சனி, 24 டிசம்பர், 2011

முல்லைப் பெரியாறு: டிசம்பர் 30-ல் திரைப்பட இயக்குநர்கள் உண்ணாவிரதம்

சென்னை, டிச. 23: முல்லைப் பெரியாறு அணை விவகாரம் தொடர்பாக டிசம்பர் 30-ம் தேதி தமிழ்த் திரைப்பட இயக்குநர்கள் சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் என்று இயக்குநர் பாரதிராஜா கூறினார்.  இது தொடர்பாக சென்னையில் வெள்ளிக்கிழமை அவர் கூறியது:  பல்வேறு பிரச்னைகளில் திரைப்படத் துறையினர் அனைவரும் ஒன்றிணைந்து குரல் கொடுத்தனர்.  ஆனால், முல்லைப் பெரியாறு அணைப் பிரச்னையில் அப்படி ஒன்றிணைந்து குரல் கொடுக்கவில்லை. ஏன் என்றால் இங்கு தமிழர்களுக்கு என்று தனியாக சங்கம் இல்லை.  தென்னிந்தியத் திரைப்பட வர்த்தக சபை என்று இருக்கிறது. தென்னிந்திய நடிகர் சங்கம் என்று இருக்கிறது. ஆனால் தமிழ்த் திரைப்பட வர்த்தக சபை, தமிழ் நடிகர் சங்கம் என்று இல்லை. இதில் உள்ள அரசியலைப் புரிந்துகொள்ள வேண்டும்.  ஆனால் தமிழ்த் திரைப்பட இயக்குநர் சங்கம் வைத்திருக்கிறோம். அதனால்தான் இந்த விவகாரத்தில் போராடி வருகிறோம்.  டிசம்பர் 30-ம் தேதி எங்கள் சங்கம் சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்த உள்ளோம். இதற்காக காவல்துறையினரிடம் அனுமதி கேட்டுள்ளோம். திராவிடம் என்று பேசி அரசியல் செய்பவர்களும் இதனை யோசிக்க வேண்டும் என்று அவர் கூறினார்.  முல்லைப் பெரியாறு விவகாரம் தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களை வெள்ளிக்கிழமை சந்தித்த இயக்குநர் பாரதிராஜா. உடன் இயக்குநர்  தங்கர்பச்சான், சட்டப் பேரவை முன்னாள் உறுப்பினர் வேல்முருகன்.

கருத்துகள் இல்லை: