வெள்ளி, 12 நவம்பர், 2010

யாழ். நாவற்குழியில் அத்துமீறிய சிங்கள குடியேற்றம் குறித்து ஈ.பி.டி.பி. யினர் ஜனாதிபதியுடன் சந்திப்பு

தென்னிலங்கையில் இருந்து வந்த சிங்கள மக்கள் திடீரென எந்தவித அனுமதியும் இன்றி நாவற்குழியில் அத்துமீறி குடிசைகள் அமைத்துக் குடியேறியிருப்பது குறித்து  ஈ.பி.டி.பி. கட்சி ஜனாதிபதியைச் சந்தித்து  பேச்சு நடாத்தியுள்ளது.
அது குறித்துத் தான் விசாரித்த பின்னர் உரிய நடவடிக்கை எடுப்பார் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
இந்தச் சந்திப்பில்  ஈ.பி.டி.பி. கட்சியின் தலைவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, குழுக்களின் பிரதித் தலைவர் சந்திரகுமார் உட்படக் கட்சிப் பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர்.
ஜனாதிபதியுடனான தமது கட்சியின் சந்திப்புக் குறித்து ஈ.பி.டி.பி. கட்சி நேற்றிரவு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
இச் சந்திப்பில் பிரதான விடயமாக, தேசிய வீடமைப்பு அதிகார சபைக்குச் சொந்தமான நாவற்குழி நிலத்தில் தென்னிலங்கை மக்கள் சட்ட விரோதமான முறையில் குடியேறியிருக்கும் விடயம் ஜனாதிபதியின் கவனத்திற்குக் கொண்டு வரப்பட்டது.
எந்த மக்கள் சமூகமாக இருப்பினும் அவர்கள் விரும்பிய பிரதேசங்களில் வாழ்வதற்குரிய ஜனநாயக உரிமைக்குத் தாம் மாறானவர்கள் இல்லை என்றும் ஆனாலும் இனங்களுக்கிடையிலான மனக்கசப்புகளை உருவாக்கும் வகையிலான சட்டவிரோதக் குடியேற்றங்கள் இன ஐக்கியத்திற்கு விரோதமான ஒரு நடவடிக்கையாகும் என்றும் ஈ.பி.டி.பி தரப்பால் ஜனாதிபதியிடம் சுட்டிக் காட்டப்பட்டது.
நாவற்குழியில் குடியேறியிருக்கும் தென்னிலங்கை மக்களை ஏற்கனவே சந்தித்திருந்த பாரம்பரிய சிறு கைத்தொழில் அமைச்சர், சிங்கள மக்களின் பிரச்சினை குறித்து ஆராய்ந்து தீர்மானம் எடுப்பதற்குத் தனக்கு 3 மாத கால அவகாசம் தேவை என ஏற்கனவே தெரிவித்திருந்தார் என்பதும் ஜனாதிபதிக்கு ஞாபகப்படுத்தப்பட்டது
அந்த மக்கள் யாழ். குடாநாட்டில் சொந்த இருப்பிடங்களில் வாழ்ந்தார்கள் என்பதற்கான ஆவணங்கள் அவர்களிடம் இல்லை என்றும் அவர்களில் சிலர் வாடகை வீடுகளில் மட்டுமே முன்னொரு காலத்தில் யாழ்ப்பாணத்தில் வசித்திருக்கிறார்கள் என்பதும் அங்கு சுட்டிக்காட்டப்பட்டது.
யாழ். மாவட்டத்தில் பாரம்பரியமாக வாழும் மக்களில் பலர் சொந்த நிலம் இல்லாத நிலையில் தென்னிலங்கையில் இருந்து வந்திருந்த மக்கள் சட்ட விரோதமாக நாவற்குழி நிலத்தில் குடியேறியிருப்பது யாழ். மாவட்ட மக்கள் மத்தியில் கசப்புணர்வுகளையே உருவாக்கும் எனவும் ஜனாதிபதியிடம் எடுத்துரைக்கப்பட்டது.
இது குறித்து கருத்து தெரிவித்தித்த ஜனாதிபதி, அரசுக்குச் சங்கடத்தை உருவாக்கும் வகையிலான இதுபோன்ற செயல்களைச் சிலர் திட்டமிட்டுத் தூண்டி விட்டிருக்கலாம் என்று தெரிவித்தார்.
அத்துடன் ஈ.பி.டி.பி. தரப்பில் இருந்து எடுத்து விளக்கப்பட்ட நியாயங்களைத் தான் புரிந்து கொள்வதோடு இது குறித்து ஆலோசித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை: