ல்லிராணியின் சொத்துக் குவிப்பு வழக்கின் அரசு தரப்பு சிறப்பு வழக்கறிஞரான பி.வி.ஆச்சார்யாவின் ராஜினாமா கடந்த ஜனவரி 17 அன்று கர்நாடக மாநில‌ அரசால் ஏற்றுக்கொள்ளப்பட்டது. கடந்த ஆகஸ்டு 14 அன்றே தனக்கு மிரட்டல் விடுவது மற்றும் மன உளைச்சல் ஏற்படுத்துவது போன்றவற்றில் எதிரிகள் வெற்றி பெற்று விட்டதாகவும், தனது வயது மற்றும் உடல்நிலையை காரணம் காட்டியும் ஆச்சார்யா பதவி விலகல் கடிதம் கொடுத்த போதிலும் வேறு நபர் நியமிக்கப்படும் வரை தொடருமாறு நீதிபதி மல்லிகார்ஜூனையா கேட்டுக் கொண்டார். அதற்கிணங்க அவர் பதவியில் தொடர்ந்தாலும், தற்போது தனி ஒரு குழு அமைக்கப்பட்ட பிறகு அவரது பதவி விலகல் கடிதம் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. இனி முதலில் இருந்து ஜெயா தனது ஆட்டத்தை துவங்குவார். கன்னித் தீவு கதையின் இரண்டாம் பாகத்தை மக்கள் காணப் போகிறார்கள்.

1991 இல் ஆட்சிக்கு வந்த ஜெயாவின் சொத்து மதிப்பு சுமார் 2 கோடி ரூபாய்கள் தான். ஆனால் மாதம் ஒரு ரூபாய் மட்டுமே சம்பளம் வாங்கி அவர் சேர்த்த தொகை 1996 முடிவில் 66 கோடி. எனவே இதனை விசாரிக்க உச்சநீதிமன்ற வழிகாட்டலின் பேரில் தனிநீதி மன்றம் அமைத்து விசாரணை நடைபெற்றது. 2001 இல் ஆட்சிக்கு வந்த ஜெயல்லிதா தனக்கு தொண்டை கட்டியிருக்கிறது, தமிழில் மொழிபெயர்த்தால் தான் தன்னைப் போன்ற கான்வெண்ட் தற்குறிகளுக்கு விசயம் புரியும் என்றெல்லாம் கேட்டு வழக்குக்கு வாய்தா வாங்கத் துவங்கினார். பிறகு ஏன் தன்னைப் போன்ற 24 மணி நேரம் உழைக்கும் அன்புச் சகோதரிக்கு வீட்டுக்கு கேள்வி அனுப்பக் கூடாது என நீதிமன்றத்தை கேட்டார் ஜெயா. திருச்சி விமானநிலையத்தின் அதிமுக மகளிரணி ஆட்டத்தை கேள்விப்பட்டிருந்த நீதிபதிகள் தங்களது எழுத்தர்களை அனுப்பி பதில் வாங்கினர்.
இதெல்லாம் சரிப்படாது எனக் கருதிய திமுக பொதுச்செயலாளர் அன்பழகன் வழக்கை வேறு மாநிலத்துக்கு மாற்றக் கோரி உச்சநீதி மன்றத்தில் வழக்குத் தொடுக்கவே 2005 இல் கர்நாடகா மாநிலத்தில் சிறப்பு நீதிமன்றம் அமைக்கப்பட்டது. இதில் இவருடைய கூட்டாளிகளான சசிகலா, இளவரசி என பலரும் இவரைப் போலவே வாய்தா வாங்கத் துவங்கினர். குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டவுடன் முதலில் ப்ரூப் செக் பண்ணி பிழை திருத்தம் கோரினர். அதன்பிறகு தனக்கு படித்துப் பார்க்க நேரம் வேண்டும் என்றனர். சில சமயங்களில் தனது வழக்கறிஞர் வீட்டு உறவினர் இறந்த காரணத்துக்கெல்லாம் சுதாகரன் விடுப்பு கேட்டிருக்கிறார். இப்படி இவர்கள் உச்சநீதி மன்றம், கர்நாடக உயர்நீதி மன்றம் மற்றும் சிறப்பு நீதிமன்றங்களில் கொடுத்த மனுக்களின் எண்ணிக்கை 130 இருக்கும். இடையில் இந்த விசாரணையே செல்லாது எனக் கோரி 2009 வரை விசாரணை நடக்கவொட்டாமல் செய்தனர். 2011 இல் ஆட்சிக்கு வந்த பிறகு அரசு வழக்கறிஞர் ஆச்சார்யாவுக்கு தெரியாமலேயே ஜெயா அரசின் லஞ்ச ஒழிப்புத் துறை அனைத்து சாட்சிகளையும் முதலில் இருந்து மீண்டும் விசாரிக்க வேண்டுமென நீதிமன்றத்தில் மனு செய்தது.
அடுத்து ஆச்சார்யாவை நீக்க மனு கொடுத்தார்கள். நீதிபதியே தனியார் பல்கலை ஒன்றில் டிரஸ்டியாக இருக்கிறார் என்பதால் அவருக்கு நீதிபதியாகும் தகுதியே இல்லை என பல மனுக்களை மாற்றி மாற்றி போட்டனர். ஆச்சார்யா இதெற்கெல்லாம் அசைந்து கொடுக்காமல் கொட நாட்டுக்கு போகும் நேரத்தில் நீதிமன்றத்துக்கு வர முடியவில்லையா என நீதிமன்றத்திலேயே கேட்டார். இதனை வழிமொழிந்த இந்து பத்திரிகை, ராமதாசு, விஜயகாந்த் என அனைவர் மீதும் அவதூறு வழக்கை பதிவு செய்தார் அல்லிராணி. சோ போன்ற நபர்கள் ஆச்சார்யா மரபுப் படி குற்றவாளிக்குதான் ஆதரவாக இருக்க வேண்டும் என வாதிட்டனர். இழுத்தடிப்பு மற்றும் மிரட்டல் காரணமாக பதவி விலகுவதாகவும், இந்த போராட்டத்தில் தான் தோற்று விட்டதாகவும், தனக்கு மட்டும் 10 வயது குறைவாக இருந்தால் போராடியிருப்பேன் என்றும் கூறி விடைபெற்றார் ஆச்சார்யா.
இப்போது மீண்டும் வழக்கு துவங்குகிறது. புதிய அரசு வழக்கறிஞர்கள் குழு அனைத்து விபரங்களையும், மனு மற்றும் குற்றப்பத்திரிகைகளையும் படித்துப் பார்க்கவேண்டும். அதற்கு கொஞ்ச காலம் எடுக்கும். அதற்குள் நாடாளுமன்ற தேர்தல் வந்து விடும். அதில் நடக்கும் பகடைக்காய் ஆட்டத்தில் எந்த தரப்பையாவது தன்னை விடுவிப்பதன் மூலம் ஆதரிக்க முன்வருவார் அல்லிராணி. அதன் பிறகு ஒரு ஜவ்வு மிட்டாய். கடைசி வரை தண்டனை கிடைப்பதிலிருந்து தப்பித்து விடுவார் ஜெயா. சட்டம் ஒரு இருட்டறை என்பது உண்மையோ என்னவோ ஜெயாவை பொறுத்தவரை செருப்புக்குச் சமம்.