செவ்வாய், 9 நவம்பர், 2010

Bangladesh.மது தடை, விபச்சாரம் சட்டமயமாக்கப்-பட்டிருக்கிறது

‘‘என்ன பிராண்டிக்கு இவ்வளவு பஞ்சம்... விஸ்கியா சாப்புட வேண்டியிருக்குது'' என்றார் கூட இருந்த ஒரு நண்பர். குரானில் ‘‘மது சாப்பிடுவது பகைமை தரும்.பலனை விட துன்பம் அதிகம் தருவது என்று கூறப்பட்டிருக்கிறது. எனவே தடை'' என்கிறார்கள். மதுவுக்கு இருக்கும் தடை கடுமையாக கடைப்பிடிக்கப்படுகிறது. திருட்டு சாராயம் ரகசியமாக ஊடுருவி விட்டது.கிராமப்புறங்களில் மோலோ அல்லது பங்களா என நாட்டுச் சரக்கு கிடைக்கிறது.கிறிஸ்துவ நிகழ்ச்சிகள், திருமணங்களில் வைன் பயன்படுத்த தடை இல்லை. டாக்கா நகர் முழுக்க லட்சக் கணக்கான ஆள் மிதிக்கும் ரிக்ஷாக்கள் நிரம்பி வழிகின்றன. டாக்கா நகரத்தில் ரிக்ஷாக்களையும், வெளிநாட்டு கார்களின் நெரிசலையும் மீறி 10 கி.மீ. கடக்க 2 மணி நேரமாகிவிடுகிறது. ஒரு ரிக்ஷாக்காரன் சொன்னது'' ஸ்வந்த்வேஷ்.... நல்ல செய்தி... காரோ என்ற எங்க ஆதிவாசிகள் பயன்படுத்தும் கிராம மது இங்கே எனக்குக் கிடைத்து விடுகிறது.''




அயோத்தி பாபர் மசூதி தீர்ப்பு வெளியான அன்று பரபரப்பாக இருந்தது. அன்றைக்குத்தான் டாக்காவின் பிரபல்யமான டாக்கீஸ்வரி கோவிலுக்கு நாங்கள் செல்வதற்கு ஏற்பாடாகியிருந்தது.உலகம் முழுவதும் இருந்து வந்து இந்துக்கள் வழிபடும் கோவில் அது. ஊர் பெயருடன் சேர்த்து அந்த அம்மன் பெயர் வழங்கப்படுகிறது.

‘‘டாக்கீஸ்வரி'' டாக்காவின் ஈஸ்வரி. 1971-ல் ரமண காளி கோவில் ஒன்று பிரசித்தியாக இருந்ததை வங்கதேச விடுதலைப் போரில் பாக்கிஸ்தான் ராணுவம் முழுமையாக அழித்தபின்பு, இந்துக்களின் மிகப் பெரிய, முக்கியமான கோவிலாகியது டாக்கீஸ்வரி அம்மன். 1971-ல் பாக்கிஸ்தான் படையால் இக்கோவிலும் சிதைக்கப்பட்டது.முக்கிய பாகங்களில் ராணுவத் தளவாடங்களை நிறுத்தவும்,ஆயுத சேமிப்புக் கிடங்குக்காகவும் பயன்படுத்தப்பட்டன. தலைமை பூசாரி உட்பட பலர் கொல்லப்பட்டனர். ஆனால் 800 வருட பழமையான ஈஸ்வரி அம்மன் சிலை காப்பாற்றப்பட்டது.11-ம் நூற்றாண்டில் பலால் சென் என்ற அரசனால் கட்டப்பட்ட பழமையானது.1988-ல் இஸ்லாமிய நாடாக அறிவிக்கப்பட்ட பின்பு,டாக்கீஸ்வரி கோயிலின் முன்பு பாக்கிஸ்தான் கொடி ஏற்றப்படுவதும்,சம்பிரதாயங்களும் கடைப்பிடிக்கப்படுகின்றன. ஈஸ்வரி தேவியின் கழுத்திலிருந்து விழுந்த நகையால் இக்கோவில் பிரசித்தி பெற்றதாகக் கதை உண்டு.

மதுவை தடை செய்திருக்கும் நாட்டில் விபச்சாரம் சட்டமயமாக்கப்-பட்டிருக்கிறது. அங்கீகாரம் பெற்ற 20 ரெட்லைட் ஏரியாக்கள் டாக்காவில் உள்ளன.குழந்தைகளை விபச்சாரத்தில் ஈடுபடுத்துவதும் உள்ளது.12 வயதில் பின்னலாடைத் தொழிலுக்காக பர்குனா மாவட்டத்திலிருந்து டாக்கா வந்த ஒரு பெண் கற்பழிக்கப்பட்டு,ஓட்டல் ஒன்றில் சேர்க்கப்பட்டு, பின் விபச்சார விடுதியில் தள்ளப்பட்டதை ஒரு விவரணப்படத்தில் பார்த்தேன். அவள் சரீபா: சரீபாவைப் போல 30,000 குழந்தைகள் தொழிலில் தள்ளப்பட்டிருக்கிறார்கள்.வங்கதேச அரசியல் சட்டம் சூதாட்டமும்,மது அருந்துவதும் பெரும் குற்றங்கள் என்கிறது. டாக்காவில் ரமணா பூங்காடி டாக்கா பல்கலைக்கழகத்தை ஒட்டியிருக்கும் திறந்தவெளி பூங்காக்களில் ஒன்றாகும்.இங்கு சாலையோரங்களில் விலைமகளிர் நின்று கொண்டிருப்பது தினமும் தென்படுவது. ஏழைப் பெண்களும், நகர சேரிப் பெண்களும் இதில் அதிகம். கர்ப்பமான பெண்களுடன் உறவு கொள்வதில் இருக்கும். சுவாரஸ்யம் பற்றி ஒருவன் சொன்னதாக ஒரு பெண் பத்திரிகையாளர் சொன்னது. ‘‘முட்டைகளோடு இருக்கிற மீன் ருசி அதிகம். அது மாதிரி. கர்ப்பமான பெண்களுடன் உறவு கொள்வது சுவாரஸ்யமானது.’’ இஸீஸ் மற்றும் சீத்தல் மீன் வகைகள் டாக்காவில் கிடைக்கும் ஆற்று மீன் வகைகள் ஈலிஸா, ஈலிகா, ஹில்ஸா என்றும் பெயருண்டு. இப்பெயர்களில் பெண்களும் இருக்கிறார்கள்.

ஷேக் முஜிபுர் ரகுமானின் மகள் ஷேக்கசீனா இப்போது பிரதமர். பங்களாதேஷ் அவாமி லீக் கட்சி தேர்தலில் வெற்றி பெற்று இரண்டாம் முறையாகப் பிரதமர் ஆகியிருக்கிறார். அவாமி லீக் இடதுசாரிகளையும், மதச் சார்பற்றவர்களையும் கூட்டணி கொண்டது. பங்களாதேஷ் தேசிய கட்சி பிரதானக்கட்சி.இது இஸ்லாமியக் கட்சிகளுடன் கூட்டு வைத்திருக்கிறது.இந்த இரண்டு கட்சிகளும் மாறி மாறி ஆட்சிக்கு வருகின்றன.தொழிற்சங்க வாதிகளுக்கு அடக்குமுறையும், சிறையும் சுலபமாக ஷேக்கசினா ஆட்சியில் கிடைத்து விடுகிறது. 30 லட்சம் பனியன் தொழிலாளர்கள் உள்ள ஊரில் தினசரி சம்பளம் ரூ.52தான். (டாக்கா). வெகுகுறைவு. இரண்டு மாதம் முன் 15,000 பனியன் தொழிலாளர்கள் நடத்திய போராட்டத்தில் போலீசாருடன் நடந்த சண்டையில் பலத்த சேதம் தொழிலாளர்களுக்கு. 12 வயது முதல் குழந்தைத் தொழிலாளியாக இருந்து பின் படித்து முன்னேறிய 30 வயது கல்பனயா என்ற தொழிற்சங்கத் தலைவரைச் சந்தித்தோம். ‘‘5000 டாக்கா கேட்டோம். 3000 கொடுக்கலாம். இப்போது 1663 டாக்காதான். 5000 கொடுத்தால் எல்லா பனியன் கம்பனிகளையும் மூட வேண்டியதுதான் என்கிறார்கள்.முதலாளிகள் லாபத்தைக் குறைத்துக் கொள்வதை விரும்புவதில்லை’’ என்றார்.

போலீசுக்கு மரியாதை இல்லை.மாமா என்று கேலி சித்திரிப்புதான். நிறைய லஞ்சம் வாங்குவதால் அப்படி கேலி மரியாதை. ஊழல் மலிந்த நாடு.டாக்கா விமான நிலையத்தை விட்டு இந்தியா வரும்போது தொழிற்சங்கத் தலைவர் டாக்கா பண நோட்டுகள் வைத்திருந்ததைப் பிடுங்கிக் கொண்டார்கள். 1000 டாக்கா லஞ்சம் கொடுத்தபின் டாக்கா விமான நிலைய அதிகாரிகள் அவரை விடுவித்து விட்டனர். டாக்காவை இந்தியப் பணமாக மாற்ற 50% கழிவு போட்டு மீதியைத்தான் தந்தார்கள்: ‘‘கல்கத்தா ஏர்போர்ட்ல போயி எறங்குனா இது செல்லாத நோட்டு. கிழிச்சுதா போடணும். எங்கிட்ட குடுத்தா 50 ரூபாயாச்சும் பாதி கெடைக்கும்..’’ வேறு வழியில்லாமல் நாங்கள் எல்லோரும் கையில் இருந்த டாக்கா பணத்தைக் கொடுத்துவிட்டு பாதிப் பணமே வாங்கிக் கொண்டு கிளம்பினோம்.

டாக்காவின் சினிமா உலகின் பெயர் ‘‘டாலிவுட்’’ நம்ம ஊர் கோலிவுட், பாலிவுட் போல வருடத்திற்கு 100 படங்கள் வெளிவந்த காலம் உண்டு. இப்போது சுருங்கி விட்டது.இந்தித் திரைப்படங்கள் திரையிட அங்கு தடை.திருட்டு டிவிடி இந்திப்படங்கள்,பாடல்கள் சுலபமாகக் கிடைக்கின்றன. பலர் எங்களிடம் கெஞ்சிக் கேட்டுக் கொண்டது. ‘‘தயவு செய்து பங்களா தேஷ் படங்களுக்குப் போய் விடாதீர்கள்’’.சுவர் ஷிங்குகளின் ஆதிக்கம்தான் அதிகம். ‘‘கபர்தார்’’.

எழுத்தாளர்கள் டாக்காவை பிசாசு நகரம் என்கிறார்கள்.தஸ்லீமா நஸ்ரின் பாபர்மசூதி இடிக்கப்பட்ட போது டாக்காவில் இந்துக் கோவில்கள் இடிக்கப்பட்டதையும், இந்துக்கள் துன்புறுத்தப்பட்டதையும் பற்றி ‘‘லஜ்ஜா’’ நாவல் எழுதிய காரணத்தால் பத்வா தண்டனை விதிக்கப்பட்டது. ஜெர்மன், ஸ்வீடன்,இந்தியா என்று தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கிறார். அவரும் இதை ‘‘சாத்தான் சிட்டி’’ என்கிறார். தினமும் 8 மணி நேரம் மின்சார விநியோகம் இல்லாத தலைநகரம். இருளில் டாக்டா பெரிய பூதமாக பயமுறுத்துகிறது. தலைநகரம் டாக்காவில் 8 மணி நேர மின்சார வெட்டு என்றால் பிற நகரங்களிலும், கிராமங்களிலும் கேட்கவே வேண்டாம். இருட்டு சாத்தான் நிரந்தரப் பிடியில் வைத்திருப்பான். அந்நியச் செலாவணி அதிகம் தரும் பனியன் தொழிலே இதன் பிரகாசம்.

கருத்துகள் இல்லை: