சனி, 9 பிப்ரவரி, 2013

குஷ்பு மீது தாக்குதல்: தி.மு.க. தலைமை, நடிகர் சந்திரசேகருக்கு குட்டு!

Viruvirupu
நடிகை குஷ்பு வீட்டின் மீதும், அவர் மீதும் தாக்குதல் நடத்தியவர்கள், தி.மு.க.-வில் ஸ்டாலின் ஆதரவாளர்கள் என்ற பேச்சு பரவலாக அடிபட்டுக்கொண்டு உள்ள நிலையில், தி.மு.க .தலைமை, நடிகை குஷ்புவுக்கு ஆதரவு தெரிவித்து ஒரு அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறது.
தி.மு.க. தலைமைக் கழகம் வெளியிட்ட அறிக்கையில், “தி.மு.க. முன்னணியினரிடையே ஏதாவது கலகம் விளைவித்து குழப்பம் ஏற்படுத்த முடியுமா என்று முயன்று பார்க்கின்ற ஒரு கூட்டத்தினர் அண்மைக் காலத்தில் குஷ்பு சுந்தரை தி.மு.க.விலிருந்து வெளியேற்ற சூழ்ச்சி வலை பின்னி, அதிலே வெற்றியடைய முடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறார்கள்.
அந்த ஏமாற்றத்தால் குஷ்பு சுந்தரின் வீட்டைத் தாக்கவும், அவருடைய கார் கண்ணாடியை உடைக்கவுமான காட்டுமிராண்டிச் செயல்களில் ஈடுபட்டதோடு, குஷ்புவினுடைய பிள்ளைகளையும் மிரட்டி அச்சத்திற்கு உள்ளாக்கி இருக்கிறார்கள்.
இவ்வளவுக்குப் பிறகும் குஷ்பு கழகத்தை விட்டு வெளியேறவில்லையே என்ற ஆத்திரத்தில் தி.மு.கழகம் குஷ்புவை வெளியேற்றும் என்ற பொய்ச் செய்திகளையும் ஏடுகளில் வெளியிட்டிருக்கிறார்கள்.
இந்தப் பிரச்சினையில் தலைமைக் கழகம் உடனடியாக தலையிட்டதோடு, கழகத்தின் கட்டுப்பாட்டினை காத்திடாமல் குஷ்புவின் கார், வீடு இவைகளுக்கு சேதாரம் ஏற்படுத்தி அவரையும் தாக்கிட முற்பட்ட காட்டுமிராண்டித்தனத்திற்கு காரணமானவர்கள் யார் என்று கண்டுபிடித்து அவர்கள் மீது கழகத்தின் விதிமுறைகளின்படி நடவடிக்கை எடுக்கப்படும்.
ஏற்கனவே தலைமைக் கழகத்தின் சார்பில் வெளியிட்டிருந்த அறிக்கையில் குறிப்பிட்டவாறு இப்பிரச்சினைப் பற்றி அவரவர்களும் தம் இஷ்டம் போல் அறிக்கைகள் கொடுப்பதையும் – பேட்டிகள் அளிப்பதையும் அறவே நிறுத்திக் கொள்ள வேண்டும்” என்று கூறப்பட்டுள்ளது.
“…இஷ்டம் போல் அறிக்கைகள் கொடுப்பதையும் – பேட்டிகள் அளிப்பதையும்..” என்று கூறப்பட்டிருப்பது, நடிகர் வாகை சந்திரசேகர் தெரிவித்த கருத்துக்கு விழுந்த குட்டு என்று ஒரு பட்சி சொல்கிறது! வாகை சந்திரசேகர் என்ன சொன்னார் என்பதை கீழே உள்ள லிங்கில் பார்க்கவும்

கருத்துகள் இல்லை: