புதன், 27 பிப்ரவரி, 2019

கமலின் கூட்டணி அழைப்பு நிராகரிப்பு ! மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தகவல்

தினகரன்:சிதம்பரம்: நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட முடிவு செய்துள்ளது. இந்நிலையில் மக்கள் நீதி மய்யம் தலைவர்  கமல்ஹாசன் டெல்லியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொலிட்பிரோ உறுப்பினர் பிரகாஷ் காரத்தை சந்தித்தப்போது நடந்தது என்ன? என்பது குறித்து மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் விளக்கமளித்துள்ளார். அந்த வகையில் கூட்டணிக்கு அழைப்பு விடுத்த மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசனின் கோரிக்கையை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிராகரித்துள்ளது. சிதம்பரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் இத்தகவலை தெரிவித்துள்ளார்.
 டெல்லியில் கட்சியின் தலைமைக்குழு உறுப்பினரை மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் சந்தித்து கூட்டணிக்காக அழைப்பு விடுத்ததாக கூறியுள்ளார். ஆனால் கமலின் அழைப்பை பிரகாஷ் கரத் நிராகரித்துவிட்டதாக பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

கமலிடம் இது பற்றி பேசிய பிரகாஷ் கரத்,  இந்தியாவில் பாஜகவை வீழ்த்த ஒவ்வொரு மாநிலத்திலும் வலுவான அணியை அமைத்து வருகிறோம். அந்த வகையில் தமிழகத்தில் ஏற்பட்டுள்ள அதிமுக - பாஜக கூட்டணியை வீழ்த்த திமுகவுடன் தொகுதி உடன்பாடு செய்வது என்று ஏற்கெனவே முடிவெடுத்து விட்டோம். இதற்கான ஒப்புதலை டிசம்பர் மாதமே தமிழகத்திற்கு கொடுத்துவிட்டோம். இப்போது தொகுதி பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. எனவே தேர்தல் குறித்து விவாதிப்பதற்கு வாய்ப்பில்லை. எதிர்காலத்திலும் தொடர்ந்து நண்பர்களாக இருப்போம் என்று பிரகாஷ் கரத், கமலிடம் கூறிவிட்டதாக பாலகிருஷ்ணன் குறிப்பிட்டார்.

கருத்துகள் இல்லை: