வெள்ளி, 21 ஜனவரி, 2022

பிரியங்கா காந்தி உத்தர பிரதேச முதல்வர் வேட்பாளர்? வேறு யார் முகமாவது தெரிகிறதா என கேட்டார்

 தினமலர் : புதுடில்லி: உ.பி.,யில் முதல்வர் வேட்பாளரா களமிறங்குவீர்களா என்ற கேள்விக்கு பதிலளித்த காங்., பொதுச்செயலர் பிரியங்கா, அங்கு எல்லா இடங்களிலும் எனது முகத்தை தான் பார்க்கிறீர்கள். காங்கிரசின் வேறு யாருடைய முகத்தையாவது பார்க்கிறீர்களா எனக்கூறினார்.
ஆனால், முதல்வர் வேட்பாளராக களமிறங்குவது குறித்து உறுதியாக எந்த பதிலையும் தர மறுத்துவிட்டார்.
உ.பி., சட்டசபை தேர்தலை முன்னிட்டு, இளைஞர்களுக்கான தேர்தல் அறிக்கையை காங்கிரஸ் வெளியிட்டுள்ளது.
அந்த அறிக்கையில், ஸ்டார்ட் அப் நிதியாக ரூ.5000 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். போலீஸ் துறையில் ஒரு லட்சம் காலியிடங்கள் நிரப்பப்படும்.


1.5 லட்சம் ஆசிரியர்கள் நியமனம் செய்யப்படுவார்கள் உள்ளிட்ட அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.
இதனை ராகுல் மற்றும் பிரியங்கா இணைந்து வெளியிட்டனர்.
பின்னர் ராகுல் கூறுகையில், இந்த அறிக்கை வெற்று வார்த்தை கிடையாது.
இளைஞர்களுடன் ஆலோசித்து அவர்களின் கருத்து இடம்பெறும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது. உ.பி., இளைஞர்களுக்கு புதிய கொள்கைதேவைப்படுகிறது.
அந்த மாநிலத்திற்கு புதிய கொள்கையை காங்கிரசால் மட்டுமே தர முடியம். நாங்கள் மக்களை பிரிக்கவில்லை. ஒற்றுமை படுத்துகிறோம். இளைஞர்களின் பலத்தை கொண்டு புதிய உ.பி.,யை உருவாக்குவோம் எனக்கூறினார்.

பிரியங்கா கூறுகையில், மாநிலத்தின் மிகப்பெரிய பிரச்னையாக வேலைவாய்ப்பின்மை உள்ளது. இதனால், இளைஞர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். வளர்ச்சியில் கவனம் செலுத்த மட்டுமே காங்கிரஸ் விரும்புகிறது. ஜாதி மற்றும் மதம் அடிப்படையில் எதிர்மறையான பொய் பிரசாரத்தை பரப்ப காங்கிரஸ் விரும்பவில்லை என்றார்.

தொடர்ந்து பிரியங்காவிடம் நிருபர்கள், உ.பி.,யில் முதல்வர் வேட்பாளராக களம் இறங்குவீர்களா என கேள்வி எழுப்பினர்.

latest tamil news



இதற்கு பதிலளித்த பிரியங்கா, காங்கிரஸ் சார்பில் வேறு யாரேனும் முகத்தை நீங்கள் பார்க்கிறீர்களா? அனைத்து இடத்திலும் எனது முகத்தை தான் பார்க்கிறீர்கள். சட்டசபை தேர்தலில் களமிறங்குவது குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை. முடிவு செய்த பின்னர் வெளிப்படையாக அறிவிப்பேன். இவ்வாறு அவர் கூறினார்.

கருத்துகள் இல்லை: