந்தியாவும், இலங்கையும் நட்பு நாடுகள்தான். தற்போது ஏற்பட்டுள்ள சில அரசியல் பிரச்சினைகள் தற்காலிகமானதுதான். இதனால் இரு நாடுகளுக்கும் இடையேயான உறவில் எந்த பாதிப்பும் ஏற்படாது.
இலங்கையின் அமைவிட உத்தியை பயன்படுத்தி இந்தியா ஏராளமான ஆதாயங்களை அடைய முடியும். இலங்கையை சிறந்த வர்த்தக மையமாக பயன்படுத்திக்கொள்ள முடியும்.
இலங்கையில் செயல்படும் 46 சர்வதேச நிறுவனங்களில் 43 நிறுவனங்கள் இந்தியாவைச் சேர்ந்தவை. இரு நாடுகளுக்கும் இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் உள்ளது. ஆனால் இதை செயல்படுத்துவதில் போதிய முன்னேற்றம் காணப்படவில்லை. இந்த ஒப்பந்தத்தை பயனுள்ள வகையிலும், அர்த்தமுள்ள வகையிலும் திறம்பட செயல்படுத்த இரு நாடுகளும் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியது அவசியம்.
இந்தியாவில் இருந்து இலங்கைக்கும், இலங்கையில் இருந்து இந்தியாவுக்கும் சுற்றுலா பயணிகள் வந்து செல்வது அதிகரித்து இருப்பதால், சுற்றுலா துறையை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட வேண்டும்” என்றார்.

Read more:  viruvirupu.com

கருத்துகள் இல்லை: