செவ்வாய், 20 டிசம்பர், 2011

சசிகலா நீக்கம் நிரந்தரமா?; தாற்காலிகமா?

Sasikala and Jayalalitha
சென்னை: அதிமுகவிலிருந்து சசிகலா நீக்கப்பட்டுவிட்டதை 2 வகையாக பார்க்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.
1. உண்மையிலேயே அவரை முதல்வர் ஜெயலலிதா வெளியேற்றிவிட்டார்.
2. பெங்களூர் நீதிமன்றத்தில் நடக்கும் சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணை வேகத்தை தாமதப்படுத்தவே இந்த அறிவிப்பு, இது தாற்காலிகமாக நீக்கம் என்கிறார்கள்.
இதில் எது உண்மை எது பொய் என்பது, இந்த வழக்கில் ஜெயலலிதா, சசிகலா தரப்பினர் அடுத்து தாக்கல் செய்யும் மனுக்களை வைத்து ஓரளவுக்குப் புரிந்து கொள்ள முடியும்.
உண்மையிலேயே சசிகலாவை குடும்பத்தை கூண்டோடு ஜெயலலிதா வெளியேற்றிவிட்டார் என்பதை நம்புவோர் அதற்காக சொல்லும் முக்கிய காரணங்களில் ஒன்று அரசு அதிகாரிகள் இடையே ஏற்பட்ட ஜாதிரீதியிலான மோதல் என்கிறார்கள்.

சசிகலா, அவரது கணவர் எம்.நடராஜனுக்கு ஆகியோர் தங்கள் சமூகத்தைச் சேர்ந்தவர்களையே முக்கிய பதவிகளில் அமர வைத்ததாகவும், இதற்கு நடராஜனுக்கு நெருக்கமான அதிகாரிகள் துணை போனார்கள் என்றும் சொல்லப்படுகிறது.

இதனால், சில முற்பட்ட வகுப்பைச் சேர்ந்த அதிகாரிகள் பாதிக்கப்பட்டதாகவும், அவர்கள் முதல்வருக்கு மிக நெருக்கமான 'அட்வைசரிடம்' விஷயத்தைச் சொல்ல, அவர் இதை முதல்வருக்கு புரிய வைத்ததாகவும், இதையடுத்தே சசிகலாவின் சமூகத்தைச் சேர்ந்த அதிகாரிகளான சிறப்புத் திட்டங்கள் அமலாக்கல் பிரிவு அதிகாரியான பன்னீர்செல்வம், உளவுப் பிரிவின் தலைவர் பொன்.மாணிக்கவேல், சிவனாண்டி ஆகியோரை முதலில் தூக்கி எறிந்துவிட்டு, அடுத்தடுத்து அதிரடியை முதல்வர் ஆரம்பித்தார் என்கிறார்கள்.

சசிகலா தரப்பை ஒழித்துக் கட்ட இந்த அட்வைசர் நீண்டகாலமாகவே முயன்று வந்தார். ஆனாலும் அவரது முயற்சிகள் வெற்றி பெறவில்லை.

இந் நிலையில் தான் பெங்களூர் நீதிமன்றத்தில் நடந்த விசாரணையின்போது சசிகலா தரப்பினர் நடந்து கொண்ட விதம் பல சந்தேகங்களைக் கிளப்ப, அதையே 'மையக் கருவாக' வைத்து, சசிகலா தரப்பினரை காலி செய்துவிட்டார் அட்வைசர் என்கிறார்கள்.

நீதிமன்றத்தில் ஜெயலலிதா ஆஜரானபோது அந்தப் பக்கம் எட்டிக் கூட பார்க்காத, சசிகலாவின் உறவினர்கள், சசிகலாவும், இளவரசியும், சுதாகரனும் ஆஜரானபோது பாசத்தோடு ஓடி வந்ததாகவும், போயஸ் கார்டனில் தடை விதிக்கப்பட்ட சுதாகரன், தனது சித்தி சசிகலாவுடன் கலகலப்பாக பேசிக் கொண்டிருந்ததாகவும் தகவல்கள் வந்து சேர்ந்தன.

இதில் பாதி விஷயங்களை மட்டும் முதல்வருக்கு பாஸ் செய்த உளவுத் துறை, மீதியை 'எடிட்' செய்துவிட்டதாகவும் தகவல் உள்ளது. இந்த விவரங்கள் முதல்வருக்கு முழு அளவில் வேறு சோர்ஸ்கள் மூலம் வந்து சேர்ந்தவுடன் நடந்தது தான் உளவுப் பிரிவு தலைவர் பொன்.மாணிக்கவேலின் நீக்கம் என்கிறார்கள்.

சொத்துக் குவிப்பு வழக்கால், பதவிக்கே பிரச்சனை வரலாம் என்ற அச்சம் பரவியுள்ள நிலையில், மன்னார்குடியினர் உளவுப் பிரிவிலும் கூட தலையிட்டு தனது கண்களை மறைப்பதை முதல்வர் உணர, அதிகாரிகள் மூலம் கிடைத்த இதே தகவல்களை வைத்து அட்வைசரும் முதல்வருடன் பேச, சசிகலா தரப்பினருக்கு கட்டம் கட்டப்பட்டது என்கிறார்கள் ஒரு தரப்பினர்.

இது ஒருபுறம் இருக்க, இன்னொரு தரப்பினரோ, சசிகலாவின் நீக்கமே ஒரு செட்-அப் தான் என்கிறார்கள்.

சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணையில் அடுத்தபடியாக, தங்களுக்கு சாதமாக காய் நகர்த்த இந்த நாடகம் தேவைப்படுகிறது என்கிறார்கள்.

1996ம் ஆண்டு ஊழல் குற்றச்சாட்டுகளால் பெயர் கெட்டுப் போய் சட்டமன்றத் தேர்தலில் அதிமுக தோற்றது. இதையடுத்து வந்த திமுக அரசு சசிகலாவை கைதும் செய்தது. உடனடியாக, சசிகலாவை கட்சியை விட்டு நீக்குவதாக ஜெயலலிதா அறிவித்தார். ஆனால், இந்த வழக்கில் ஜாமீனில் விடுதலையானவுடன் சசிகலா போய் சேர்ந்த இடம் போயஸ் கார்டன் தான்.

ஆக, இந்தமுறையும் வழக்கை மனதில் வைத்துத் தான் இந்த அறிவிப்பை முதல்வர் வெளியிட்டுள்ளார் என்கிறார்கள்

கருத்துகள் இல்லை: