வெள்ளி, 17 பிப்ரவரி, 2012

தமிழக மின்வெட்டு 5 மணி நேரமாக குறைகிறது-சென்னைக்கு 2 மணி நேரமாக உயர்கிறது!


சென்னை: தமிழகத்தில் அமல்படுத்தப்பட்டு வரும் 8 மணி நேர அதிகாரப்பூர்வ மின்வெட்டு அளவு 5 மணி நேரமாக குறைக்கப்படவுள்ளது. அதேசமயம், சென்னையில் தற்போது அமலில் உள்ள ஒரு மணி நேர மின்வெட்டானது, 2 மணி நேரமாக உயர்த்தப்படவுள்ளது.
தமிழகம் முழுவதும் கடும் மின் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதனால் இதுவரை இல்லாத அளவுக்கு தமிழகம் முழுவதும் 8 மணி நேர மின்வெட்டை அதிகாரப்பூர்வமாக மின்வாரியம் அமல்படுத்தியுள்ளது. ஆனால் இது பெரும்பாலான மாவட்டங்களில் 9 முதல் 12 மணி நேரம் வரை இருப்பதாக மக்கள் குமுறுகிறார்கள்.
அதேசமயம், தலைநகர் சென்னையில் மட்டும் ஒரு மணி நேர மின்வெட்டு மட்டுமே அமலாகி வருகிறது. இது தமிழகத்தின் இதர பகுதி மக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இதையடுத்து தற்போது மின்வெட்டு பாகுபாட்டை சரி செய்யும் முயற்சியில் தமிழக அரசு இறங்கியுள்ளது. இதுதொடர்பாக முதல்வர் ஜெயலலிதா இன்று தலைமைச் செயலகத்தில் அவசர ஆலோசனையில் ஈடுபட்டார்.
மின்துறை அமைச்சர் நத்தம் விஸ்வாதன், மின்வாரிய அதிகாரிகள், தலைமைச் செயலாளர், மின்துறைச் செயலாளர் உள்ளிட்டோர் இதில் பங்கேற்றனர்.
இந்த கூட்டத்தில் சென்னைக்கான மின்வெட்டு அளவை 2 மணி நேரமாக உயர்த்தியும், தமிழகத்தின் இதர பகுதிகளுக்கான மின்வெட்டு அளவை 5 மணி நேரமாக குறைத்தும் அமல்படுத்துவது என்று முடிவாகியுள்ளதாக தெரிகிறது.

கருத்துகள் இல்லை: