செவ்வாய், 3 ஏப்ரல், 2012

ராமஜெயம் கொலை - பின்னணியில் மர்ம பெண்?

ராமஜெயம் கொலையில் மர்ம பெண் ஒருவர் பின்னணியில் உள்ளாக பரபரப்பாக கூறப்படுகிறது.
திருச்சியில் முன்னாள் அமைச்சர் கே.என். நேருவின் தம்பி கே.என்.ராமஜெயம் படுகொலை தொடர்பாக 7 தனிப்படை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில், கே.என்.நேரு அலுவலகத்துக்கு போனில் பேசிய ஆசாமி ஒருவர் கே.என். நேருவை கொலை செய்யப் போவதாக மிரட்டினார். இதனையடுத்து உஷாரான போலீசார் கே.என். ராமஜெயத்தின் கொலைக்கும், போன் மிரட்டலுக்கும் சம்மந்தம் இருக்கலாம் என்றும், போன் செய்த ஆசாமியை பிடித்தால் முக்கிய தகவல் கிடைக்கும் என்றும் எதிர்பார்த்து சண்முகவேல் என்பவரை வலை வீசி மடக்கி பிடித்து விசாரணை நடத்தியதில், அவர்கள் கே.என். நேரு மீது ஏற்கனவே இருந்த விரக்தியால் அப்படிக் கூறியது தெரிய வந்தது.
அதே சமயம், ராமஜெயம் கடத்தப்பட்டது டெம்போ டிராவலர் போன்ற பெரிய வாகனமாக தான் இருக்க வேண்டும் என போலீசார் கருதுகின்றனர். ஆனால், ராமஜெயம் வாக்கிங் சென்ற கோட்டை ஸ்டேஷன் ரோட்டில் நடத்தப்பட்ட விசாரணையில் மாருதி வேன் தான் இக் கொலையில் பயன்படுத்தப்பட்டதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
இதன் அடிப்படையில் அந்த வேனை சமீபத்தில் வாங்கிய நபர்கள் குறித்த விபரங்களை திருச்சி, தஞ்சை, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் போலீசார் சேகரித்து வருகின்றனர்.
இதற்கிடையே, இந்தக் கொலைக்கான பின்னணி குறித்து தற்போது புதிய பரபரப்பான ஒரு தகவல் திமுக வட்டாரத்திலேயே உலா வருகிறதாம். அதாவது இரு வேறு சமுதாயத்தைச் சேர்ந்த ஒரு காதல் ஜோடி சில காலத்திற்கு முன்பு ராமஜெயம் முன்பு பஞ்சாயத்துக்காக வந்ததாம். அதை சரி செய்து வைத்தாராம் ராமஜெயம். ஆனால் அதன் பின்னர் அவருக்கு வேறு வகையான தொடர்புகள் ஏற்பட்டு விட்டதாக கூறப்படுகிறது.
இதனால் பாதிக்கப்பட்ட தரப்பு கடும் கோபத்தில் இருந்து வந்ததாம். தென் மாவட்டத்தைச் சேர்ந்ததாக கூறப்படும் இந்த தரப்புதான், சமயம் பார்த்து பழி தீர்த்து விட்டதாக கூறுகிறார்கள்.
இந்தத் தகவல் குறித்தும் போலீஸார் விசாரித்து வருவதாக கூறப்படுகிறது. இருப்பினும் பெண் விவகாரம் தொடர்பாக ராமஜெயம் கொல்லப்பட்டார் என்ற தகவல் வெளியானால் நேரு குடும்பத்துக்கு அவப்பெயராகி விடும் என்பதால் எந்தத் தகவலையும் யாரும் அதிகாரப்பூர்வாக தெரிவிக்க மறுக்கிறார்களாம்.
தற்போது சிலரைக் குறி வைத்துப் போலீஸார் கண்காணித்து வருவதாக தெரிகிறது. அவர்களை எப்போது பிடிக்கப் போகிறார்கள் என்பதுதான் தெரியவில்லை.

கருத்துகள் இல்லை: