வியாழன், 4 மார்ச், 2021

வைகோ கேட்பதும் ஸ்டாலின் கொடுக்க விரும்புவதும் !

வைகோ கேட்பதும் ஸ்டாலின் கொடுக்க விரும்புவதும் !

minnambalam :திமுக கூட்டணியில் முஸ்லீம் லீக், மனித நேய மக்கள் கட்சி ஆகிய 2 இஸ்லாமியக் கட்சிகளுக்கு மட்டுமே தொகுதிப்பங்கீடு முடிவாகி கையெழுத்தாகியுள்ளது. காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள், விடுதலைச் சிறுத்தைகள், மதிமுக என பிற கட்சிகளுடன் பேச்சுவார்த்தை போய்க்கொண்டேயிருக்கிறது. கடந்த சட்டமன்றத் தேர்தலில், காங்கிரசுக்கு அள்ளிக்கொடுத்த திமுக, அதில் ஏற்பட்ட அனுபவத்தின் காரணமாக இந்தத் தேர்தலில் கிள்ளிக்கொடுக்கும் முடிவில் உறுதியாக இருக்கிறது.

அதேபோல 2016 ஆம் ஆண்டில் திமுக ஆட்சி கைநழுவிப் போகக் காரணமாக இருந்த மக்கள் நலக்கூட்டணியில் இருந்த கட்சிகளுக்கும் கேட்பதில் பாதி சீட்டைத்தான் கொடுப்பது என்பதிலும் திட்டவட்டமாக இருப்பதாகத் தகவல்கள் வெளியாகின்றன. ஆனால் அதிமுக–பாரதிய ஜனதாவுக்கு எதிரான கொள்கைக் கூட்டணி என்று வர்ணிக்கபடுவதாலும், பாராளுமன்றத் தேர்தலில் பிரமாண்ட வெற்றியைப் பெற்ற கூட்டணி என்பதாலும் இதிலிருந்து எந்தக் கட்சியும் வெளியே போகாது என்றும் நம்பப்படுகிறது.

எந்தச் சூழ்நிலையிலும் திமுக கூட்டணியை விட்டு வெளியே போவதில்லை என்று மதிமுக தலைவர் வைகோ ஏற்கெனவே அறிவித்துள்ளார். ஆனால் தன்னைவிட அரசியலில் ஜூனியர்களுக்கு அதிக எண்ணிக்கையிலான சீட்டுகள் ஒதுக்குவது அவரை ஆவேசத்துக்குள்ளாக்கி இருப்பதாக மதிமுக நிர்வாகிகள் கொந்தளிக்கத் துவங்கியுள்ளனர்.

திமுக கூட்டணியில் விடுதலைச்சிறுத்தைகளுக்கு 6 சீட் ஒதுக்கி ஒப்பந்தம் விரைவில் கையெழுத்தாக உள்ளது. மதிமுகவுக்கு நான்கு சீட்டுகள் மட்டும்தான் என்று திமுக தரப்பில் உறுதியாகக் கூறப்பட்டு வருகிறது. ஆனால் 6 சீட்கள் தரவேண்டுமென்பதில் வைகோவும் உறுதியாக இருப்பதாகத் தெரியவந்துள்ளது. பேச்சுவார்த்தையில் இழுபறியாவதற்கு இதுவே காரணமாகியுள்ளது. இருப்பினும் திமுக கூட்டணியை விட்டு வெளியே போகுமளவுக்கு உணர்ச்சிப்பூர்வமாக வைகோ இந்த முறை முடிவெடுக்க மாட்டார் என்று மதிமுக நிர்வாகிகள் நம்புகின்றனர்.

இன்று மாலைக்குள் ஏதாவது ஒரு முடிவு தெரிந்துவிடுவதற்கு வாய்ப்பு அதிகமுள்ளது.

பாலா

 

கருத்துகள் இல்லை: