புதன், 7 டிசம்பர், 2011

கலைஞர் :கேரளாவில் வன்முறைச் செயல்கள், கேரளாவில் தொடர்ந்தால்

சென்னை: ""தமிழக மக்களுக்கு விரோதமான வன்முறைச் செயல்கள், கேரளாவில் தொடர்ந்தால், அதைத் தடுத்து நிறுத்த மத்திய அரசு தவறினால், கட்சியின் செயற்குழு கூடி, உரிய முடிவெடுக்கும்'' என, தி.மு.க., தலைவர்  கலைஞர் அறிவித்துள்ளார்

இது தொடர்பாக, நிருபர்களிடம் நேற்று அவர் கூறியதாவது: முல்லைப் பெரியாறு பிரச்னைக்காக, சுப்ரீம் கோர்ட்டால் அமைக்கப்பட்டுள்ள குழுத் தலைவர், நீதிபதி ஆனந்துக்கு, தி.மு.க., சார்பில் ஒரு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அணையின் நீர்மட்டத்தை, 136 அடியிலிருந்து 120 அடியாகக் குறைக்க வேண்டும் என்ற, கேரளாவின் வேண்டுகோளை ஒருபோதும் ஏற்கக் கூடாது. நீர்மட்டத்தை, 142 அடியாக உயர்த்த அனுமதிக்க வேண்டும் என, கேரளா அரசுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டதை உடனடியாக அமல்படுத்த வேண்டும். பொதுமக்களிடையே தேவையின்றி அச்ச உணர்வையும், பீதி மற்றும் குழப்பத்தையும் ஏற்படுத்தி வரும், கேரள அரசின் நடவடிக்கைகளை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும்.

இப்பிரச்னைக்கு ஒரு தீர்வு காணப்படும் வரை, அணைப்பகுதி உள்ள இடத்தை, மத்திய பாதுகாப்புப் படையினரின் பாதுகாப்பில் விட வேண்டும் என, அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்த விஷயங்கள் தான், தி.மு.க.,வின் இன்றைய கருத்தும் கூட. கேரள எல்லையில், தொடர்ந்து தமிழக மக்களுக்கு விரோதமாக வன்முறைச் செயல்கள் நடைபெறுவதாக செய்திகள் வருகின்றன. அவற்றை தடுத்து நிறுத்த, கேரள அரசும் முன்வரவில்லை. தடுத்து நிறுத்த கடமைப்பட்டுள்ள, மத்திய அரசும் இதுவரை முன்வரவில்லை. எனவே, இந்த நிலைமை அங்கே தொடருமானால், அதுபற்றி தி.மு.க.,வின் செயற்குழு கூடி, உரிய முடிவெடுக்கும். இவ்வாறு  தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை: