சனி, 22 ஜனவரி, 2022

இலங்கை பறிமுதல் செய்த தமிழக படகுகளுக்கு நிவாரணம்!

 மின்னம்பலம் : இலங்கை அரசால் பறிமுதல் செய்யப்பட்ட தமிழகத்தைச் சேர்ந்த படகுகளுக்கு முதல்வர் ஸ்டாலின் நிவாரணம் அறிவித்துள்ளார்.
இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவது என்பது தொடர் கதையாகி வருகிறது. கைது செய்யப்படும் தமிழக மீனவர்கள் விடுவிக்கப்பட்டாலும் அவர்களது படகுகள் ஒப்படைக்கப்படுவதில்லை. இதனால் தமிழக மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது.
இந்த சூழலில் முதல்வர் ஸ்டாலின் தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த மீனவர் சங்க பிரதிநிதிகளிடம் கடந்த 20ஆம் தேதி அவர்களது கோரிக்கைகளை கேட்டறிந்தார்.

இந்நிலையில் இலங்கை அரசினால் பறிமுதல் செய்யப்பட்டு தற்போது இலங்கையில் பயன்படுத்த முடியாத நிலையில் இருக்கும் தமிழகத்தைச் சேர்ந்த 125 படகுகளின் உரிமையாளர்களுக்கு நிவாரணம் அறிவித்துள்ளார்.

இதில் 108 விசைப்படகுகளுக்கு 5 லட்சம் ரூபாயும், 17 நாட்டுப் படகுகளுக்கு 1.50 லட்சம் ரூபாயும் என மொத்தம் 5.66 கோடி வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

கடந்த வடகிழக்கு பருவமழை காலத்தில் சேதமடைந்த 105 மீன்பிடி படகுகள் மற்றும் மீன்பிடி உபகரணங்கள் இழப்பீடாக 5.66 கோடி ரூபாய் வழங்கப்படும். இலங்கை சிறையில் வாடும் தமிழக மீனவர்களை விடுதலை செய்ய மத்திய அரசுக்குக் கடிதம் வாயிலாகவும் தொலைபேசி வாயிலாகவும் தமிழக அரசு அழுத்தம் கொடுத்து வருகிறது. இதுதொடர்பாக திமுக எம்.பி.கனிமொழியும் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சரைச் சந்தித்து வலியுறுத்தினார் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

-பிரியா


கருத்துகள் இல்லை: