ஞாயிறு, 18 டிசம்பர், 2011

'திமுக, அதிமுகவிடம் பெட்டி வாங்கவில்லை என்று ராமதாஸால் கூற முடியுமா?'

Velmurugan
கடலூர்: பாமக நிறுவனர் டாக்டர். ராமதாஸ் யார், யாரையெல்லாம் மிரட்டி பணம் பறித்தார் என்பதற்கான ஆதாரங்கள் என்னிடம் உள்ளன. கடந்த 20 ஆண்டுகளில் திமுகவிடமோ அல்லது அதிமுகவிடமோ பெட்டி வாங்கவில்லை என்று டாக்டர் ராமதாஸால் கூற முடியுமா என்று அக்கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்ட முன்னாள் எம்.எல்.ஏ. வேல்முருகன் கேட்டுள்ளார்.
கடலூர் மாவட்டம், காடாம்புலியூரில் நடந்த இளம்புயல் பாசறை நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் வேல்முருகன் கலந்து கொண்டு பேசுகையில்,
நான் 1996ம் ஆண்டு கட்சியில் சேர்ந்தேன் என்றும், எனக்கு எங்கிருந்து எப்படி பணம் வந்தது என்றும், என்னை துரோகி என்றும் பழிக்கின்றனர். கடந்த 1990ம் ஆண்டு பாமக நிறுவனர் ராமதாஸிடம் டி.எஸ்.ஈ. 1850 அம்பாசிடர் கார் மட்டுமே இருந்தது. கடந்த 20 ஆண்டுகளில் அவர் திமுக, அதிமுகவிடம் பெட்டி வாங்கவில்லை என்று சொல்லட்டும் பார்க்கலாம்.

நான் எம்.எல்.ஏ.வாக இருந்த காலத்தில் யாரிடமும் வசூல் செய்யவில்லை. கட்சி நிர்பந்தத்தினால் சிலர் வசூலித்தனர். அவர்கள் தற்போது என்னுடன் இல்லை. கடந்த சட்டசபை தேர்தலில் ஜி.கே.மணி, நான், குரு தவிர 27 பாமக வேட்பாளர்களிடம் ரூ.2 கோடி சொத்துக்கு பவர் எழுதி வாங்கினர். தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் அந்த 27 பேரின் சொத்துக்கள் யார் பெயரில் உள்ளது என்பதை தெரிந்து கொள்ள முடியும்.

ராமாதஸ் யார், யாரையெல்லாம் மிரட்டி பணம் பறித்தார் என்பதற்கு என்னிடம் டேப், வீடியோ ஆதாரங்கள் உள்ளன. அரசியல் நாகரிகத்திற்காக அமைதியாக இருக்கிறேன். ஆனால் விரைவில் அந்த அமைதியைக் கலைத்திட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளேன். வன்னியர் சங்கத்திலும், திமுகவிலும் இருந்த நான் பாமகவில் இணைந்தேன்.

என்னை அதிமுக, பாஜக, காங்கிரஸ் போன்ற கட்சிகள் அழைத்தும் நான் போகவில்லை. வரும் தை மாதம் ஜாதி, மதம் கடந்து உலகத் தமிழர்களின் பேராதரவுடன் மஞ்சக்குப்பம் மைதானத்தில் புதிய கட்சி துவங்குவேன். அப்போது கட்சி கொள்கைகள் வெளியிடப்படும் என்றார்.

கருத்துகள் இல்லை: