சனி, 18 பிப்ரவரி, 2012

கூடங்குளம் போராட்டக்காரர்களால் மத்திய அரசுக்கு ரூ.2,225 கோடி நஷ்டம்'

சென்னை: ""கூடங்குளம் அணுமின் நிலைய எதிர்ப்பு போராட்டக்காரர்களால், இதுவரை மத்திய அரசுக்கு, 2,225 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது'' என்று மத்திய இணை அமைச்சர் நாராயணசாமி கூறினார்.
சென்னை வந்த மத்திய இணை அமைச்சர் நாராயணசாமி, விமான நிலையத்தில் அளித்த பேட்டி: கூடங்குளம் அணுமின் நிலையத்தில் இருந்து, ரஷ்ய விஞ்ஞானிகள் வெளியேற இருந்த சூழ்நிலையில், ரஷ்ய அரசிடமும், ரஷ்ய தூதரக அதிகாரிகளிடமும் மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தியது. இதைத் தொடர்ந்து, ரஷ்ய விஞ்ஞானிகள் நாடு திரும்புவது தவிர்க்கப்பட்டுள்ளது. கூடங்குளம் அணுமின் நிலையம் குறித்த விஷயத்தில், தமிழக அரசு ஒரு நிபுணர்குழுவை அமைத்துள்ளது. இந்தக் குழு, அடுத்த சில வாரங்களில் தமிழக அரசுக்கு அறிக்கை சமர்ப்பிக்கும். இதைத் தொடர்ந்து, தமிழக அரசுடன் இணைந்து, கூடங்குளம் அணுமின் நிலையத்தில், மின் உற்பத்தி மிக விரைவில் துவங்கும்.
ஜனநாயக நாட்டில், மக்கள் தங்கள் எதிர்ப்பைத் தெரிவிக்கப் போராடுவது வழக்கமானது தான். ஆனால், போராட்டங்கள் அமைதியானவையாக இருக்க வேண்டும். கூடங்குளம் அணுமின் நிலைய எதிர்ப்பு போராட்டக்காரர்கள், வன்முறை போராட்டங்களை அரங்கேற்றி வருகின்றனர். இது ஜனநாயகத்திற்கு எதிரானதாகும். கண்டனத்திற்குரியதாகும். அணுமின் நிலைய எதிர்ப்பு போராட்டக்காரர்கள், போராட்டம் நடத்த அனுமதி கேட்டால், எவ்வித ஆட்சேபனையும் இல்லாமல், உடனுக்குடன் அனுமதி அளிக்கும் திருநெல்வேலி மாவட்ட நிர்வாகம், அணுமின் நிலைய ஆதரவாளர்கள் போராட்டம் நடத்த அனுமதி கேட்டால், ஏகப்பட்ட நிபந்தனைகளையும், கட்டுப்பாடுகளையும் விதிக்கிறது. இது தவறான அணுகுமுறை.

கூடங்குளம் அணுமின் நிலையம், குறித்த நேரத்தில் மின் உற்பத்தியைத் துவக்கியிருந்தால், தமிழகத்திற்கு 1000 மெகாவாட் மின்சாரம் கிடைத்திருக்கும். இதனால், தற்போது நிலவும் கடுமையான மின்வெட்டைத் தவிர்த்திருக்கலாம். ஆனால், போராட்டக்காரர்கள் மின்உற்பத்தியைத் தடுத்துவிட்டனர். கூடங்குளம் அணுமின் நிலையம் தேவையா, இல்லையா என்பதற்கு பொதுமக்கள் மத்தியில் வாக்கெடுப்பு நடத்த வேண்டியதில்லை. ஏனெனில், ஜனநாயக நாட்டில் பெரும்பாலான மக்கள் பிரதிநிதிகளால் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒரு திட்டத்தை, மீண்டும் வாக்கெடுப்பு நடத்தி, பரிசோதிக்க வேண்டிய அவசியம் இல்லை. எனவே, வாக்கெடுப்பு என்ற பேச்சுக்கே இடமில்லை. இவ்வாறு நாராயணசாமி கூறினார்

கருத்துகள் இல்லை: