வெள்ளி, 23 டிசம்பர், 2011

Dam 999 ஆஸ்கர் விருது கிடைக்க A.R.ரஹ்மான் பிரார்த்தனை

AR Rahman
தமிழகத்தின் ஒட்டுமொத்த எதிர்ப்பையும், கண்டனத்தையும், குமுறலையும் சம்பாதித்த, தமிழக அரசால் திரையிட தடை விதிக்கப்பட்ட சர்ச்சைக்குரிய டேம் 999 படத்துக்கு இசைப் புயல் ஏ.ஆர். ரஹ்மான் முழு ஆதரவு தெரிவித்துள்ளார். இந்தப் படத்தின் ஒரு பாடலுக்காவது ஆஸ்கர் விருது கிடைக்க தான் கடவுளிடம் பிரார்த்தனை செய்வதாக அவர் கூறியுள்ளார்.
ரஹ்மானின் இந்த வேண்டுதல், முல்லைப் பெரியாறு அணைக்காக போராடி வரும் அனைவருக்கும் அதிர்ச்சியையும், வியப்பையும் அளித்துள்ளது. ஒரு தமிழராக இருந்து கொண்டு ரஹ்மான் இப்படிச் சொல்லலாமா என்று அனைவரும் குமுறுகின்றனர்.முல்லைப் பெரியாறு அணையை சர்வதேச அளவில் பிரச்சினையாக்க மலையாளத்தைச் சேர்ந்த சோஹன் ராய் என்பவர், வளைகுடா நாடுகளில் வாழும் மலையாளிகளின் நிதியுதவி மற்றும் கேரள அரசின் முழு ஆதரவுடன் உருவாக்கிய படம்தான் இந்த டேம் 999. ஹாலிவுட் தயாரிப்பாக இதை உருவாக்கி சர்வதேச அளவில் வெளியிட்டு தமிழகத்திற்கு சர்வதேச அளவில் நெருக்கடி ஏற்படுத்தவே இந்த விஷமப் படத்தை எடுத்தார் ராய். அந்த விஷமத்தின் காரணமாகத்தான், முல்லைப் பெரியாறு அணையின் 999 ஆண்டு குத்தகையைக் குறிப்பிடும் வகையில், டேம் 999 என்று தனது படத்துக்குப் பெயரும் வைத்தார்.

ஆனால் இது முல்லைப் பெரியாறு அணை கதை இல்லை என்று ஊர் ஊராகப் போய் விளக்கிய அவர் கூடவே, முல்லைப் பெரியாறு அணை இடிக்கப்பட வேண்டும் என்றும் கூறி வருகிறார். இந்தப் படத்தில் ஒரு அணை உடைந்து பல லட்சம் பேர் வெள்ளத்தில் அடித்துச் செல்வது போல கிராபிக்ஸ் காட்டியிருக்கிறார்கள். இது மக்கள் மனதில் அச்சத்தையும், பீதியையும் ஏற்படுத்துவது போல உள்ளதால், தமிழக அரசும் இப்படத்தை தடை செய்து விட்டது.

இந்தப் படத்தின் இரு பாடல்கள் தற்போது ஆஸ்கர் விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாம். அதில் அப்பாடல்கள் வெற்றி பெறத்தான் ரஹ்மான் வாழத்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ரஹ்மான் கூறுகையில், ஆஸ்கர் விருதுக்கான படங்களின் போட்டியில் டேம் 999 திரைப்படமும், அதன் பாடல்களும் சேர்க்கப்பட்டு இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த பாடல்களில் ஏதாவது ஒன்றாவது ஆஸ்கர் விருது பெற வேண்டும் என்று கடவுளிடம் வேண்டுகிறேன் என்று கூறியுள்ளார் ரஹ்மான்.

கருத்துகள் இல்லை: