வியாழன், 13 பிப்ரவரி, 2020

ஆம் ஆத்மி .. பாஜகவின் பி டீம்? அனுமான் கருணையால் வென்றோம் அர்விந்த் கேஜ்ரிவால்

Jeeva Sagapthan : வென்றது ஆம்ஆத்மி, தோற்றது காங்கிரஸ், தடுக்கப்பட்டது பாஜகவின் வெற்றி.
டில்லி சட்டமன்ற தேர்தலில் ஆம் ஆத்மி பெற்ற வெற்றி என்பது கண்கூடாகத் தெரிகிறது. ஆனால், இந்த பிரம்மாண்ட வெற்றியில் , நாம் கவனிக்க வேண்டிய நுட்பமாக அம்சங்கள் இருக்கின்றன. .
ஆம் ஆத்மி கட்சி தொடங்குவதற்கு முன்பு பாஜகவின் வாக்கு விழுக்காடு 36.3.ஏழு ஆண்டுகள் கழித்து தற்போது பாஜகவின் வாக்கு விழுக்காடு 38.4. ஆம் ஆத்மி தொடங்கிய பிறகு, கட்சி அளவில் பாஜகவிற்கு எந்த பின்னடைவும் இல்லை. இரண்டு விழுக்காடு வாக்கு அதிகரித்திருக்கிறது.
ஆம் ஆத்மி தொடங்குவதற்கு முன்பு காங்கிரஸ் கட்சியின் வாக்கு விழுக்காடு 48.1. ஆம் ஆத்மி தொடங்கி ஏழாண்டுகள் கழித்து, காங்கிரஸ் கட்சி வெறும் 4 விழுக்காடாக சுருங்கி விட்டது.
ஆம் ஆத்மிக்கு சிறுபான்மையினரின் ஆதரவு முழுமையாக கிடைத்திருக்கிறது. அதே சமயம் காங்கிரசுக்கு கிடைத்து வந்த இந்துக்களின் வாக்குகளையும் முழுமையாக எடுத்துக் கொண்டது. அந்த இந்துக்கள் யாரென்றால், சிறுபான்மை ஆதரவு மனநிலையில்லாமல், அதே சமயம் பாஜகவிற்கும் வாக்களிக்க மனமில்லாதவர்கள். அதாவது ஊழல் ஒழிப்பு என்ற மனநிலையில் வாக்களித்தவர்கள்.

கெஜ்ரிவாலுக்கு வாக்களித்த இந்துக்கள் யாரென்றால், குடியுரிமை பாதுகாப்புச் சட்டத்தால் யாருக்கும் பாதிப்பில்லை, காஷ்மீரில் பிரிவு 370 சட்டம் நீக்கப்பட்டது நல்லதுதான் என்று நினைப்பவர்கள். கெஜ்ரிவாலும் அப்படித்தான். ஊழல் ஒழிப்பு குறித்து அதிகம் பேசுவார். டில்லியில் தனக்கு அதிகாரம் வேண்டும். ஆளுநரின் அதிகாரம் குறைய வேண்டும் என்று தெருவிற்கு வந்து போராடுவார். ஆனால், பாஜக அரசில் பெரும் விமர்சனங்களாக எதிர்கட்சிகளால் பேசப்பட்ட காஷ்மீர் அதிகாரம் ரத்து, ராமர் கோவில்,மாணவர்கள் தாக்குதல் சம்பவம் போன்ற விசயங்களில் அரவிந்த் கெஜ்ரிவால் மௌனம் காத்தார் என்பது வரலாறு. ஏனென்றால் ,டில்லிவாசிகளும் கெஜ்ரிவாலைப் போல் கருத்தியல் பேசாத முதலமைச்சரை விரும்புகிறார்கள்.
ஆகவே, இந்துத்துவ எதிர்ப்பு, சிறுபான்மை ஆதரவை பேசும் காங்கிரஸ் கட்சியை டில்லி வாசிகள் விரும்பவில்லை . சிறுபான்மையினரும் காங்கிரசை வலிமையான கட்சியாக பார்க்கவில்லை.எனவே சிறுபான்மை மக்களும் கெஜ்ரிவாலுக்கு வாக்களித்தனர்.
கெஜ்ரிவாலின் அடையாளம் பாஜக என்ற கட்சி எதிர்ப்புதான். இந்துத்துவ எதிர்ப்பெல்லாம் அவருக்கு கிடையாது. டில்லி மக்களிடமும் இந்துத்துவ எதிர்ப்புணர்வு கிடையாது. பாஜக என்ற கட்சியைத்தான் எதிர்க்கிறார்கள். பாஜகவா, காங்கிரசா ? என்றால் டில்லிவாசிகளின் தேர்வு பாஜகதான். அதைதான் கடந்த மக்களவைத் தேர்தலில் பார்த்தோம்.
இந்த தேர்தல் முடிவு இரண்டு செய்திகளை உணர்த்துகிறது. ஒன்று காங்கிரசை கெஜ்ரிவால் வீழ்த்திவிட்டார். பாஜக என்ற கட்சியின் வெற்றியை தடுத்துவிட்டார்.
ஊழல் ஒழிப்பு , வளர்ச்சி என்ற காரணிகளை மட்டுமே முன் வைக்கும் தலைவர்கள் வலது தன்மையுடையவர்கள் என்று நான் சொல்லவில்லை. ஆனால், ஒரு போதும் அவர்கள் வலதுசாரி சிந்தனைக்கு எதிரானவர்கள் அல்ல.
கெஜ்ரிவால் மொழியில் சொல்லவேண்டுமானால், எல்லாம் அந்த அனுமனுடைய அனுக்கிரகம்தான் !

கருத்துகள் இல்லை: