வெள்ளி, 9 டிசம்பர், 2011

Uniform Civil Code ஏன் கொண்டுவரமுடியவில்லை?

பொது உரிமையியல் சட்டம் : ஏன் கொண்டுவரமுடியவில்லை?
1950 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட இந்திய அரசியலமைப்புச் சட்டம் 44 ஆம் ஷரத்தில், இந்திய குடிமக்களுக்கு இந்திய அரசாங்கம் பொது உரிமையியல் சட்டத்தை (Uniform Civil Code) ஏற்படுத்தித்தர ஆவண செய்ய வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டிருக்கிறது.
Article 44 – The State shall endeavour to secure for the citizens a uniform civil code throughout the territory of India.
ஆனால் அரசியலமைப்புச் சட்டம் தோற்றுவிக்கப்பட்டு 61 ஆண்டுகள் ஆகியும், இது வரை ஆட்சி செய்த எந்த அரசியல் கட்சியும் பொது உரிமையியல் சட்டத்தைக் கொண்டுவர முயற்சி செய்யவில்லை. ஏன் செய்யவில்லை என்பதை பார்ப்பதற்கு முன்பு பொது உரிமையியல் சட்டம் என்றால் என்ன, அதனால் என்ன நன்மை என்பதை பார்த்துவிடுவோம்.
நம் நாட்டில் பல்வேறு மதத்தை சேர்ந்த மக்கள் இருக்கிறார்கள். ஒவ்வொரு மனிதனுடைய வாழ்வியலையும் – பிறப்பிலிருந்து இறப்பு வரை (அவனுக்கு பிடித்தாலும், பிடிக்காவிட்டாலும்) அவனுடைய மதம்தான் வழிநடத்துகிறது. திருமணம், விவாகரத்து, ஜீவனாம்சம், சுவீகாரம், பரம்பரை சொத்துரிமை, ரட்சணை போன்ற அனைத்து விவகாரங்களிலும் ஒருவர் தான் சார்ந்த மதக்கோட்பாடுகளின்படிதான் செயல்பட்டாகவேண்டும். மதம் சார்ந்த கோட்பாடுகள், தொன்றுதொட்டு வந்த பழக்கவழக்கங்கள் மற்றும் வாழ்க்கை முறைகள் சார்ந்த விஷயங்கள்தான் தனிப்பட்ட சட்டமாக (Personal Law) அங்கீகரிக்கப்படுகிறது.

இந்தியாவில் இந்துக்கள், முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள், பௌத்தர்கள், சமணர்கள் ஆகியோரே குறிப்பிடப்படும் அளவில் இருக்கிறார்கள். இவர்களைத் தவிர பார்சிகள், யூதர்கள், பஹாய் சமூகத்தைச் சேர்ந்தவர்களும் சிறிய அளவில் இருக்கிறார்கள். இந்துக்களுக்கு அவர்களுடைய தர்ம சாஸ்திரங்களில் சொல்லப்பட்டவை தனிப்பட்ட சட்டங்களாக அங்கீகரிக்கப்பட்டு வந்தன (இந்திய பாராளுமன்றம் இந்துக்களுக்காக பல்வேறு சட்டங்கள் கொண்டுவரும்வரை). தர்ம சாஸ்திரங்களிலும் முக்கியமாக யஜ்ணவாக்ய (Yajnavalkya) ஸ்மிருதிதான் குடும்பச் சொத்துரிமை பற்றிய வழக்குகளில் பயன்படுத்தப்பட்டுவந்தது. யஜ்ணவாக்ய ஸ்மிருதிகூட நேரடியாக விவாதங்களுக்கு எடுத்து கையாளப்படவில்லை. அதற்கு பதில் அதன் வியாக்கியானங்களான (உரைநூல்களான) மிதாக்ஷராவும் (Mitakshara), தயாபகாவும் (Dayabhaga) பயன்படுத்தப்பட்டு வந்தன. வங்காளத்திலும் அசாமிலும் தயாபகாவின்படிதான் சொத்து பரிவர்த்தனைகள் நடைபெற்று வந்தன. இந்தியாவில் ஏனைய மாநிலங்களில் மிதாக்ஷராவின்படி குடும்ப சொத்துகள் பாகம் செய்யப்பட்டு வந்தன. மிதாக்ஷராவின்படி, இந்து குடும்பத்தில் ஒரு குழந்தை பிறந்தவுடன், அக்குழந்தை குடும்ப சொத்துக்குக் கூட்டு உரிமையாளர் ஆகிவிடுகிறது. ஆனால் தயாபகாவின் விதிமுறைப்படி, தகப்பனார் இறந்த பின்பு தான், குடும்ப சொத்தில் அவருடைய வாரிசுக்கு உரிமை பிறக்கிறது. மிதாக்ஷரா முறைப்படி இறந்த வாரிசின் மனைவி கணவனின் குடும்ப சொத்தில் பங்கு கேட்க முடியாது. ஜீவனாம்சம் மட்டுமே கோரமுடியும். ஆனால் தயாபகாவின்படி இறந்த வாரிசின் மனைவிகூட கணவனின் குடும்பச் சொத்தில் கணவனுக்கு சேரவேண்டிய பங்கைப் பிரித்து வாங்கலாம்.
இந்தியா சுதந்தரம் அடைந்த பின்னர், 1956 ஆம் ஆண்டு இந்துக்களுக்காக பல சட்டங்கள் பாராளுமன்றத்தால் இயற்றப்பட்டு அமல்படுத்தப்பட்டன. அவை பின்வருமாறு,
  1. திருமணம் மற்றும் விவாகரத்து தொடர்பாக, இந்து திருமணச் சட்டம்
  2. இறங்குரிமை தொடர்பாக (Intestate Succession) இந்து இறங்குரிமைச் சட்டம்
  3. இளவர் உரிமை மற்றும் இரட்சணை – இந்து இளவர் மற்றும் இரட்சணைச் சட்டம் (Hindu Minority and Guardianship Act)
  4. சுவீகாரம் மற்றும் ஜீவனாம்சம் – இந்து சுவீகாரம் மற்றும் ஜீவனாம்ச சட்டம் – (Hindu Adoptions and Maintenance Act)
  5. உயில் வழி இறங்குரிமை (Testamentary Succession) – இந்திய இறங்குரிமைச் சட்டம் – (Indian Succession Act)
மேற்சொன்ன சட்டங்கள் சீக்கியர்கள், பௌத்தர்கள் மற்றும் சமண மதத்தை சேர்ந்தவர்களின் தனிப்பட்ட விவகாரங்களுக்கும் பொருந்தும்.
முஸ்லிம்களுக்கு அவர்களுடைய தனிப்பட்ட சட்டமாக ஷரியா பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஷரியா என்பது முஸ்லிம்களின் மறைநூலான குர்ஆன் மற்றும் நபிகள் நாயகம் பின்பற்றி வந்த வழிமுறைகளில் இருந்து தொகுக்கப்பட்ட விவரங்களாகும். முஸ்லிம்களில் ஷியா, சுன்னி என்ற இரு பெரும் பிரிவுகள் உள்ளன. அதிலும் ஷியா பிரிவில் ஹனாஃபி, ஷஹஃபி, மாலிகி, ஹன்பாலி மற்றும் ஷஹரி என பல உட்பிரிவுகள் உள்ளன. இந்த ஒவ்வொரு பிரிவிலும் வாரிசுரிமை விதிகளில் பல்வேறு வித்தியாசங்கள் உள்ளன. இறந்தவரின் சொத்தில் வாரிசுகளுடைய பங்குகள் ஒவ்வொரு உட்பிரிவிலும் வெவ்வேறாக இருக்கும்.
இயேசு கிறிஸ்து தோன்றி 2000 ஆண்டுகளானாலும், கிறிஸ்தவ மதம் இந்தியாவில் அதிக அளவில் பரவியது சமீப நூற்றாண்டுகளில்தான். அதுவும் போர்ச்சுக்கீசிய, ஆங்கிலேய ஆட்சியில்தான் கிறிஸ்தவம் அதிக அளவில் பரவத் தொடங்கியது. சென்ற நூற்றாண்டிலேயே ஆங்கிலேயர்கள் கிறிஸ்தவர்களுக்காக திருமணம், விவாகரத்து மற்றும் சொத்துரிமை ஆகிய விவகாரங்களில் சட்டங்கள் கொண்டுவந்துவிட்டனர். திருமணம் சம்பந்தமாக இந்திய கிறிஸ்தவத் திருமணச் சட்டம், விவாகரத்து சம்பந்தமாக இந்திய விவாகரத்து சட்டம், சொத்துரிமை சம்பந்தமாக இந்திய இறங்குரிமை சட்டம் (Indian Succession Act) என பல சட்டங்களை ஆங்கிலேய அரசு கிறிஸ்தவர்களுக்காகக் கொண்டுவந்தது.
இதில் என்ன விஷயம் என்றால் இந்த சட்டங்கள் யாவும், அனைத்து கிறிஸ்தவர்களுக்கும் பொருந்தாது. திருவாங்கூர் சமஸ்தானத்தில் உள்ள கிறிஸ்தவர்களுக்கு, அந்த சமஸ்தானத்தின் அரசால் திருவாங்கூர் கிறிஸ்தவ இறங்குரிமை சட்டம் கொண்டுவரப்பட்டது. அதேபோல் கொச்சின் சமஸ்தானத்தில் கொச்சின் கிறிஸ்தவ இறங்குரிமை சட்டம் கொண்டுவரப்பட்டது. இந்திய கிறிஸ்தவ இறங்குரிமை சட்டத்துக்கும் திருவாங்கூர், கொச்சின் இறங்குரிமை சட்டங்களுக்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளன. கர்நாடக மாநிலமான கூர்க் மாவட்டத்தில் உள்ள கிறிஸ்தவர்களுக்கு மேற்குறிப்பிட்ட எந்தச் சட்டமும் பொருந்தாது. அதே போல் கிறிஸ்தவர்களாக மதம் மாறிய சில பழங்குடியினர் மற்றும் மலைவாழ் ஜாதியினர்களுக்கும் மேற்குறிப்பிட்ட சட்டங்கள் பொருந்தாது. உதாரணத்துக்கு, மேகாலயா மாநிலத்தில் இருக்கும் காசி, ஜெயந்தியா மற்றும் காரோ மலைகளில் வாழும் கிறிஸ்தவர்கள் இன்னமும் இந்து முறைப்படிதான் தங்களது சொத்து சம்பந்தமான பரிவர்த்தனைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதேபோல்தான் பீகார் மாநிலத்தில் வாழும் முண்டாக்களும், ஒரிசா மாநிலத்தில் வாழும் ஓராண்களும் . கிறிஸ்தவர்களாக மாறி இருந்தாலும், தங்களுடைய பூர்வீக பழக்கவழக்கத்தின்படிதான் இன்றும் சொத்துப் பரிவர்த்தனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இவற்றை தவிர பிரெஞ்சு நாட்டின் ஆதிக்கத்தின் கீழ் இருந்த புதுச்சேரி மக்களுக்கும், போர்ச்சுக்கீசிய ஆதிக்கத்தின் கீழ் இருந்த கோவா மக்களுக்கும் தனித் தனிச் சட்டங்கள் இருந்துவருகின்றன. பார்சிகளுடைய திருமணம் மற்றும் விவாகரத்து தொடர்பான விவகாரங்களுக்கு பார்சி திருமணம் மற்றும் விவாகரத்து சட்டம் பொருந்தும். அதேபோல் பார்சிகளின் சொத்துகள் தொடர்பான விவகாரங்களுக்கு இந்திய இறங்குரிமை சட்டம் பொருந்தும்.
2
ஒரு மதத்துக்கு உட்பட்ட நபருக்கு பொருந்தும் சட்டத்தைப் பற்றிதான் மேலே பார்த்தோம். வெவ்வேறு மதத்தை சேர்ந்தவர்கள் திருமணம் செய்து கொண்டால் அவர்களுக்கு சிறப்பு திருமணச் சட்டம் பொருந்தும். சிறப்பு திருமணம் செய்து கொண்டவர்களுக்கு பிறக்கும் வாரிசுகளுக்கான சொத்துரிமை தொடர்பான விவகாரங்களுக்கு இந்திய இறையுரிமை சட்டம் பொருந்தும்.
இந்தியாவில் பல விதமான மதங்கள். ஒவ்வொரு மதத்திலும் பல உட்பிரிவுகள். ஒவ்வொரு உட்பிரிவிலும் பல சட்ட விதிகள். இஸ்லாம் மதத்தில் ஓர் ஆண் நான்கு திருமணங்கள் செய்து கொள்ளலாம்; ஆனால் மற்ற மதங்களில் ஒன்றுக்கு மேல் திருமணம் செய்து கொள்வது தவறு. இஸ்லாமியச் சமூகத்தில் நீதிமன்றம் செல்லாமலே தலாக் சொல்லி விவாகரத்து பெறலாம்; ஆனால் கிறிஸ்தவ சமூகத்தில் நீதிமன்றம் சென்று விவாகரத்து பெற்றாலும், அதை மூன்று நீதிபதிகள் அடங்கிய உயர்நீதிமன்றம் உறுதி செய்யவேண்டும். இஸ்லாத்தில், விவகாரத்து பெற்ற பெண்களுடைய இதத் சமயத்தில் (விவாகரத்து செய்யப்பட்ட முஸ்லிம் பெண்கள் விவாகரத்துக்குப் பிறகு, அடுத்த மூன்று மாதவிடாய் மாதங்களுக்கு வேறு திருமணம் செய்து கொள்ளக்கூடாது. இந்த மூன்று மாத காலம் இதத் காலம் என்று கூறப்படுகிறது) மட்டும் ஜீவனாம்சம் வழங்கினால் போதும் என்று விதி உள்ளது. மற்ற சமூகங்களில் விவாகரத்து பெற்ற மனைவி மறுமணம் செய்து கொள்ளும்வரை அல்லது சுயமாக சம்பாதிக்கும் வரை அவளுடைய முன்னாள் கணவன் ஜீவனாம்சம் வழங்கவேண்டும்.
இஸ்லாமிய சமூகத்தில் சொத்தில் ஆணுக்கு இரண்டு பங்கும், பெண்ணுக்கு ஒரு பங்கும் வழங்கினால் போதும் என்று விதி உள்ளது. திருவாங்கூர் சமஸ்தானம் உருவாக்கிய கிறிஸ்தவச் சட்டத்தின் விதிகளின்படி, பெண் வாரிசுக்கு 5000 ரூபாய் மட்டும் கொடுத்துவிட்டு, ஆண் வாரிசுக்கு மீதமுள்ள அனைத்து சொத்துகளையும் கொடுத்து விடலாம் என்று சட்டம் சொல்கிறது. இந்து சமூகத்தில் குடும்ப சொத்தில் பெண்களுக்கு பங்கு இல்லை என்று 2005 ஆம் ஆண்டு வரை இந்து இறங்குரிமை சட்டத்தில் விதியாக இருந்தது (விதிவிலக்காக மேற்கு வங்காளம், ஆந்திரா, தமிழகம் ஆகிய மாநிலங்களில் 2005 ஆம் ஆண்டுக்கு முன்னரே, பெண்களுக்கும் குடும்பச் சொத்தில் சரிசமமான உரிமை இருக்கிறது என்று  திருத்தம் கொண்டுவரப்பட்டிருந்தது). மேலும், கிறிஸ்தவச் சமூகத்தில் இந்திய இறங்குரிமைச் சட்டத்தின்படி கணவன் இறந்து விட்டால், அவருடைய மனைவிக்கு கணவனின் சொத்தில் மூன்றில் ஒரு பங்கு வழங்கப்படவேண்டும். அதே போல் கணவனுக்கு மனைவியின் சொத்தில் மூன்றில் ஒரு பங்கு உண்டு. இந்து சமூகத்தில் இறந்த கணவனின் சொத்தில் மற்ற வாரிசுகள் போல் மனைவிக்கும் ஒரு பங்குதான்.
3
நான் இங்கு குறிப்பிட்டது பிரச்சனையின் ஒரு பகுதிதான். ஒரு நாட்டில் இருக்கும் அனைத்து மக்களுக்கும் ஒரே மாதிரி சட்டம்தான் இருக்கவேண்டும். சட்டத்தில் ஏற்றத்தாழ்வுகள் இருக்கக்கூடாது. ஏதாவது ஒரு விவகாரத்தில், ஒரு சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கு அதிகப்படியான உரிமை இருந்தால் மற்ற சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கு இது பிரச்னையாகி போகிறது. உதராணத்துக்கு, இந்து மதத்தில் ஒருவர் ஒரு திருமணம்தான் செய்துகொள்ள முடியும். தன்னுடைய முதல் மனைவி உயிரோடு இருக்கும்போது அவரை விவாகரத்து செய்யாமல் வேறொரு பெண்ணை இரண்டாவது திருமணம் செய்து கொண்டால் அது சட்டப்படி குற்றம். இரு மணம் புரிந்த கணவருக்கு Bigamy என்ற குற்றம் புரிந்ததற்காக ஏழு ஆண்டுகள் வரை சிறை தண்டனை வழங்கப்படும். இந்நிலையில், இஸ்லாத்தில் உள்ள சட்டத்தைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுதிக்கொள்வதற்காக, இரண்டாம் திருமணம் செய்து கொள்ள விரும்பும் ஓர் இந்து ஆண், மறுமணம் செய்து கொள்வதற்கு முன் போலியாக தன்னுடைய மதத்தை மாற்றிக்கொள்கிறான். (பிரபல இந்தி நடிகரான தர்மேந்திரா, தனக்கு ஏற்கெனவே திருமணமாகியிருந்தும் ஹேமமாலினியை திருமணம் செய்து கொள்வதற்காக, இஸ்லாம் மதத்துக்கு மாறியதாக செய்தி உண்டு). சட்டத்தால் ஏற்றத்தாழ்வுகள் போக்கடிக்கப்படவேண்டுமே தவிர, ஏற்றத்தாழ்வுகள் உருவாகக்கூடாது. குடும்ப விவகாரங்களில், ஒவ்வொரு சமூகத்தை சேர்ந்தவர்களுக்கும் தனித்தனிச் சட்டங்கள் இருப்பதால் நீதி பரிபாலனை செய்வதிலும் நடைமுறை சிக்கல்கள் நிறைய இருக்கின்றன.
இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் 44 வது பிரிவில், இந்திய குடிமக்கள் அனைவருக்கும் பொதுவான உரிமையியல் சட்டம் கொண்டுவர அரசு முனையவேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தாலும், இன்று வரை எந்த அரசியல் கட்சியும் அதற்கான முனைப்பைச் செய்யவில்லை. காரணம் வாக்குகள் போய்விடுமே என்கிற பயம்தான். குறிப்பாக, சிறுபான்மையினரின் வாக்குகள். இந்திய அரசுப் பொது உரிமையியல் சட்டம் கொண்டுவருவது, தங்களுடைய மத நம்பிக்கைக்கு எதிரானது என்று சிறுபான்மையினர் கருத்து தெரிவிக்கிறார்கள்.
4
ஷா பானு என்ற சுமார் 62 வயது முஸ்லிம் பெண்மணியை, அவருடைய வழக்கறிஞர் கணவன் முகமது அகமது கான் வீட்டை விட்டு விரட்டி விட்டார். விரட்டப்பட்ட ஷா பானு, 1978 ஆம் ஆண்டு இந்தூர் மாஜிஸ்டிரேட்டிடம் குற்றவியல் நடைமுறை சட்டத்தின் (Criminal Procedure code) 125 வது பிரிவின்படி தன்னுடைய கணவனிடமிருந்து ஜீவனாம்சம் பெற்றுத் தரும்படி வழக்கு தாக்கல் செய்தார்.ஷா பானு தன்னுடைய பிராதில், தன்னுடைய கணவனின் ஆண்டு வருமானம் ரூபாய் 60,000/- என்றும், தனக்கு மாதா மாதம் தன் கணவர் ரூபாய் 500/- ஜீவனாம்சமாக தரவேண்டும் என்றும் பரிகாரம் கேட்டிருந்தார்.
வழக்கு நிலுவையில் இருக்கும்போது ஷா பானுவை அவரது கணவன் தலாக் செய்துவிட்டார். தன் மனைவியின் வழக்குக்கு பதிலளித்த முகமது அகமது கான், இஸ்லாத்தின்படி விவாகரத்து அளிக்கப்பட்ட மனைவிக்கு, இதத் சமயத்தில் மட்டும்தான் ஜீவனாம்சம் வழங்கப்படவேண்டும். ஷா பானுவுக்கு இதத் காலம் முடிந்துவிட்டது. மேலும் திருமணத்தின் போது 3000 ரூபாய் மஹர் (இஸ்லாமில் ஆண்கள் பெண்களுக்கு திருமணத்தின் போது தரவேண்டிய அல்லது தருவதாக ஒப்புக்கொள்ளும் மணக்கொடை) தொகையை நீதிமன்றத்தில் ஷா பானுவின் கணக்கில் செலுத்திவிட்டேன். எனவே, ஷா பானுவுக்கு ஜீவனாம்சம் வழங்கவேண்டியது இல்லை என்று வாதிட்டான். வழக்கை விசாரித்த மாஜிஸ்திரேட் முகமது அகமது கானின் வாதத்தை ஏற்றுக்கொள்ளவில்லை. குற்றவியல் நடைமுறைச் சட்டம் அனைவருக்கும் பொதுவானது. இஸ்லாமியர்களின் ஷரியத், குற்றவியல் நடைமுறை சட்டத்தை பாதிக்காது என்று கூறி, 1979 ஆம் ஆண்டு வழங்கப்பட்ட தன்னுடைய தீர்ப்பில், ஷா பானுவுக்கு மாதா மாதம் 25 ரூபாய் ஜீவனாம்சமாக முகமது அகமது கான் வழங்கவேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தார். மாத ஜீவனாம்சம் 25 ரூபாய் தனக்கு போதாது என்று கூறி, மத்திய பிரதேச உயர் நீதிமன்றத்தில் மறு ஆய்வு மனு ஒன்றை, ஷா பானு தாக்கல் செய்தார். மறு ஆய்வு மனுவை விசாரித்த உயர் நீதி மன்றம், ஷா பானுவின் ஜீவனாம்சத்தை ரூபாய் 25 லிருந்து ரூபாய் 179.20 என்று உயர்த்தியது. உயர் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்த முகமது அகமது கான், உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தான். மேல் முறையீட்டை விசாரித்த உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்ற தீர்ப்பு சரிதான் என்று கூறி முகமது அகமது கானின் அப்பீல் மனுவை தள்ளுபடி செய்த்து. உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு 1985 ஆம் ஆண்டு வெளியானது.
உச்ச நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து முஸ்லீம்கள் குரல் கொடுத்தனர். தங்களுடைய மத நம்பிக்கைகளில் நீதிமன்றம் தலையிடுகிறது என்று ஆர்ப்பாட்டம் செய்தனர். போராட்டங்கள் தொடங்கின. கலவரம் வெடித்தது.
அந்த சமயத்தில்தான் பாரதப் பிரதமர் இந்திரா காந்தி படுகொலை செய்யப்பட்டு, தேர்தல் நடந்து முடிந்து, இந்திரா காந்தியின் புதல்வர் ராஜீவ் காந்தி தலைமையில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுஆட்சியைப் பிடித்திருந்தது. ஷா பானுவின் வழக்கில் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பால் சிறுபான்மையினருக்கு ஏற்பட்ட அதிருப்தியை சரி செய்யும் பொருட்டு, ராஜீவ் காந்திஅரசு, உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு செல்லுபடியாகாத வண்ணம் பாராளுமன்றத்தில் புதிய சட்டம் ஒன்றை கொண்டுவந்தது. அந்த சட்டத்துக்கு The Muslim Women (Protection of Rights on Divorce) Act 1986 என்று பெயர். இச்சட்டத்தின்படி முஸ்லிம் பெண்கள் ஜீவனாம்சம் கோரி மாஜிஸ்டிரேட்டிடம் மனு தாக்கல் செய்தால், மாஜிஸ்டிரேட் அந்த முஸ்லிம் பெண்மணியின் சொந்தக்காரர்கள் (கணவனைத் தவிர்த்து), யார் அந்த பெண்மணி இறந்த பிறகு அவருடைய சொத்துக்கு வாரிசுதாரர் ஆகிறார்களோ, அவர்களை அந்த பெண்மணிக்கு ஜீவனாம்சம் வழங்கும்படி உத்தரவு பிறப்பிக்கலாம். அப்படிப்பட்ட சொந்தக்காரர்கள் யாரும் பாதிக்கப்பட்ட பெண்மணிக்கு இல்லை என்றாலோ அல்லது இருந்தும் ஜீவனாம்சம் வழங்கக்கூடிய சூழ்நிலையில் அவர்கள் இல்லை என்றாலோ, அந்த பெண்மணிக்கு வக்ஃப் வாரியம் (இஸ்லாமிய அறக்கட்டளை) ஜீவனாம்சம் வழங்க மாஜிஸ்திரேட் உத்தரவிடலாம்.
இது போன்ற சூழ்நிலைகள்தான், நம் நாட்டில் பொது உரிமையியல் சட்டம் வருவதற்கு தடையாக இருக்கிறது.
5
இந்திய அரசியலமைப்புச் சட்டம் உருவாக்குவதற்காக அமைக்கப்பட்ட அரசியல் நிர்ணயச் சபையில் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் வரைவு மசோதாவின்மீது விவாதம் நடைபெற்றது. அந்த வரைவு மசோதாவில், 35 வது ஷரத்தைப் பற்றி (இன்றைய அரசியலமைப்புச் சட்டத்தின் 44 வது ஷரத்து) பல வித கருத்துகள் நிலவின. ஆட்சேபனைகள் எழும்பின. பொது உரிமையியல் சட்டத்தைப் பற்றி நடந்த விவாதத்தில், அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கியவர்களில் ஒருவரான அல்லாடி கிருஷ்ணசாமி தன்னுடைய கருத்தை பின்வருமாறு பதிவு செய்திருக்கிறார்.
பொது உரிமையியல் சட்டம் கொண்டு வந்தால் மக்கள் நல்லிணக்கம் பாதிக்கும் என்று கூறுவது தவறு. பொது உரிமையியல் சட்டம் கொண்டுவராமல் இருந்தால்தான் நல்லிணக்கம் பாதிக்கப்படும். ஒவ்வொரு சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கும் ஒவ்வொரு விதமான சட்டம் என்று இருந்தால், நாட்டை ஒருங்கிணைத்து நிர்வகிக்க முடியாது. பொது உரிமையியல் சட்டம் என்பது ஒரு மதக் கோட்பாட்டை எடுத்து இன்னொரு மதத்தின் மீது திணிப்பது அல்ல. இன்று இந்து இறங்குரிமைச் சட்டத்தில் நிறைய மாற்றங்கள் கொண்டுவரப்பட்டிருக்கின்றன. இந்த மாற்றங்களெல்லாம் ஆங்கில சட்டத்தின் அடிப்படையிலும் ரோமானிய சட்டத்தின் அடிப்படையிலும் ஏற்பட்டிருக்கின்றன. இந்து சட்டத்தை தொகுக்க நினைப்பவர்கள் மற்ற சட்டங்களில் உள்ள நல்ல விஷயங்களையும் எடுத்துக்கொள்கின்றனர். சட்டத்தில் ஏற்றத்தாழ்வுகள் இருக்கும் வரை நாட்டில் சண்டை சச்சரவுகள் இருந்து கொண்டேதான் இருக்கும். நாட்டை ஒருங்கிணைக்க அனைவருக்கும் பொதுவான சட்டங்கள் இயற்றப்படுவது இன்றியமையாதது.
நண்பர் திரு போக்கர், அரசியலமைப்புச் சட்ட வரைவு மசோதா குழுவுக்கு, தங்களுடைய பணி என்ன என்பது தெரியாமலே இருக்கிறது என்ற குற்றச்சாட்டை முன்வைத்தார். நண்பர் திரு. போக்கர் ஆங்கிலேய ஆட்சியில் என்ன நடந்தது என்பதை தெரிந்து கொள்ளாமலே பேசியிருக்கிறார். முஸ்லிம்களுக்கு அவர்களுடைய திருமணம், விவாகரத்து, வியாபார ஒப்பந்தம், குற்றவியல் நடைமுறை, குற்றத்துக்கான தண்டனை அனைத்தும் ஷரியத்தின்படிதான் இருக்க வேண்டும். ஆனால் ஆங்கிலேயர்கள் இந்தியாவை கைப்பற்றி ஆட்சி செய்தபோது, எல்லோருக்கும் பொதுவான இந்திய தண்டனைச் சட்டத்தை கொண்டுவந்தார்கள். அப்பொழுதெல்லாம் சிறுபான்மை மதத்தைச் சேர்ந்தவர்கள் எந்த ஆட்சேபனையும் செய்யவில்லை. ஆங்கிலேயர்கள் அனைவருக்கும் பொதுவான ஒரு இந்திய ஒப்பந்தச் சட்டம் (Indian Contract Act) கொண்டுவந்தார்கள். அப்போதும் சிறுபான்மையினர் ஆட்சேபனை எதுவும் தெரிவிக்கவில்லை.
வெள்ளைக்காரர்களின் ஆட்சி அங்கிலோ சாக்சன் சட்டவியல்படி நடந்தது, குர்ஆன் படி நடக்கவில்லை. அப்பொழுதெல்லாம் எதிர்ப்பை தெரிவிக்காத சிறுபான்மையினர், இந்தியர்கள் சுதந்தரம் அடைந்து ஆட்சி அதிகாரத்தை எடுத்துக்கொள்ளும் தருவாயில், பொதுவான உரிமையியல் சட்டத்தை பிரகடனப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவிப்பது நியாயம் ஆகாது. ஒவ்வொரு நாட்டிலும் குறிப்பாக ஐரோப்பா கண்டத்தில் ஜெர்மனி, பிரான்சு, இத்தாலி போன்ற நாடுகளில் வெவ்வேறு மதத்தை சார்ந்த மக்கள் வசித்து வருகிறார்கள். அங்கெல்லாம் ஒவ்வொரு சமூகத்தை சேர்ந்தவர்களுக்கும் தனித்தனியே சட்டங்கள் இயற்றப்பட்டு செயல்பட்டா வருகிறது?.
பொது சட்டத்தின் வாயிலாக, ஒரு மதத்தின் கோட்பாடுகளுக்குப் பங்கம் ஏற்படுவதாக சொல்லப்படுவது ஏற்றுக்கொள்ள முடியாது. இஸ்லாத்தில் திருமணம் என்பது ஓர் ஒப்பந்தம். அது குர்ஆன் படியும் மத குருமார்கள் வழிமுறையிலும் நடை பெறவேண்டும். முஸ்லிம் திருமணம் இந்து திருமணம் போல் புனிதச் சடங்கு கிடையாது. எனவே பொது உரிமையியல் சட்டம் கொண்டுவந்தால் அது இஸ்லாம் மதத்துக்கு ஆபத்து என்று சொல்வது தவறு. எந்த நாடாளுமன்றமும், எந்த சட்டசபையும், மத கோட்பாடுகளில் தலையிட முற்படாது. காலத்திற்கேற்ப தங்களை மாற்றிக் கொள்ள பெரும்பான்மையினர் தயாராகயிருக்கிறார்கள். சிறுபான்மையினர் மதங்களிலிருக்கும் நல்ல விஷயங்களை எடுத்துக்கொண்டு தங்களுடைய மதச் சட்டங்களை மாற்றி கொள்ள அவர்கள் தயாராக இருக்கிறார்கள். ஆங்கிலேயர்கள் சட்டங்களை இயற்றி, சமுதாயத்தைச்சீரமைப்பு செய்தனர். நாங்கள் ஒரு படி மேலே சென்று அனைவருக்கும் சீரான சட்டத்தை கொடுக்க விரும்புகிறோம். அந்நியர்கள் நம்மை ஆட்சி செய்யும் பொழுது அவர்களை நம்பிய சிறுபான்மையினர், நம்முடைய நாட்டு மக்களே ஆட்சியை நிர்வகித்து வரும் தருவாயில் ஏன் அவர்களை சந்தேகக் கண்ணோடு பார்க்கவேண்டும்? நம்முடைய முஸ்லிம் சகோதரர்கள் ஆங்கிலேயர்களிடம் வைத்திருக்கும் நம்பிக்கையை, ஏன் அனைத்து மதத்தினரும் சுதந்திரமாக செயல்பட உத்திரவாதமளிக்கும் ஜனநாயக ஆட்சியின்மீது வைக்கக்கூடாது?
(அரசியல் நிர்ணய சபையில் நடைபெற்ற வாதங்கள் – பக்கம் 549, தேதி – 23.11.1948)
இவ்வாறாக தன் வாதத்தை இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் வரைவு மசோதா 35வது ஷரத்துக்கு ஆதரவாக முன்வைத்தார் அல்லாடி கிருஷ்ணசாமி அவர்கள்.
மத பேதமின்றி அனைத்து மக்களும் வேண்டி கேட்டுப் போராடும் லோக்பால் மசோதாவையே நாடாளுமன்றம் இன்னமும் நிறைவேற்றவில்லை. இந்நிலையில், சர்ச்சைக்குரிய பொது உரிமையியல் சட்டத்தையா கொண்டு வந்துவிடப்போகிறார்கள்?
0
S.P. சொக்கலிங்கம்

கருத்துகள் இல்லை: