வியாழன், 11 நவம்பர், 2010

அதிமுக ஆதரவா..அது எதுக்கு?: ஜெயலலிதாவை 'வெறுப்படித்த' காங்!

டெல்லி: மத்திய அரசுக்கு நிபந்தையற்ற ஆதரவு வழங்கத் தயார் என்ற அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவின் அறிவிப்பை காங்கிரஸ் உடனடியாக நிராகரித்துவிட்டது.

தமிழகத்தில் இப்போதைக்கு திமுக தான் எங்கள் கூட்டணிக் கட்சி என்று காங்கிரஸ் தெரிவி்ததுள்ளது.

ஜெயலலிதாவின் திடீர் காங்கிரஸ் பாசம் குறித்து காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ஜனார்தன் திவிவேதி கூறுகையில், ஜெயலலிதா ஆதரவு தருவதாக சொல்லியிருப்பதாக எங்கள் காதுக்கும் தகவல் வந்தது. தமிழ்நாட்டில் இப்போதைக்கு திமுக தான் எங்கள் கூட்டணிக் கட்சி. ஜெயலலிதா சொல்லியிருப்பதெல்லாம் அவரது சொந்த கருத்துக்கள் (''her own feelings'') என்றார்.

ஜெயலலிதாவின் பேட்டி குறித்து தமிழக காங்கிரஸ் மேலிட பார்வையாளரும், மத்திய அமைச்சருமான குலாம் நபி ஆசாத் கூறுகையில்,

எங்கள் கூட்டணியில் எங்கே இடமிருக்கிறது (''Where is vacancy in our alliance?''). காங்கிரஸ் கட்சி திமுகவுடன் கூட்டணி வைத்துள்ளதற்கும், மத்திய அமைச்சர் ஆ.ராசா மீது எழுப்பப்படும் குற்றச்சாட்டுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை. இவை இரண்டும் வெவ்வேறு விஷயங்கள் என்றார்.

ஜெயலலிதாவின் ஆதரவை ஏற்க காங்கிரஸ் மறுத்துவிட்டது, அக் கட்சியினரை சோர்வடைய வைத்துள்ளது.

மேலும் காங்கிரசுக்கு எதிராக அரசியல் நடத்தி வரும் மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் ஜெயலலிதாவின் இந்த அறிவிப்பால் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளன.

குறிப்பாத ஜெயலலிதாவை நம்பி அதிமுக கூட்டணியில் நீடித்து வரும் மதிமுகவுக்கு இது மாபெரும் அதிர்ச்சியை அளித்துள்ளது.

ஜெயலலிதாவிடம் காங்கிரஸ் பலமுறை சூடு கண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஒரு தேர்தலில் காங்கிரசுடன் கூட்டணி அமைத்துவிட்டு, சோனியா காந்தியுடன் தான் பங்கேற்க இருந்த பொதுக் கூட்டத்தில் கடைசி நேரத்தில் கலந்து கொள்ளாமல் அவரை கேவலப்படுத்தினார் ஜெயலலிதா என்பது நினைவுகூறத்தக்கது.

கருத்துகள் இல்லை: