ஞாயிறு, 17 மார்ச், 2013

தி.மு.க.,வை தனிமைப்படுத்த முயற்சி

சென்னை: "தி.மு.க.,வை தனிமைப்படுத்த வேண்டும் என, அரசியல் கட்சிகள் சில நினைக்கின்றன; ஆனால், தி.மு.க.,வின் விந்தையான செயல்பாடுகளை, மக்கள் சரியாகவே புரிந்து கொண்டுள்ளனர்' என, அக்கட்சித் தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டு உள்ள அறிக்கை: மத்திய அரசை குறை சொல்ல வேண்டுமென்றால், தி.மு.க., அங்கம் வகிக்கும் மத்திய அரசு என, கூறுகின்றனர். மத்திய அரசு நல்லது செய்தால், தி.மு.க., அங்கம் வகிக்கும் மத்திய அரசு என, கூறுவதில்லை. தி.மு.க.,வை தனிமைப்படுத்த வேண்டும் என்பதே இதன் நோக்கம் விலகல் ஏன்? தி.மு.க., மாநில கட்சி என்பதை மறந்துவிட்டு, வல்லரசு போல கற்பித்துக் கொண்டு, இலங்கையில் நடந்த படுகொலைகளை, தி.மு.க., நினைத்திருந்தால், நிறுத்தியிருக்கலாம் என, திட்டமிட்டு குறை சொல்லுகின்றனர்.
மத்திய அரசை, இதற்கு வலுவான தீர்மானத்தை, ஐ.நா., மனித உரிமை ஆணையத்தில் கொண்டு வரவேண்டும் என, வலியுறுத்துகிறோம். மத்திய அரசு தீர்மானம் கொண்டுவராத காரணத்தால், அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்தை ஆதரிக்க வேண்டும் என, வலியுறுத்துகிறோம். தமிழினத்துக்கு நிறைவு தரும் பதில், மத்திய அரசிடமிருந்து கிடைக்காததால், மத்திய அமைச்சரவையில், தி.மு.க., நீடிப்பது அர்த்தமற்றதாகி விடும் என, அறிக்கை வெளியிட்டேன்.

கிண்டல்: இதற்கு, "ஆறாவது முறையாக, மத்திய அரசை, தி.மு.க., மிரட்டுகிறது' என, கிண்டல் செய்கின்றனர். தி.மு.க.,வின் எச்சரிக்கையால், தமிழகத்துக்கு நன்மை ஏற்பட்டுள்ளது என்பதே முக்கியம். கூட்டணியில் அங்கம் வகிப்பதால், முக்கியமான பிரச்னைக்கு கோரிக்கை வைக்கிறோம்; அடுத்து வலியுறுத்துகிறோம்; அழுத்தம் தருகிறோம். இதற்கு பின்பும் கோரிக்கை நிறைவேறாவிட்டால், வெளியேறுகிறோம் என, அறிவிக்கிறோம். கூட்டணி அரசியலில் இப்படி முடிவெடுப்பது வழக்கம் தான். ஆனால், மத்திய அரசில், தி.மு.க., நீடிப்பது பலருக்கு உறுத்துகிறது. அவலை நினைத்து, உரலை இடிப்போருக்கு, தி.மு.க., எடுக்கும் முடிவுகள் விந்தையாக இருக்கலாம். ஆனால், தமிழக மக்கள், தி.மு.க.,வை சரியாகவே புரிந்து கொண்டுள்ளனர். இவ்வாறு அறிக்கையில் கருணாநிதி கூறியுள்ளார்.

பதில் இல்லை: நிருபர்களுக்கு அவர் அளித்த பேட்டி: இலங்கை அரசுக்கு எதிராக, ஐ.நா., சபையில் அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்தில், உரிய திருத்தங்களை மத்திய அரசு செய்து, அத்தீர்மானத்தை ஆதரிக்க வேண்டும். இல்லையேல், மத்திய அமைச்சரவையில், தி.மு.க., நீடிப்பதில் அர்த்தமில்லை என, நேற்று முன் தினம் அறிவித்தோம். ஆனால், அதற்கு மத்திய அரசிடமிருந்து எந்த பதிலும் வரவில்லை. இலங்கை பிரச்னை பற்றி, மத்திய அரசிடம் பல நாட்களாக சொல்லி வருகிறோம்; ஆனால், வெளிப்படையாக எதையும் மத்திய அரசு அறிவிக்கவில்லை. இதனால், தி.மு.க.,வும் தன் நிலையை வெளிப்படுத்தாமல் உள்ளது. மத்திய அரசு வழக்கம்போல் செயல்படுகிறது. அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்தில் தேவையான திருத்தங்களை இந்தியா செய்யவேண்டும் என்பதே, எங்களின் இறுதியான எதிர்பார்ப்பு. இதற்கு, பதில் கிடைக்கும் காலம் தான், மத்திய அரசுக்கு, தி.மு.க., வழங்கும் காலக்கெடு. டில்லியில் நடந்த, "டெசோ' கருத்தரங்கில், அமெரிக்க தீர்மானத்தை, மத்திய அரசு ஆதரிக்கும் என, அமைச்சர் குலாம் நபி ஆசாத் கூறினார். ஆனால், இதுபற்றி மத்திய அரசு பதில் அளிக்காமல் உள்ளது. அதனால் தான், அமைச்சரவையில் நீடிப்பதில் அர்த்தமில்லை என, அறிக்கை கொடுத்தோம். இவ்வாறு கருணாநிதி கூறினார். dinamalar.com

கருத்துகள் இல்லை: