புதன், 19 ஜனவரி, 2022

விஜயலட்சுமி தற்கொலை முயற்சி வழக்கு: ஹரிநாடார் கைது!

 மின்னம்பலம் :  நடிகை விஜயலட்சுமி தற்கொலை முயற்சி வழக்கில் ஹரி நாடார் கைது செய்யப்பட்டுள்ளார்.
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தன்னை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி ஏமாற்றி விட்டதாக நடிகை விஜயலட்சுமி 2020ஆம் ஆண்டு வீடியோ ஒன்றை வெளியிட்டார்.
இந்த விவகாரம் அப்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் பனங்காட்டுப் படை கட்சித் தலைவர் ஹரி நாடார் விஜயலட்சுமியைக் கண்டிக்கும் விதமாக வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார்.


அதைத் தொடர்ந்து விஜயலட்சுமி தற்கொலைக்கு முயன்று மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். தொடர்ந்து விஜயலட்சுமி திருவான்மியூர் போலீசில் சீமான், ஹரிநாடார் உள்ளிட்டோர் மீது புகார் கொடுத்திருந்தார்.
இந்த புகாரின் பேரில் கொலை மிரட்டல், பெண்ணை அவமதித்தல், தகவல் தொழில் நுட்பத்தைத் தவறாகப் பயன்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர்.

இதற்கிடையே கடன் வாங்கி தருவதாகப் பெங்களூருவைச் சேர்ந்த வெங்கட்ராமன் என்பவரிடம் மோசடி செய்ததாகக் கைது செய்யப்பட்டு ஹரிநாடார் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரை விஜயலட்சுமி கொடுத்த புகாரில் இன்று போலீசார் கைது செய்துள்ளனர்.

அவரை தமிழகம் அழைத்து வந்து சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்த நடவடிக்கை எடுத்து வருவதாக போலீஸ் வட்டாரங்கள் கூறுகின்றன.

-பிரியா


கருத்துகள் இல்லை: