சனி, 10 டிசம்பர், 2011

கேரள சுயநலவாதிகளின் சதியைப் புரிந்து கொள்ளுங்கள்: கேரள மக்களுக்கு ஜெயலலிதா


Jayalalitha
சென்னை: முல்லைப் பெரியாறு மிகவும் பாதுகாப்பாக உள்ளது என்பதையும், இதனால் மக்களின் உயிருக்கும, உடைமைக்கும் அச்சுறுத்தல் இல்லையென்பதையும் கேரள மக்கள் உணரவேண்டுமென்று முதல்வர் ஜெயலலிதா கேட்டுக் கொண்டுள்ளார்.
முல்லைப் பெரியாறு விவகாரம் தொடர்பாக இருமாநிலங்களுக்கு இடையே உள்ள உறவில் விரிசல் ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது. இரு மாநில எல்லைப் பகுதிகள் பதற்றமான சூழல் உருவாகியுள்ளது.
இந்த நிலையில் முதல்வர் ஜெயலலிதா விடுத்துள்ள அறிக்கையில், "முல்லைப்பெரியாறு அணை உடைந்தால் மாநிலத்தின் பல கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கும் அபாயம் ஏற்படும் என்ற கேரள அரசியல்வாதிகள் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளனர். உண்மை அதுவல்ல.முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டம்136 அடிக்குமேல் உயர்த்தப்பட்டால் கேரளா சட்டவிரோதமாக ஆக்கிரமிப்பு செய்து கட்டியுள்ள விடுதிகள் நீரில் மூழ்கும். எனவே முல்லை பெரியாறு அணையை செயல் இழக்கச்செய்யவேண்டும் என்று கூறுவதற்கு இதுவும் ஒரு காரணமாக இருக்கும். இவ்வாறான சதிச் செயலை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

முல்லைப் பெரியாறு அணை, புது அணையைப் போன்று முழுவதும் பாதுகாப்பாகவே உள்ளது. சுயநல அக்கறை கொண்டோரின் சதிச் செயலால் ஏற்படுத்தப்படும் இந்த அச்சுறுத்தலை கேரள மக்கள் உணர வேண்டும். இரு மாநிலங்களுக்கும் இடையேயான சுமுகமான உறவினை நிலைநிறுத்தி, இருமாநில நலன் கருதி எந்தவொரு பிரிவினை சக்திகளுக்கும் இடம் தராமல் இருக்க வேண்டும்.

இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா கேரள மக்களைக் கேட்டுக் கொண்டுள்ளார்.

மேலும் இன்றைய நாளிதழ்களில் கேரள மக்களுக்கு ஒரு வேண்டுகோள் எனும் பெயரில் ஒரு பக்க முழு விளம்பரம் தந்துள்ளார் ஜெயலலிதா. அதில் கேரள அரசியல்வாதிகளின் சுயநல அரசியல், முல்லைப் பெரியாறு அணை குறித்து பல உண்மைகளை வெளியிட்டுள்ளார் முதல்வர்

கருத்துகள் இல்லை: