வியாழன், 5 ஏப்ரல், 2012

பா.ம.க.-வின் பெரிய, சின்ன டாக்டர்களுக்கு “டில்லியில் ???

சி பி.ஐ. வட்டாரங்களில் இருந்து கிடைக்குத் தகவல்களின்படி, பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மீதான கொலை வழக்கில் அவர்கள் எதிர்பார்த்த அனைத்துமே கிடைத்து விட்டதாக தெரிகிறது. “டில்லியில் இருந்து உத்தரவு வரவேண்டியதுதான் பாக்கி” என்றார், ரீஜனல் சி.பி.ஐ.-யில் இந்த விவகாரத்தைக் கவனிக்கும் அதிகாரி ஒருவர்.

வழக்குக்கு தேவையான அனைத்து ஆதாரங்களையும், சாட்சியங்களையும் திரட்டிய நிலையில், சி.பி.ஐ.-க்கு ஒரு விஷயத்தில் மட்டும் சந்தேகம் இருந்ததாக தெரிகிறது. “இந்த கொலை விவகாரத்தில் ஆரம்பத்தில் வேகத்துடன் இருந்த அமைச்சர் சி.வி.சண்முகம் இன்னமும் அதே வேகத்துடன் இருக்கிறாரா?” என்பதே அந்த சந்தேகம்!
காரணம், கொலை நடந்தது 2006-ம் ஆண்டு மே மாதம் 8ம் தேதி! கிட்டத்தட்ட 6 ஆண்டுகள் முடியப்போகும் நிலையில், இடையே அரசியல் மாற்றங்கள் பல நடந்துவிட்டன. இந்தக் காலப்பகுதியில் அமைச்சரின் நிலைப்பாட்டில் மாற்றங்கள் ஏதாவது ஏற்பட்டிருந்தால், சி.பி.ஐ. செய்யும் முயற்சிகள் அத்தனையும் வீணாகப் போய்விடும்.
சி.பி.ஐ. வட்டாரங்களில் இருந்து எமக்கு கிடைத்த தகவல்களின்படி, சி.பி.ஐ. ரீஜனல் ஆபீஸ், “நாங்க ரெடி” என்று டில்லிக்கு தெரிவித்தபின், டில்லியில் இருந்து இவர்களுக்கு இன்ஸ்ட்ரக்ஷன் ஒன்று வந்திருக்கிறது. கேஸில் முழு வீச்சில் இறங்கும் முன், அமைச்சரிடம் ஸ்டேட்மென்ட் ஒன்றை எடுத்து அனுப்புமாறு கேட்டிருந்தார்கள்.
அதையடுத்தே அமைச்சர் சி.வி.சண்முகத்திடம் கடந்த வெள்ளிக்கிழமை வாக்குமூலம் பெற்றுக் கொண்டது சி.பி.ஐ.
அமைச்சரின் வாக்குமூலமும், அவர் கொடுத்த ஒரிஜினல் புகாரும் ஒன்றுடன் ஒன்று ஒத்துப் போவதாக சொல்கிறார்கள் சென்னை சி.பி.ஐ.-யில்.
“அவர் (அமைச்சர்) இன்னமும் இந்த விவகாரத்தை விடுவதில்லை என்ற உறுதியுடன்தான் உள்ளார் என்பதை, அவரது பேச்சில் இருந்தும், அவர் கொடுத்த வாக்குமூலத்தில் இருந்தும் புரிந்து கொண்டோம். டில்லிக்கு எமது ரிப்போட்டையும் அந்த வியூ-பாயின்டிலேயே அனுப்பி வைத்துள்ளோம்” என்று எமக்கு பரிச்சயமான சென்னை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
அமைச்சர் சி.வி.சண்முகத்தின் உறவினர் முருகானந்தம் கொல்லப்பட்டபோது, கொலையாளிகள் பயன்படுத்திய கார் தொடர்பாகவும், கொலை நடைபெற்ற நேரத்துக்கு சற்று முன், டாக்டர் ராமதாஸின் பேரன் பிரதீபன் அந்தப் பகுதியில் நடமாடியது தொடர்பாகவும் சில விஷயங்களில் கிளரிஃபிகேஷன் தேவை என்று டில்லியில் இருந்து கூறப்பட்டதாகவும் தெரியவருகிறது.
இந்த இரு மேட்டர்களிலும் ரீஜனல் ஆபீஸ் சரியான விளக்கம் கொடுக்கும் ரிப்போர்ட் ஒன்றை டில்லிக்கு அனுப்பி விட்டதாக கூறுகிறார்கள்.
கடந்த மாத துவக்கத்தில் சி.பி.ஐ. அதிகாரிகள் டாக்டர் ராமதாஸின் பேரன் பிரதீபனிடம் விசாரணை நடத்தியதாக சொல்லப்படுகிறது. அதன்பின், கடந்த மாதம் 11-ம், 12-ம், தேதிகளில் டாக்டர் ராமதாஸிடம் விசாரணை நடத்தியபின், மீண்டும் பிரதீபனை அழைத்து விசாரித்ததாகவும் ஒரு தகவல் உள்ளது.
அந்த விசாரணைகளில் கிடைத்த விபரங்கள், பிரதீபன் விவகாரத்தில் டில்லி கேட்டிருந்த கிளாரிஃபிகேஷனுக்கு போதுமானவையாக இருக்கின்றனவாம்.
கொலையாளிகள் பயன்படுத்திய கார் தொடர்பாக சி.பி.ஐ. முன்பு அனுப்பிய ரிப்போர்ட்டில் சில ஓட்டைகள் இருப்பதை டில்லி அலுவலகம் சுட்டிக் காட்டியிருந்தது. அதையடுத்து அந்த விவகாரத்திலும் கவனம் செலுத்திய சென்னை அதிகாரிகள், குறிப்பிட்ட காரை பெசன்ட் நகரில் உள்ள சி.பி.ஐ. அலுவலகத்துக்கு கொண்டுவந்து சில ரிப்போர்ட்களை தயாரித்திருக்கிறார்கள்.
அத்துடன் அமைச்சர் சி.வி.சண்முகத்தின் தம்பி சி.வி.பாபு, திண்டிவனம் அ.தி.மு.க. பிரமுகர் சேகர், ஆகிய இருவரையும் பெசன்ட் நகர் அலுவலகத்துக்கு அழைத்த அதிகாரிகள், இந்த காரை ஐடென்டிஃபை பண்ணுமாறு கூறி, அதையும் தமது ரிப்போர்ட்டில் இணைத்துள்ளனர்.
மொத்தத்தில் சி.பி.ஐ. தலைமை செயலகம் கேட்டிருந்த அனைத்து ஆவணங்ளும் சென்னையில் இருந்து சென்றுவிட்டன. டில்லி எழுப்பியிருந்த அனைத்து சந்தேகங்களையும், சென்னை தீர்த்து வைத்திருக்கிறது.
வடக்கேயிருந்து சேதி வருவதற்காக இப்போது சென்னை அதிகாரிகள் காத்திருக்கின்றனர்! வரப்போவது, பா.ம.க.-வின் பெரிய, சின்ன டாக்டர்களுக்கு உகந்த செய்தியாக இருக்க சான்ஸ் ரொம்ப கம்மி!

கருத்துகள் இல்லை: