புதன், 7 டிசம்பர், 2011

Rolls Roys பெங்களூரில் சலூன் கடைக்காரரிடம் ரோல்ஸ் ராய்ஸ் கார்


பெங்களூர் : பெங்களூரில் முடி திருத்தும் தொழிலாளி ஒருவர் ரோல்ஸ் ராய்ஸ் கார் வைத்திருக்கிறார் என்றால் நம்ப முடிகிறதா? ஆம்... உழைப்பால் உயர முடியும் என்பதற்கு மற்றுமொரு உதாரணமாக விளங்குகிறார் அவர். பெங்களூரில் ‘இன்னர் ஸ்பேஸ்’ என்ற பெயரில் சலூன் வைத்திருப்பவர் ரமேஷ் பாபு. இவரது தந்தை அந்த காலத்தில் சின்ன சலூன் கடை வைத்து பிழைப்பு நடத்தியவர். கடந்த 1979ம் ஆண்டில் தந்தை இறந்த போது, ரமேஷ் பாபுவுக்கு 9 வயதுதான். ரமேசை வளர்ப்பதற்கு கஷ்டப்பட்ட அவரது தாய், சலூன் கடையை தினம் 5 ரூபாய்க்கு வாடகைக்கு விட்டார்.
இதன்பின், 10ம் வகுப்பு வரை கஷ்டப்பட்டு படித்த ரமேஷ் தொடர்ந்து படிக்க வசதியில்லாமல் படிப்பை பாதியில் நிறுத்தினார். முடிதிருத்தும் தொழிலாளியாக ஒரு கடையில் வேலைக்கு சேர்ந்தார்.
அதுதான் அவரது வாழ்க்கையின் துவக்கம். சிறுக, சிறுக பணம் சேர்த்து 1991ம் ஆண்டு பெங்களூரில் சொந்தமாக சலூன் வைத்தார். அவரது கடின உழைப்பால் சலூன் பிரபலமானது.

கையில் காசு சேரவே, 1994ல் ஒரு மாருதி ஆம்னி வேன் வாங்கி வாடகைக்கு விட்டார். அடுத்து, இண்டிகா, சுமோ என ஆரம்பித்து இப்போது 50 இன்னோவா, 4 மெர்சிடிஸ், 4 பி.எம்.டபிள்யூ வைத்துள்ளார். கடைசியாக அவர் வாங்கியிருப்பது ரூ.3 கோடி விலையில் ரோல்ஸ் ராய்ஸ் கார். இந்த காருக்கு ஒரு நாள் வாடகையாக ரூ.50 ஆயிரம் வசூலிக்கிறார்.

இப்போதும் சலூனில் ரூ.100க்கு முடிவெட்டும் ரமேஷ் பாவுக்கு பாலிவுட் நடிகர்கள் சல்மான்கான், ஆமிர்கான் எல்லாம் வாடிக்கையாளர்கள். அவ்வளவு ஏன்... ஐஸ்வர்யா ராய்க்கும் கூட இவர்தான் முடி வெட்டி விடுகிறார்

கருத்துகள் இல்லை: